நம்மால் ஏன் சில நிமிடங்கள் கூட மற்றவர்களை பற்றி எண்ணாமல் இருக்கவே முடிவதில்லை? நாம் நமக்காக வாழ்கிறோமா அல்லது மற்றவர்களுக்காக வாழ்கிறோமா? நம் கவலைகளும் மகிழ்ச்சியும் நம்மை விட மற்றவர்கள் சம்பந்தப் பட்டதாகவே என் இருக்கிறது?. நம் வாழ்வை மற்றவர்கள் கைப்பற்றிக் கொள்ள எப்படி விட்டு விட்டோம்? நான் எனக்காகத் தான் என் இஷ்டப் படிதான் வாழ்கிறேன் என்கிறீர்களா? அதெல்லாம் சும்மா. இங்கே ஏறக்குறைய அனைவருமே மற்றவர்களுக்காகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சரி, நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள்.
நீங்கள் புது சட்டை வாங்கலாமென்று துணிக் கடைக்குப் போகிறீர்கள். சட்டை உங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று வாங்குகிறீர்களா அல்லது இந்த சட்டையைப் போட்டுக் கொண்டு போனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்துப் பார்த்து வாங்குகிறீர்களா? சொல்லுங்கள்.
கண்ணாடியில் முகம் பார்க்கும் போது, உங்கள் கண்களால் உங்கள் முகத்தைப் பார்க்கிறீர்களா, அல்லது என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று மற்றவர்கள் கண்கள் வழியாகப் பார்க்கிறீர்களா?
பொதுவாக பெண்கள் தன்னை ஆணின் கண்கள் வழியாகத் தான் பார்க்கிறார்கள். அதனால் தான் அவர்களுக்குப் பிடித்த மாதிரி அலங்கரித்துக் கொள்கிறார்கள். சிவப்பான பெண்ணைத் தான் பலரும் விரும்புகிறார்கள், குறிப்பாக இந்தியாவில் அப்படித் தான். அதனால் சிவப்பாக இருந்தால் அழகு என்றும் கருப்பாக இருந்துவிட்டால் அசிங்கம் என்றும் நினைக்கிறாள்.
நம் நிறம் நமக்குப் பிடிக்கவில்லை. கிரீம் அல்லது பவுடர் போட்டு வெளுக்கப் பார்க்கிறோம்.
நம் மொழியும் நமக்குப் பிடிக்கவில்லை. நம் பிள்ளைகள் மம்மி டாடி என்று கூப்பிட்டால் ஒரே சந்தோஷம் தான். பள்ளியில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்பது கட்டாயம். அதனால் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, தலையை அடகு வைத்தாவது என் மகனை அந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று துடிக்கிறோம். உலகில் எங்கும் இந்த கேவலமான நிலைமை இல்லை. அந்நிய மொழி வழிக் கல்வியை இந்தியாவில் மட்டும் தான் பார்க்கலாம்.
நம் நாடும் நமக்குப் பிடிப்பதில்லை. வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்பது தான் இப்போதைக்கு பல பேருடைய கனவு. சாப்பிடறது கூட பர்கர் பிஸ்ஸா மோமோஸ் நூடுல்ஸ் சீரில் தான். அவியல் துவையல் என்ற பெயர்கள் கூட மறந்து போய் விட்டது.
மாற்றான் வீட்டு மல்லிகையும் மணக்கும் என்று ஒரு பழமொழி கூட இருக்கிறது, இல்லையா?
நம்மை ஏன் இப்படி மற்றவர்கள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்?
நம்மிடம் ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை?
ஏனென்றால் பல நூறு ஆண்டுகளாக அந்நியரிடம் அடிமைப் பட்டு கிடந்ததில் நம்மிடம் உள்ள எல்லாமே இழிவானது என்றும் அவர்களிடம் உள்ள எல்லாமே சிறப்பு என்றும் நம்பி விட்டோம். அந்த நம்பிக்கை மிகவும் ஆழமாக மனதுக்குள் சென்று பதிந்து விட்டது. நம்மால் நாம் சிறப்பானவர்கள் என்று நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு கண்டிசன் ஆகிவிட்டோம். நம் தன்னம்பிக்கை தகர்த்தெறிய பட்டு விட்டது. நாம் பலகீனமாகிப் போனோம்.
எப்போது நாம் பலகீனமாக உணர்கிறோமோ, அப்போது உலகம் நமக்கு எஜமானனாகத் தெரியும்.
~ஆச்சர்ய பிரஷாந்த்
நம் அடிமைத் தனத்திற்குக் காரணம் நாம் நம் உள்ளதோடு தொடர்பற்றுப் போய் விட்டோம். நம் உள்ளம் சொல்வதை கேட்கத் தவறி விட்டோம், அதனால் மற்றவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டிய பரிதாபம்.
ஆன்மிகம் ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறது - கடந்து உள்ளே போ - அதுவே கடவுள்!
எதைக் கடந்து போக?
நாம் காலம் காலமாக சேர்த்து வைத்திருக்கிறோமே , அந்தக் குப்பைகளைக் கடந்து போகச் சொல்கிறது.
நாம் செய்ய வேண்டியது எல்லாம் வெளியிலிருந்து வந்ததை வெளியே ஒதுக்கித் தள்ள வேண்டியது தான். நம் விருப்பங்கள், கருத்துக்கள், நம்பிக்கைகள், தேவைகள், இலட்சியங்கள், பயங்கள், உணர்வுகள், எண்ணங்கள் எல்லாம் உண்மையில் நம்முடையதே இல்லை, வெளியிலிருந்து வந்தவை. உண்மையில் நாம் நமக்காக வாழவில்லை. வேறு யாருக்காகவோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அப்படி என்றால் எனக்கு ஏன் அது தெரியவில்லை?
ஏனென்றால் , அது தன்னை, "நான்" என்று சொல்லிக் கொண்டு நமக்குள் இருக்கிறது.
~பரமேஸ்வரி .
பரம் அத்வைத்.

No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin