Pages

Wednesday, November 29, 2023

வேதாந்தம் - பகுதி 2




வேதம், இந்துக்களின் புனித நூல் என்று நமக்கு தெரியும்.  இந்து மதத்தில்,பலவகையான புத்தகங்கள் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் முதன்மையானது, மையமானது, சிறப்பானது வேதம் ஆகும். வேதம் என்றால் அறிவு என்று பொருள்.   அது ஆகாயத்திலிருந்தெல்லாம் வந்து குதித்து விடவில்லை.  எப்படி அறிவியலறிஞர்கள்  உலகில் தாம் கண்டறிந்த உண்மைகளை விட்டுச் சென்றார்களோ அப்படி, தங்கள்  உள்ளத்தில் அறிந்த உண்மைகளை ஞானிகளும், ரிஷிகளும் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.  ஒருவர் இருவர் அல்ல, பல பேர், பல கால கட்டங்களில் வாழ்ந்தவர்கள் தாங்கள் உணர்ந்ததை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.  அவர்கள் தங்கள் பெயர்களைக் கூட குறிப்பிடவில்லை.  

வேதத்தில் இரண்டு பகுதிகள் உண்டு - முதல் பகுதி கர்ம காண்டம், கடைசிப் பகுதி  ஞான காண்டம். 

கர்மகாண்டம் என்றால் செயல்முறைகள் என்று பொருள்.  அறிவு வளர்ச்சியடைய ஆரம்பித்த காலத்தில் இயற்கை போற்றப்பட்டது.  பூமித்தாய், வருண தேவன், வாயு தேவன், இந்திரன், அக்னி தேவன் என்று இயற்கை சக்திகளை  தேவதைகளாகப் போற்றும் முறை இருந்தது. இதை பிரகிருதி பூஜை என்பார்கள்.  தேவர்களை அக்னி ஹோமம், யாகம் போன்ற பூஜைகள்  மூலம் வணங்கினார்கள்.  மனிதன் தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், துன்பங்களைத் தீர்க்கவும் தெய்வத்தின் துணையை நாடினான். எனவே, கர்மகாண்டத்தில் தத்துவம் எதுவும் கிடையாது, ஆசை நிறைவேற்றத்துக்கான கோரிக்கைகளாக  இருக்கும்.  

 இவ்வுலகில் வளமுடன் வாழ வழிமுறைகளும் , செயல் முறைகளும்  கொண்டது கர்ம காண்டம்.  குழந்தை வேண்டுமானால் என்ன ஹோமம் செய்ய வேண்டும்?  செல்வந்தனாக என்ன யாகம் செய்ய வேண்டுமென்று விலாவாரியாகப் பேசும்.  அதாவது, நாம் ஆசைப் படுவதை தர்ம வழியில் அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லும்.  அதில் கூறப்பட்டிருக்கிற செயல் முறைகள் பலவும் இந்தக் காலத்திற்கு ஒத்து வராது. புகழ் பெற   நூறு மாடுகள் தானம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள், அதை  நம்மால் செய்ய முடியாது இல்லையா? அதை செய்யவும் தேவையில்லை.

90 சதவிகிதம் இந்துக்கள் கடைபிடிப்பது கர்ம காண்டத்தைத் தான்.  ஏனென்றால், அதில் அவர்கள்  ஆசை பூர்த்தி ஆகிறது.  சொர்கம் நரகம்,  கர்மபலன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஜாதி பாகுபாடு, பலி கொடுத்தல் போன்ற பல மூட நம்பிக்கைகளும்  இதில் அடக்கம்.  எனவே, வேதத்தில் எல்லாப் பகுதியும் பவித்ரமானது என்று நினைக்க வேண்டியதில்லை.  80 சதவிகிதம் ஆசை நிறைவேற்றம் அல்லது  உலக அறிவு சம்பந்தப் பட்டதாக இருக்கும்.  வேதத்தின் கர்மகாண்டம், வாழ்வில் இன்பத்தையும் வெற்றியையும் தர்மப்படி அடைய வழி சொல்கிறது. 

 பல காலம் இப்படியே சென்றது! மனிதனின் அறிவு வளர்ச்சி முதிர்ச்சி அடைய அடைய, அவன் தன்  துன்பம் மட்டும்  நீங்காமல் இருப்பதை உணர்ந்தான்.   எந்த யாகமும், ஹோமமும், பூஜையும் அவன் துன்பத்தைத் தீர்ப்பதாக இல்லை.  எவ்வளவு தான் சம்பாதித்தாலும், தான தர்மங்கள் செய்தாலும், பேரும்  புகழும் பெற்றாலும்  மனதை வாட்டுகிற துன்பத்தை அவை  தீர்ப்பதில்லை  என்று தெரிந்துகொண்டான்.   துன்பத்திலிருந்து எப்படி விடுபடுவது என்று சிந்திக்க ஆரம்பித்த பின் உண்டானது தான் ஞான காண்டம்.   ஞான காண்டம், வேதத்தின்  கடைசியில் இருப்பதால் வேதாந்தம் எனப்படுகிறது. 

வேத் என்றால் அறிவு என்றும் பொருள் உண்டு, வேதனை என்றும் பொருள் உண்டு.  அந்தம் என்றால் முடிவு.  வேதாந்தம் என்றால்  வேதனையின் முடிவு அல்லது அறிவைக் கடந்தது என்று இரண்டு விதமாகவும் கூறலாம்.   எனவே, வேதாந்தத்தின் மையத்தில் இருப்பது மனிதன், கடவுள் அல்ல.  அது பரம்பொருள் தத்துவதை பற்றி பேசுகிறது. அது கூட, துன்பத்திலிருந்து நமக்கு  விடுதலை தருகிறது என்ற ஒரே காரணத்துக்காகத்தான்.  ஒருவேளை, நமக்கு துன்பமென்று ஒன்று இல்லையென்றால் வேதாந்தத்திற்கு  பரம்பொருள்  பற்றி பேச வேண்டிய அவசியம் கூட இருந்திருக்காது.  

வேதாந்தத்தின்  இலக்கு,  மனிதனின் அக விடுதலை.  

வேதாந்தம் யாருக்கு என்றால், துன்பத்திலிருந்து விடுதலை வேண்டும் என்பவர்கள், உலகப் பொருட்களில் நிம்மதி கிடைக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டவர்கள், மாறிக்கொண்டே இருக்கும் உலகில் மாறாத உண்மை எது  என்று அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பவர்கள்.  நிரந்தரமான மகிழ்ச்சி வேண்டும் என்பவர்கள் எல்லோரும் வேதாந்தம் படிக்க வருகிறார்கள். வேதாந்தம் வயதானவர்கள்,  வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் படிக்கும் புத்தகம் அல்ல.  வாழ்க்கையை அச்சமின்றி, ஆற்றலோடு, ஓவ்வொரு கணமும் ஆனந்தமாக வாழ விரும்புபவர்கள் அறிய  விழையும் தத்துவம். 

 காசு பணம், பதவி, செல்வாக்கு, புகழ், வீடு, மனைவி, மக்கள், நீண்ட ஆயுள், மதிப்பு, மரியாதை, வண்டி, வாகனம்   இவற்றை விரும்புபவர்கள் பொதுவாக வேதாந்தத்தின் பக்கம் வருவதில்லை.  அவர்களுக்கு இன்னும் உலகத்தின் மேல் ஆசையும்  நம்பிக்கையும் இருக்கிறது. அவர்கள் இன்னும் கொஞ்ச காலம் ரோலர் கோஸ்டரில் சுற்ற ஆசைப் படுகிறார்கள்.  சுற்றட்டுமே! ஒரு நாள் இறங்கித் தானே ஆக வேண்டும். 



No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin