Pages

Wednesday, November 29, 2023

வேதாந்தம் - பகுதி 2




வேதம், இந்துக்களின் புனித நூல் என்று நமக்கு தெரியும்.  இந்து மதத்தில்,பலவகையான புத்தகங்கள் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் முதன்மையானது, மையமானது, சிறப்பானது வேதம் ஆகும். வேதம் என்றால் அறிவு என்று பொருள்.   அது ஆகாயத்திலிருந்தெல்லாம் வந்து குதித்து விடவில்லை.  எப்படி அறிவியலறிஞர்கள்  உலகில் தாம் கண்டறிந்த உண்மைகளை விட்டுச் சென்றார்களோ அப்படி, தங்கள்  உள்ளத்தில் அறிந்த உண்மைகளை ஞானிகளும், ரிஷிகளும் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.  ஒருவர் இருவர் அல்ல, பல பேர், பல கால கட்டங்களில் வாழ்ந்தவர்கள் தாங்கள் உணர்ந்ததை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.  அவர்கள் தங்கள் பெயர்களைக் கூட குறிப்பிடவில்லை.  

வேதத்தில் இரண்டு பகுதிகள் உண்டு - முதல் பகுதி கர்ம காண்டம், கடைசிப் பகுதி  ஞான காண்டம். 

கர்மகாண்டம் என்றால் செயல்முறைகள் என்று பொருள்.  அறிவு வளர்ச்சியடைய ஆரம்பித்த காலத்தில் இயற்கை போற்றப்பட்டது.  பூமித்தாய், வருண தேவன், வாயு தேவன், இந்திரன், அக்னி தேவன் என்று இயற்கை சக்திகளை  தேவதைகளாகப் போற்றும் முறை இருந்தது. இதை பிரகிருதி பூஜை என்பார்கள்.  தேவர்களை அக்னி ஹோமம், யாகம் போன்ற பூஜைகள்  மூலம் வணங்கினார்கள்.  மனிதன் தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், துன்பங்களைத் தீர்க்கவும் தெய்வத்தின் துணையை நாடினான். எனவே, கர்மகாண்டத்தில் தத்துவம் எதுவும் கிடையாது, ஆசை நிறைவேற்றத்துக்கான கோரிக்கைகளாக  இருக்கும்.  

 இவ்வுலகில் வளமுடன் வாழ வழிமுறைகளும் , செயல் முறைகளும்  கொண்டது கர்ம காண்டம்.  குழந்தை வேண்டுமானால் என்ன ஹோமம் செய்ய வேண்டும்?  செல்வந்தனாக என்ன யாகம் செய்ய வேண்டுமென்று விலாவாரியாகப் பேசும்.  அதாவது, நாம் ஆசைப் படுவதை தர்ம வழியில் அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லும்.  அதில் கூறப்பட்டிருக்கிற செயல் முறைகள் பலவும் இந்தக் காலத்திற்கு ஒத்து வராது. புகழ் பெற   நூறு மாடுகள் தானம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள், அதை  நம்மால் செய்ய முடியாது இல்லையா? அதை செய்யவும் தேவையில்லை.

90 சதவிகிதம் இந்துக்கள் கடைபிடிப்பது கர்ம காண்டத்தைத் தான்.  ஏனென்றால், அதில் அவர்கள்  ஆசை பூர்த்தி ஆகிறது.  சொர்கம் நரகம்,  கர்மபலன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஜாதி பாகுபாடு, பலி கொடுத்தல் போன்ற பல மூட நம்பிக்கைகளும்  இதில் அடக்கம்.  எனவே, வேதத்தில் எல்லாப் பகுதியும் பவித்ரமானது என்று நினைக்க வேண்டியதில்லை.  80 சதவிகிதம் ஆசை நிறைவேற்றம் அல்லது  உலக அறிவு சம்பந்தப் பட்டதாக இருக்கும்.  வேதத்தின் கர்மகாண்டம், வாழ்வில் இன்பத்தையும் வெற்றியையும் தர்மப்படி அடைய வழி சொல்கிறது. 

 பல காலம் இப்படியே சென்றது! மனிதனின் அறிவு வளர்ச்சி முதிர்ச்சி அடைய அடைய, அவன் தன்  துன்பம் மட்டும்  நீங்காமல் இருப்பதை உணர்ந்தான்.   எந்த யாகமும், ஹோமமும், பூஜையும் அவன் துன்பத்தைத் தீர்ப்பதாக இல்லை.  எவ்வளவு தான் சம்பாதித்தாலும், தான தர்மங்கள் செய்தாலும், பேரும்  புகழும் பெற்றாலும்  மனதை வாட்டுகிற துன்பத்தை அவை  தீர்ப்பதில்லை  என்று தெரிந்துகொண்டான்.   துன்பத்திலிருந்து எப்படி விடுபடுவது என்று சிந்திக்க ஆரம்பித்த பின் உண்டானது தான் ஞான காண்டம்.   ஞான காண்டம், வேதத்தின்  கடைசியில் இருப்பதால் வேதாந்தம் எனப்படுகிறது. 

வேத் என்றால் அறிவு என்றும் பொருள் உண்டு, வேதனை என்றும் பொருள் உண்டு.  அந்தம் என்றால் முடிவு.  வேதாந்தம் என்றால்  வேதனையின் முடிவு அல்லது அறிவைக் கடந்தது என்று இரண்டு விதமாகவும் கூறலாம்.   எனவே, வேதாந்தத்தின் மையத்தில் இருப்பது மனிதன், கடவுள் அல்ல.  அது பரம்பொருள் தத்துவதை பற்றி பேசுகிறது. அது கூட, துன்பத்திலிருந்து நமக்கு  விடுதலை தருகிறது என்ற ஒரே காரணத்துக்காகத்தான்.  ஒருவேளை, நமக்கு துன்பமென்று ஒன்று இல்லையென்றால் வேதாந்தத்திற்கு  பரம்பொருள்  பற்றி பேச வேண்டிய அவசியம் கூட இருந்திருக்காது.  

வேதாந்தத்தின்  இலக்கு,  மனிதனின் அக விடுதலை.  

வேதாந்தம் யாருக்கு என்றால், துன்பத்திலிருந்து விடுதலை வேண்டும் என்பவர்கள், உலகப் பொருட்களில் நிம்மதி கிடைக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டவர்கள், மாறிக்கொண்டே இருக்கும் உலகில் மாறாத உண்மை எது  என்று அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பவர்கள்.  நிரந்தரமான மகிழ்ச்சி வேண்டும் என்பவர்கள் எல்லோரும் வேதாந்தம் படிக்க வருகிறார்கள். வேதாந்தம் வயதானவர்கள்,  வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் படிக்கும் புத்தகம் அல்ல.  வாழ்க்கையை அச்சமின்றி, ஆற்றலோடு, ஓவ்வொரு கணமும் ஆனந்தமாக வாழ விரும்புபவர்கள் அறிய  விழையும் தத்துவம். 

 காசு பணம், பதவி, செல்வாக்கு, புகழ், வீடு, மனைவி, மக்கள், நீண்ட ஆயுள், மதிப்பு, மரியாதை, வண்டி, வாகனம்   இவற்றை விரும்புபவர்கள் பொதுவாக வேதாந்தத்தின் பக்கம் வருவதில்லை.  அவர்களுக்கு இன்னும் உலகத்தின் மேல் ஆசையும்  நம்பிக்கையும் இருக்கிறது. அவர்கள் இன்னும் கொஞ்ச காலம் ரோலர் கோஸ்டரில் சுற்ற ஆசைப் படுகிறார்கள்.  சுற்றட்டுமே! ஒரு நாள் இறங்கித் தானே ஆக வேண்டும். 



வேதாந்தம் - ஒரு அறிமுகம்


 கிறிஸ்துவர்களுக்கு பைபிள் போல, இஸ்லாமியர்களுக்கு குர் ஆன் போல, இந்து தர்மம் என்றழைக்கப் படும்  சனாதன தர்மத்தின் முதன்மையான, மைய நூல் வேதாந்தம்.  பகவத் கீதை வேதாந்தத்தின் ஒரு அங்கம் ஆகும்.  பைபிள் படிக்கவில்லை என்றால் கிருஸ்தவர்கள் என்று சொல்ல முடியாது. குர் ஆன் படிக்கவில்லை என்றால் இஸ்லாமியர்கள் என்று ஒத்துக்கொள்ள மாட்டோம்.  ஆனால், எந்தப் புத்தகமும் படிக்காவிட்டாலும் கூட, எந்தத்  தத்துவமும் தெரியாவிட்டாலும் கூட இந்துக்கள் என்று அழைக்கிறோம்.  

நம்முடைய  புத்தகம், தத்துவம்  இரண்டுமே  தெரியாது. தெரிந்தாலும் படிக்கும் வழக்கம் இல்லை. இருந்தாலும் கர்வத்துடன் இந்து என்று சொல்லிக்கொள்கிறோம்.  தீபாவளி, ஹோலி கொண்டாடுவதனாலேயே இந்துவாக முடியாது. பேர் சமஸ்கிருதத்தில் வைத்துக் கொண்டால் இந்து இல்லை.  வாழ்க்கை தத்துவம் தெரியாமல் வாழ்க்கையை நடத்துவது என்பது ஹெட் லைட் இல்லாமல் காரை ஒட்டிக்கொண்டு போவது போல். எப்போது வேண்டுமானால் விபத்து நேரலாம். நமக்கு வழி தெரியாததால் மற்றவர் நம்மை வழி நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.  உன்னதமான தத்துவம் என்று உலகமே வேதாந்தத்தை போற்றினாலும் நமக்கு எதுவுமே தெரியாது.  நம்மை சொல்லியும் குற்றமில்லை, நம் வீட்டிலும் யாரும் அகக்கல்வியான வேதாந்தத்தை  சொல்லிக்கொடுக்கவில்லை. பள்ளி, கல்லூரிகளிலும் ஒரேயடியாக  புறக்கணித்து விட்டார்கள்.  இந்துக்களின், பாரதத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அவர்கள் அறிவுக்கு உயர்ந்த இடம்  கொடுக்கத்  தவறியதே ஆகும்,  

வேதாந்தம் புரிவது கடினம் என்றெல்லாம் சொல்லி நம்மை அதை படிக்கவே விடாமல் செய்து விட்டார்கள்.  உண்மையில் வேதாந்தம் போல் மனதைக்கவரும் படிப்பு, மனநிறைவு தரும் கல்வி வேறெதுவுமில்லை.  

மூன்று வகையான அறிவைப் பற்றி வேதாந்தம் பேசுகிறது.  ஒன்று, தன்னை பற்றிய அறிவு, இரண்டாவது  உலகம் பற்றிய அறிவு, மூன்றாவது இறை அறிவு. இந்த மூன்றில் எது ஒன்று தெரியவில்லை என்றாலும் வாழ்வில் துன்பம் வருவது   நிச்சயம்.  நம் வாழ்விலும் துன்பம் இருந்தால், அதை வேரோடு அழிக்கக் கூடிய சக்தி வேதாந்தத்துக்கு உண்டு.  இது எத்தனையோ மாமனிதர்களை உருவாக்கியுள்ளது.  

வேதாந்தம் என்றால் என்ன, அத்வைதம், துவைதம் என்றால் என்னவென்று முதலில் புரிந்துகொள்ளலாம், ஓவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக.  


Saturday, November 25, 2023

நிம்மதி வேண்டுமா?

     புத்தரிடம் போய் ஒரு சீடர் கேட்டாராம்.

எல்லாராலும் முக்தி அடைய முடிவது சாத்தியம் என்றால் ஏன் அனைவரும் முக்தி அடைவதில்லை? அதற்கு புத்தர், எல்லாராலும் முக்தி அடைய முடியும் ஆனால் எல்லாரும் முக்தி அடைய விரும்புவதில்லை என்று சொன்னாராம்.
மன அமைதி, நிம்மதி ஒன்றும் கிடைப்பதற்கரிய பொருள் இல்லை, அது காற்று மாதிரி, ஆகாயம் மாதிரி இயல்பாக இருக்கும் ஒரு விஷயம் தான். சகஜமானது தான். ஆனால், நம் அனுபவத்தில் அப்படி இல்லையே. எப்போதும் ஏதோ கவலை, பதட்டம், யோசனை, பயம் என்று நிம்மதி இல்லாமல் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
அமைதி ஒன்றும் குதிரைக் கொம்பு இல்லை. உண்மையில் நமக்கு அமைதி வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா, என்ன? கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் புரியும், நமக்கு இந்த நிம்மதி, அமைதி எல்லாம் இரண்டாம் பட்சம் தான், கிடைத்தால் சரி, இல்லையென்றால் பரவாயில்லை.
உங்களுக்கு மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்து விடுகிறது, ஆனால், அங்கே நேர்மையாக இருக்க முடியாது, அடிமை போல் வேலை செய்ய வேண்டியிருக்கும். நிம்மதி இருக்காது என்று தெரிந்தாலும், பரவாயில்லை என்று அந்த வேலையை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த காலத்தில் நேர்மையாகவெல்லாம் வாழ முடியாது, ஊரோடு ஒத்து வாழ் என்று பழமொழிகளை எல்லாம் அவிழ்த்து விடுவீர்கள். வேலையில் சேர்ந்து விடுவீர்கள்.
பையன் நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கிறான், ஆப் ஷோர் போக வாய்ப்புகள் உண்டு, சொந்தமா ஒரு அபார்ட்மெண்ட், கார் உள்ள மாப்பிள்ளை, ஆனால் என்ன, சிகரெட், குடிப்பழக்கம் உண்டு, இப்படி ஒரு வரன் வந்தால், இப்போ யார் தான் குடிக்கல, அது ஒன்னும் பெரிய குற்றமில்லை, ஒரு சோஷியல் கேதரிங் என்றால் குடிக்க வேண்டியதாத் தானே இருக்கு, என்று சால்ஜாப்பு சொல்வீர்கள்.
உண்மையில் நாம் அமைதியை விட, நிம்மதியை விட சுகத்தைத் தான் அதிகம் விரும்புகிறோம். அந்த சுகம், உணவு, வீடு, வாகனம், நண்பர்கள், உறவினர்கள், ஆடம்பரப் பொருட்கள், குடி, போதை என்பது போல் உடல் சம்பந்தப் பட்டதாகவும் இருக்கலாம், அல்லது அருகாமை, பாதுகாப்பு, அங்கீகாரம், மதிப்பு, மரியாதை, புகழ், பொழுதுபோக்கு போன்ற மனது சம்பந்தப் பட்டதாகவும் இருக்கலாம்.
உடலுக்கு சவுகரியம்! மனதுக்கு சுகம்! சமூகத்தில் அந்தஸ்து!
இவற்றை அடைய நாம் கொடுக்கும் விலை தான் "நிம்மதி". இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு வியாபாரம். வைரக்கல்லை விற்று இரண்டு துண்டு ரொட்டி வாங்கி சாப்பிடுவது போல். அவ்வளவு புத்திசாலிகள் நாம்.
இரவு நீண்ட நேரம் கண் விழித்துப் படம் பார்ப்போம், கார மசாலா வகை உணவுகளை நேரம் காலம் தெரியாமல் ஒரு கட்டு கட்டுவோம், பணம் கிடைக்கும் என்றால் கூசாமல் பொய் சொல்வோம், வேண்டாத வேலையில் குப்பை கொட்டுவோம், மால், சினிமா என்று நண்பர்களுடன் ஊர் சுற்றுவோம். தேவையில்லாமல் பொருட்களை வாங்கி குவிப்போம். ஒன்றுக்கு ரெண்டு கிரெடிட் கார்டில் கடன் வாங்கி விடுவோம். நகை, புடவை, துணிமணி, அழகு சாதனங்கள், பியூட்டி பார்லர் என்று மாதத்துக்கு அது வேறு தனி செலவு.
இவற்றில் ஏதாவது அமைதிக்காக என்று செய்கிறோமா என்ன?
நாம் செய்யும் பூஜைகளும், செல்லும் கோவில்களும் கூட சுகத்துக்காகவே தவிர அமைதிக்காக இல்லை என்பது தான் உண்மை.
வியாபாரத்தில் லாபம் கிடைக்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், பார்ட்னர் கிடைக்க வேண்டும், குழந்தை வேண்டும், வெற்றி அடைய வேண்டும் என்று தான் சாமியே கும்பிடுகிறோம். இதெல்லாம் கிடைத்தால் அமைதியாக இருப்பேன் என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் , நீங்கள் அமைதியாக இருந்தால் இவை எல்லாம் தானாகவே கிடைக்கும். நீங்கள் கண்ணை விற்று சித்திரம் வாங்கி கொண்டிருக்கிறீர்கள்.
அமைதி என்பது சுவாசம் போல். அது போனபின் வேறு என்ன இருந்தால் என்ன, இல்லையென்றால் என்ன? புரிகிறதா?
நாம் எப்படிப் பட்ட ஆள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது மிகவும் சுலபம். வேறு யாரையும் கேட்க வேண்டியதில்லை. உங்கள் நேரமும் பணமும் எங்கே போகிறது என்று பாருங்கள். அதிலேயே தெரிந்து விடும், நீங்கள் எப்படிப் பட்டவர் என்று. இன்னும் தெரிய வேண்டும் என்றால், உங்கள் whatsapp ல் யார் நண்பர்கள் என்று பாருங்கள், Google, YouTube history எடுத்துப் பாருங்கள். நீங்கள் எப்படிப் பட்டவர் என்று துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். அங்கே என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? வெறும் சில்லறை சமாச்சாரங்கள் தான் என்றால் ஆளும் அப்படித் தான்.
கேளுங்கள் கொடுக்கப் படும் என்று இயேசு சொன்னார். நீங்கள் நிம்மதியைக் கேட்டீர்களா? கேட்டிருந்தால் கண்டிப்பாக கிடைத்திருக்கும். நாம் கேட்டதைத் தான் இதுவரை அடைந்திருக்கிறோம். நீங்கள் அரசாங்க வேலை வேண்டும் என்று விரும்பியதால் ஒரு வேலை கிடைத்தது. விரும்பவே இல்லை என்றால் எப்படிக் கிடைக்கும்?
உங்கள் வாழ்க்கையில் எதை முக்கியம் என்று நீங்கள் கருதுகிறீர்களோ, அதுவாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள். பணம் முக்கியம் என்றால், பணக்காரன் ஆவீர்கள். இது இயற்கை நியதி. நீங்கள் எதற்கு உங்கள் வாழ்வில் சிறப்பிடம் கொடுத்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். எல்லாம் புரிந்து போய் விடும்.
~பரமேஸ்வரி.
பரம் அத்வைத்.
All reactions:
Latha Parameswari and Kalaimagal Palanivel

Friday, November 24, 2023

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?




நம்மால் ஏன்  சில நிமிடங்கள் கூட மற்றவர்களை பற்றி எண்ணாமல் இருக்கவே முடிவதில்லை?   நாம் நமக்காக வாழ்கிறோமா அல்லது மற்றவர்களுக்காக வாழ்கிறோமா?  நம் கவலைகளும் மகிழ்ச்சியும் நம்மை விட மற்றவர்கள் சம்பந்தப் பட்டதாகவே என் இருக்கிறது?.  நம் வாழ்வை மற்றவர்கள் கைப்பற்றிக் கொள்ள எப்படி விட்டு விட்டோம்?  நான் எனக்காகத் தான் என் இஷ்டப் படிதான் வாழ்கிறேன் என்கிறீர்களா?  அதெல்லாம் சும்மா.  இங்கே  ஏறக்குறைய அனைவருமே  மற்றவர்களுக்காகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  

சரி, நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள். 

நீங்கள் புது சட்டை வாங்கலாமென்று துணிக் கடைக்குப் போகிறீர்கள்.  சட்டை உங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று வாங்குகிறீர்களா அல்லது இந்த சட்டையைப் போட்டுக் கொண்டு போனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்துப் பார்த்து வாங்குகிறீர்களா?  சொல்லுங்கள். 

கண்ணாடியில் முகம் பார்க்கும் போது, உங்கள் கண்களால் உங்கள் முகத்தைப் பார்க்கிறீர்களா, அல்லது என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று மற்றவர்கள் கண்கள் வழியாகப் பார்க்கிறீர்களா? 

 பொதுவாக பெண்கள் தன்னை ஆணின் கண்கள் வழியாகத் தான் பார்க்கிறார்கள்.  அதனால் தான் அவர்களுக்குப் பிடித்த மாதிரி அலங்கரித்துக் கொள்கிறார்கள்.  சிவப்பான பெண்ணைத் தான் பலரும் விரும்புகிறார்கள், குறிப்பாக இந்தியாவில் அப்படித் தான். அதனால் சிவப்பாக இருந்தால் அழகு என்றும் கருப்பாக  இருந்துவிட்டால் அசிங்கம் என்றும் நினைக்கிறாள். 

நம் நிறம் நமக்குப்  பிடிக்கவில்லை.  கிரீம் அல்லது பவுடர் போட்டு வெளுக்கப்  பார்க்கிறோம். 

 நம் மொழியும் நமக்குப்   பிடிக்கவில்லை.  நம் பிள்ளைகள்  மம்மி  டாடி என்று கூப்பிட்டால்  ஒரே சந்தோஷம் தான். பள்ளியில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்பது கட்டாயம். அதனால் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, தலையை அடகு வைத்தாவது என் மகனை அந்தப் பள்ளியில் சேர்க்க   வேண்டும் என்று துடிக்கிறோம். உலகில் எங்கும் இந்த கேவலமான  நிலைமை இல்லை.  அந்நிய மொழி வழிக்  கல்வியை  இந்தியாவில் மட்டும் தான் பார்க்கலாம்.  

நம் நாடும் நமக்குப் பிடிப்பதில்லை.  வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்பது தான் இப்போதைக்கு  பல பேருடைய கனவு.  சாப்பிடறது கூட பர்கர் பிஸ்ஸா மோமோஸ் நூடுல்ஸ் சீரில்  தான்.  அவியல் துவையல் என்ற பெயர்கள் கூட மறந்து போய் விட்டது. 

மாற்றான் வீட்டு மல்லிகையும் மணக்கும் என்று ஒரு  பழமொழி கூட இருக்கிறது, இல்லையா?

நம்மை ஏன்  இப்படி மற்றவர்கள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்?  

நம்மிடம் ஏன்  இந்தத்  தாழ்வு மனப்பான்மை?  

ஏனென்றால் பல நூறு ஆண்டுகளாக அந்நியரிடம்  அடிமைப் பட்டு கிடந்ததில் நம்மிடம் உள்ள எல்லாமே இழிவானது  என்றும் அவர்களிடம் உள்ள எல்லாமே சிறப்பு என்றும் நம்பி விட்டோம். அந்த நம்பிக்கை மிகவும் ஆழமாக மனதுக்குள் சென்று பதிந்து விட்டது.  நம்மால் நாம் சிறப்பானவர்கள் என்று நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு கண்டிசன் ஆகிவிட்டோம்.  நம் தன்னம்பிக்கை தகர்த்தெறிய பட்டு விட்டது.  நாம் பலகீனமாகிப் போனோம்.  

எப்போது நாம் பலகீனமாக  உணர்கிறோமோ, அப்போது உலகம் நமக்கு எஜமானனாகத் தெரியும்.  

~ஆச்சர்ய பிரஷாந்த் 

நம் அடிமைத் தனத்திற்குக் காரணம் நாம் நம் உள்ளதோடு தொடர்பற்றுப் போய் விட்டோம்.  நம் உள்ளம் சொல்வதை கேட்கத்  தவறி விட்டோம், அதனால் மற்றவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டிய பரிதாபம். 

ஆன்மிகம்  ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறது  - கடந்து உள்ளே போ -  அதுவே கடவுள்! 

எதைக் கடந்து போக?  

நாம்  காலம் காலமாக சேர்த்து வைத்திருக்கிறோமே , அந்தக்  குப்பைகளைக் கடந்து போகச் சொல்கிறது.  

நாம் செய்ய வேண்டியது எல்லாம் வெளியிலிருந்து வந்ததை வெளியே ஒதுக்கித்  தள்ள வேண்டியது தான்.  நம்  விருப்பங்கள், கருத்துக்கள், நம்பிக்கைகள்,  தேவைகள், இலட்சியங்கள்,  பயங்கள், உணர்வுகள், எண்ணங்கள்  எல்லாம் உண்மையில்  நம்முடையதே  இல்லை, வெளியிலிருந்து வந்தவை.  உண்மையில் நாம் நமக்காக வாழவில்லை.  வேறு யாருக்காகவோ  வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

அப்படி என்றால் எனக்கு ஏன் அது  தெரியவில்லை?

ஏனென்றால் , அது  தன்னை, "நான்" என்று சொல்லிக் கொண்டு நமக்குள் இருக்கிறது. 


~பரமேஸ்வரி .

பரம் அத்வைத்.






ஆச்சார்ய பிரசாந்த் - ஒரு அறிமுகம்




ஆச்சர்ய பிரசாந்த் அவர்களைப்  பற்றி ஆன்மீக நோக்கில் சொல்வதென்றால் அவர்  ஒரு வேதாந்த  மறைஞானி ஆவார்.  அவர் பகவத்கீதை, உபநிடதங்கள் மற்றும் மெய்ஞ்ஞானிகளின் போதனைகளுக்கு புத்துயிர் அளித்திருக்கிறார். அவரின் சொல்வன்மை  விண்ணை முட்டுவதாக இருக்கிறது. 

மேலும், சாமானிய மனிதனின் பார்வையில்   ஆச்சார்ய பிரசாந்த் அவர்கள் சுற்றுப்புற சூழல் மற்றும் உயிரினங்களின் பாதுகாவலர், இளைஞர்களின் வாழ்வில் ஒளியும் எழுச்சியும் ஊட்டுபவர்,  மேலும், அவர் உயிர்கள்  ஓவ்வொன்றின் புற  விடுதலைக்காகவும், ஆன்ம விடுதலைக்காகவும் அயராது  போராடும் ஒரு போராளி . 

ஆகாயம் பூமியின் சங்கமம்.  

Thursday, November 23, 2023

நீ இல்லாத இடம் எங்குள்ளது? ~மூஜி

 அன்புத் தந்தையே,


உன் அருளன்றி யாரும் உண்மையை அறிவரோ

முயற்சியினாலும்

பயிற்சியினாலும் 

மட்டுமே உன்னை அடைய முடியாது 

இடைவெளி அற்றவனே!


ஆணவம் பிடித்தவர்களும் 

அதிருப்தி கொண்டவர்களும் 

உன் காலம் கடந்த

எங்கெங்கிலும் 

நீக்கமற நிறைந்த முகத்தை 

காணத் தவறியவர்கள்.


யார்க்கும் 

நீ இல்லாத இடம் 

எங்குள்ளது?


~மூஜி 


Saturday, November 18, 2023

இலையில் எழுதிய பெயர்.


 டிசம்பர் மாதம். கத்தாரில் குளிர்காலம் தொடங்கி விட்டது. பூ மரங்கள், பச்சைப் புல்வெளிகள், காலை நேரத்து இளவெயிலில் நடப்பது சுகம். இன்றும் அப்படி ஒரு நாள் தான். அங்கங்கே தோட்ட வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்கள், நம்மை கண்டவுடன் மியாவ் என்று ஹலோ சொல்லும் பூனைக்குட்டிகள், உற்சாகமாக சறுக்கும் பூட்சுகளுடன் பறக்கும் பிலிப்பினோ இளைஞர், மலையாளி டீ கடை முன் பெஞ்சுகளில் அமர்ந்து டீ குடிக்கும் மக்கள். இரண்டு நாள் பெய்த மழையில் மரங்களிலிருந்து இலைகள் உதிர ஆரம்பித்து விட்டன. சாலையெங்கும் உதிர்ந்து கிடைக்கும் காய்ந்த இலைகள். நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு காய்ந்த மஞ்சள் நிற இலை கண்ணில் பட்டது. அதில் ஏதோ எழுத்து தெரிந்ததால் உற்றுப் பார்த்தேன். Tolee என்று ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது. யாரோ தன் பெயரை இலையில் எழுதி இருக்கிறார்கள் போல. ஒருவேளை தன் மனத்துக்குப் பிடித்தவர்களின் பெயராகக் கூட இருக்கலாம். இப்போது அந்த இலை காய்ந்து சாலையில் விழுந்து கிடக்கிறது. பெயர் மட்டும் அழியாமல் அப்படியே. ம்ஹும்... .நான் அதை ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன்.

எதற்காக நாம் நம் பெயரை ஒரு பொருள் மேல் எழுதுகிறோம்? அந்தப் பொருள் இருக்கும் வரை நம் பெயரும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவா? வீட்டின் முகப்பிலும், காரின் பின் கண்ணாடியிலும் பெயர்கள் எழுத்துவதைப் பார்த்திருக்கிறேன். தூசி படிந்த கார் கண்ணாடியில் எப்போதும் யாராவது தன்னுடைய பெயரை எழுதி வைத்து விட்டுப் போய் விடுவார்கள். கடற்கரை மணலில் பெயர்கள் எழுதியது எனக்கு நினைவு இருக்கிறது. அலை வந்து அடித்துச் சென்று விடும் என்று தெரிந்தாலும் ஒரு அல்ப ஆசை.
நம் பெயர் நமக்கு மிகவும் பிரியமானதாக இருக்கிறது இல்லையா? பேனா எழுதுகிறதா என்று கடையில் கிறுக்கிப் பார்க்கும் போது கூட நம் பெயரைத் தான் எழுதி பார்க்கிறோம். நம்மை யாரும் மறந்து விடக்கூடாது என்ற தவிப்பு உள்ளே இருப்பது தெரிகிறது. நம் வாழ்க்கை ஒரு நாள் முடிந்து விடும், நாம் இல்லாமற் போய் விடுவோம் என்று உள்ளூரத் தெரிவதனால், மறைமுகமாக நம்மை நிலை நிறுத்திக் கொள்ள நாம் நினைவின்றி, unconscious ஆக செய்யும் முயற்சியோ என்று தோன்றுகிறது. பலர் கை, கால்களில் தன் பெயரை பச்சை குதிக்க கொள்கிறார்கள். பாறையில் எழுதி வைத்தாலாவது பல நாட்கள் இருக்கும், இந்த உடலில் எழுதி வைத்து என்ன பிரயோஜனம். ஒரு நாள் சாம்பலாகத்தான் போகிறது.
தான் வாழா விட்டாலும் தன் பெயர் வாழ வேண்டும் என்று தான் அரசர்கள் பெரிய பெரிய கோவில்கள் எல்லாம் கட்டினார்களோ? கோவில் சுவரில், கிரில் கம்பிகளில் எல்லாம் பெயரை எழுதி வைத்து விடுகிறார்கள். பள்ளிக்கூடத்திற்கு, வீதிக்கு, நிறுவனத்திற்கு, தோட்டத்திற்கு என்று எல்லா இடங்களிலும் நம் பெயரை பதித்து வைக்கப் பார்க்கிறோம். உண்மையில் நமக்கு சாக விருப்பமே இல்லை என்று தான் தெரிகிறது. சாகாமல் வேறு ஏதாவது ஒரு வடிவத்தில் வாழ ஆசைப் படுகிறோம். மகனுடைய பெயருக்குப் பின்னால் அப்பா, மனைவியின் பெயருக்குப் பின்னால் கணவன் இன்னும் சில வருடங்கள் வாழ்வார்கள்.
யாரோ Tolee இலையில் பெயரை எழுதி வைத்து விட்டுப் போய் விட்டான். அவனைப் பற்றி நாம் இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவன் இப்போது இருக்கிறானோ இல்லையோ, நம் எண்ணத்தில் வந்து விட்டான். நாம் உடலோடு வாழாவிட்டாலும், குறைந்த பட்சம், எண்ணங்களில் நீண்ட நாட்கள் வாழ முடியும் அல்லவா? நாம் இன்னமும் சிவாஜி கணேசன் அவர்களை நினைத்துக் கொண்டிருக்கிறோம். திரைப்படம் இருக்கும் வரை அவரை யாராலும் மறக்க முடியாது. மக்களின் இதயங்களில் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டார். ஒரு வகையில் அவர் சாவை ஜெயித்து விட்டார் போல தோன்றுகிறது.
புகழுக்குப் பின்னால் பலரும் அலைவதின் காரணம் இப்போது புரிகிறது இல்லையா? பேர் கெட்டுவிடும் என்றால் நாம் அந்தக் காரியத்தை செய்யத் தயங்குவோம். அதனால் தான் ஒருவரை அவமானப் படுத்த வேண்டுமென்றால் அவர் பேரைக் கெடுத்து விடுகிறார்கள்.
எங்கள் நண்பர்களின் குழந்தைகளை வேண்டுமென்றே கடுப்பேத்துவதற்காக அவர்கள் பெயரை திரித்துக் கூப்பிடுவோம். சும்மா விளையாட்டுக்குத் தான். அவர்களுக்கு அப்படி ஒரு கோபம் வரும். ஜனனியை குஜனி என்றால் கோபம் வராதா பின்னே? 🙂
பெயர் நம்மை இப்படி எல்லாம் ஆட்டிப் படைப்பது தெரிந்து தான், பெயரே இல்லாத கடவுளுக்குக் கூட பெயர் கொடுத்து விட்டார்கள் போலத் தெரிகிறது. ஒன்றா இரண்டா ஆயிரம் பெயர்கள் அவனுக்கு. கடவுள் பெயர்களை ஜபம் செய்யச் சொல்லி எல்லா மதங்களும் வற்புறுத்துகின்றன. இல்லையென்றால், நம் பெயர் மேல் நமக்குள்ள மோகம் போகவே போகாது போல் தெரிகிறது. சீக்கியர்கள் இதை சுமிரன் என்று சொல்கிறார்கள். இந்துக்கள் ராமா என்று சொன்னாலே நம் பாபம் அனைத்தும் தீர்ந்திடும், நாம ஜபம் செய் என்கிறார்கள்.
உண்மையில், நாம் நன்றாக இருக்க வேண்டுமென்றால், நம் பெயரை மறந்து விட வேண்டும். நான் அம்னீசியா பற்றி சொல்லவில்லை, நம் மேல் நமக்கு உள்ள மோகம் அகல வேண்டும் என்கிறேன். நம்மை மறக்கவில்லை என்றால் நம்மால் ஓய்வெடுக்க முடியாது. தூக்கத்தில் நான் இல்லை, என் பெயரும் நினைவில்லை, அதனால் தான் என்னால் ஓய்வெடுக்க முடிகிறது.
பெயர் என்பது ஒரு கருத்து concept . என்னை எந்த ஒரு கருத்திலும் அடக்க முடியாது. என் பெயரை வைத்து என்னைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்வதெல்லாம் வெறும் கற்பனையே. நான் யார் என்பதையே பெயர் கொண்டு விளக்க முடியாத போது கடவுளை எப்படி பெயரால் விளக்க முடியும்? இருந்தாலும் பெயர்கள் நமக்கு சில துப்புகளைக்( clue )கொடுக்கின்றன. கட + உள் என்றாலே கடந்து உள்ளே போ என்று பொருள். அதைக் கொண்டு கடவுள் யார் என்று நாம் ஊகித்து அறிந்து கொள்ள வேண்டியது தான். இவ்வாறு, பெயர்களைக் கொண்டு பெயருக்கு அப்பால் உள்ளவனைப் பற்றி சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் கருணை மிகுந்தவர்கள்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா, தன் பெயரையே மறந்தவர்கள் பெயரைத் தான் நாம் பல்லாயிரம் வருடங்கள் கழித்தும் நினைத்துக் கொண்டுள்ளோம். தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள் என்று ஆண்டாளை சொல்வார்கள். அவளை நாம் இன்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பக்த மீராவை இன்னமும் நினைத்துப் போற்றுகிறோம். அவள் கணவன் அரசனாகப் பெயர் பெற்றவர் , அவர் பெயர் எவ்வளவு பேருக்குத் தெரியும்? ராமர், கிருஷ்ணர், புத்தர், ஜீசஸ், குரு கபீர், குரு நானக், பாரதியார், உபநிடத ரிஷிகள் எல்லோருமே தன் பெயரை மறந்தவர்கள், அவர்களை இன்னமும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். காலம் உள்ளவரை அவர்கள் பெயர் நிலைக்கும்.
இலையில் ஆரம்பித்து, கடைசியாக இறைவனில் வந்து முடிந்து விட்டது. எங்கே ஆரம்பித்தாலும் இங்கே வந்து தான் முடிகிறது,என்ன செய்ய?

~பரமேஸ்வரி
பரம்அத்வைத்.

Thursday, November 16, 2023

குறை ஒன்றும் இல்லை

 ராம பக்தியில் உருகி உருகிப் பாடியவர் ராமதாஸ தீர்த்தர்.  அவருடைய பாடல் ஒன்று கேட்டுக் கொண்டிருந்தேன்.   "ஏ தீருக நனு"  என்ற தெலுங்குப் பாடல். அதில் ஒரு வரி மனத்தைத் தைத்தது.    

"ஏ ராமா, நான் கடந்த காலத்தில் எத்தனையோ குரூர கர்மங்களை அறியாமையில் செய்து விட்டேன். ஆனாலும் என்னிடம் குற்றம் பாராட்டாதே, தயவு செய்து என்னை என் ஏழ்மையிலிருந்து காப்பாற்று, மா மணியே."

ராமதாசர் மிகவும் ஏழ்மையில் இருந்தார். அந்நிலையில்  அவர் ராமனை நினைத்துப் பாடிய நெஞ்சை உருக்கும் பாடல் இது.   

போற்றுதலுக்குரிய பெரியோர்கள் எல்லோருமே தான் அறியாமையில் பல குரூரமான செயல்கள் செய்து விட்டதாக தயக்கமின்றி ஒப்புக்கொள்கிறார்கள்.  அவர்கள் கொலை பாதக செயல்கள் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை, இருந்தாலும்,  குரூரம் என்ற சொல்லை உபயோகப் படுத்த வேண்டிய அவசியம் என்னவாக இருக்கும்? எந்தச் செயலை அவர்கள் குரூரம் என்கிறார்கள்?  வேறு மாதிரி சொல்ல வேண்டுமென்றால், எதனால் நாம் குரூரமான செயல்களை செய்கிறோம்? 

நம்மைப் பொறுத்தவரை நாம் நல்லவர்கள், இந்த உலகம் தான் குரூரமானது.  நம் துன்பத்துக்கெல்லாம் காரணம் உலகம் தான் என்று கருதுகிறோம். ஆனால், உண்மை அறிந்தவர்கள் தன் நிலைமைக்கு உலகம் தான் காரணம் என்று  கை காட்டுவதில்லை, மாறாக அவர்கள் தன்னிடம் தவறு உள்ளதாகவே சொல்கிறார்கள். இது மிகப் பெரிய முரண்பாடாக இருக்கிறது இல்லையா? 

கபீர் தாசர் கூட ஒரு குறளில் கெட்டவர்கள் யார் என்று உலகம் முழுதும் தேடிப் பார்த்தேன், அப்படி ஒருவரும் கிடைக்கவில்லை. என் மனதில் தேடிப் பார்த்தால், என்னை விடக் கொடியவன் யாரும் இல்லை என்று புரிந்தது என்கிறார்.  நான் கொடியவன் என்று நம்மை நாம் எப்போதாவது நினைத்தாவது பார்த்திருக்கிறோமா? 

என் மனத்திலும், உறவுகளிலும் வன்முறை இருப்பதைப் பார்க்கிறேன்.  அதற்குக் காரணாம் உலகம் இல்லை, நான் தான் என்றால், என்னிடம் அப்படி என்ன குறை இருக்கிறது?  எது தெரியாமல், புரியாமல் நான் குரூரமான செயல்களைச் செய்கிறேன்? 

வாழ்வில் எல்லோரையும் போல் நானும் அடிபடுகிறேன். மனதில் கோபமும், வருத்தமும் இருப்பதைப் பார்க்கிறேன். அவற்றுக்குப் பின்னால் நிறைவேறாத ஆசை இருப்பதையும்  பார்க்கிறேன். என் விருப்பப்பதை இவ்வுலகம் நிறைவேற்றாத போது ஏமாற்றம் அடைகிறேன். அந்த ஏமாற்றம் வலியை ஏற்படுத்துகிறது. அந்த வலி தான்  மற்றவர்கள் மேல் வன்முறையாக வெளிப்படுகிறது.  

"அவசரத் தேவை என்று நண்பருக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தோம். இரண்டு மாதத்தில் திருப்பித் தந்து விடுவதாக சொன்னார். அவர் நன்றி உணர்வுடன் இருப்பார் என்று நினைத்தோம். அது இல்லை என்றால் கூடப்  பரவாயில்லை, பணத்தைக்  குறிப்பிட்ட நேரத்தில் திருப்பிக் கொடுத்து விட்டால் கூட போதும். ஆனால், ஆறு மாதம் ஆகி விட்டது,  பணத்தைப் பற்றி பேச்சே எடுக்க மாட்டேன் என்கிறார்.  நம்மை கண்டால் எதிரி போல் வேறு பார்க்கிறார். சரி போனால் போகிறது கொடுக்கும் போது கொடுக்கட்டும் என்று விட்டு விடலாம் என்று நினைத்தால் நம்மைப் பற்றி நாலு பேரிடம் அவதூறாக வேறு பேசிக்கொண்டிருக்கிறார்." 

"வேலைக்காரி காசை வாங்கி கொண்டு சொல்லாமல் ஓடி விட்டாள். அவளுக்கு எத்தனை நல்லது செய்திருப்பேன். நினைத்துப் பார்த்தாளா?  நன்றி கெட்டவள்."

"சாலை விதிகளை யாரும் மதிப்பதில்லை. அவனவன் அப்பன் வீட்டு ரோடு போல் போகிறான்.  கார் மேல் வந்து இடித்து விட்டு ஒரு சாரி கூட சொல்லவில்லை, எத்தனை திமிராக போகிறான் பார்."

"வாடகைக்கு குடியிருந்தவர்கள் வீட்டை நாசக்கேடு பண்ணியது மட்டுமில்லாமல் அட்வான்ஸ் பணத்தை அப்படியே கொடுக்க வேண்டும் என்று சண்டைக்கு வேறு வருகிறார்கள்."

"கணவருக்காக, குடும்பத்துக்காக மாய்ந்து மாய்ந்து எல்லாம் செய்தாலும், உடம்பு சரியில்லாத போது ஏம்மா, எப்படி இருக்குது என்று கேட்பது கூட இல்லை, மகளாவது என்னம்மா, தலை அழுத்தி விடட்டுமா என்று கேட்கிறாளா? அதுவும் இல்லை." 

"ராத்திரி பகலாக வேலை செய்தது நான், ஆனால், சக ஊழியர் ஒருவர்  தான் செய்ததாக பொய் சொல்லி எனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வும், ஊதிய உயர்வையும் தட்டிக் கொண்டு போய் விட்டார்." 

இவை எல்லாம் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள். நமக்கு  நாம் விரும்பிய படி எதுவும் நடக்கவில்லையே  என்ற வருத்தம்,  கோபம். கோபத்திலிருந்து  வன்முறை.  ராமதாசர் சொல்வது போல் குரூரமான செயல்கள்.   

உலகம் நியதிப் படி நடக்கவில்லை அதனால் தான் கடுப்பாகிறேன் என்பது சரியல்ல.  உலகத்திடமிருந்து நாம் எதிர்பார்த்தோம், ஏமாந்தோம்.  அவ்வளவு தான். அதற்கு நியாயம், தர்மம் என்று பேர் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் என் எதிர்பார்ப்பு ஈடேறவில்லை. நாட்டில்  எத்தனையோ பேருக்கு அநீதி இழைக்கப் படுகிறது. அப்போதெல்லாம் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தோம்.  நமக்கு ஏதாவது சின்ன பிரச்சினை வந்து விட்டது என்றால் உலகம் குரூரமானது என்று பொருமுவோம் .  உலகம் அதன் போக்கில் போய்க்கொண்டுதான் இருக்கும்.  நாம் விரும்பியபடி எல்லாம்  நடக்க வேண்டும் என்று அதற்கு ஒன்றும் நிர்பந்தம் கிடையாது.  

என் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டது இது தான். 

என் விருப்பங்களை உலகம் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற மனோபாவத்தில் நான் எந்த செயலை செய்தாலும் அதில் வன்முறை இருப்பதைக் காண்கிறேன்.  என் விருப்பத்தை நிறைவேற்று என்று நான் உலகைக் கட்டாயப்படுத்துகிறேன், வற்புறுத்துகிறேன், பலவந்தப் படுத்துகிறேன். அது தான் வன்முறை. 

எனக்குப்  பிடிக்கிறது, என் ஆசை இது என்று ஆசையை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். ஆசையின் உண்மையான சொரூபம் நமக்குத் தெரியவில்லை.  அது என்னை மட்டும் அல்ல, இந்த உலகத்தையே அழித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிவோமா?  உங்களுக்கு பால் டீ, காபி பிடிக்குமா?  உங்களுக்கு பிடித்ததினால் எத்தனை மாடுகள் சிறையில் அடைபட்டு செத்துச்  சீரழிந்து கொண்டிருக்கின்றன என்று தெரியுமா?  சிக்கன் பிடிக்கும் என்கிறீர்கள், கோழிப்பண்ணையில் கோழிகள் படும் அவலம் தெரியுமா?  நாம் எதையாவது விரும்பி விட்டால்,  அவற்றை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறோம்.  அனுபவிப்பது என்றால் அழிப்பது, வன்முறை. நாம் குடிக்கும் பால் வன்முறை, உண்ணும் உணவு வன்முறை, உறவுமுறைகளில் வன்முறை. இந்த வன்முறைகளுக்கெல்லாம் காரணம் ஒன்று தான் -  ஆசை. 

 அன்பே கடவுள் என்கிறார்கள். நம் குடும்பம் அன்பான குடும்பம் பெருமைப் பட்டுக் கொள்கிறோம்.  குடும்பத்தில்  கடவுள் இருந்தால் இத்தனை  கஷ்டங்கள் எப்படி வரும்? நம் வீடுகளில் கடவுள் இல்லை.  நாம் அன்பை அறியவில்லை. அன்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு உருவம் கொடுத்திருக்கிறோம்.  இனிமையாக பேசினால் அன்பு, தியாகம் செய்தால் அன்பு, நம்மையே நினைத்துக் கொண்டிருந்தால் அன்பு, நமக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னால் அன்பு, இல்லையென்றால் வம்பு - இப்படி பலவித எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டு  நம் வாழ்க்கையையும் மற்றவர்கள் வாழ்க்கையையும் சீரழித்துக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் கணவன் மனைவி, பெற்றோர் - பிள்ளைகள்,அக்காள் தங்கை, அண்ணன் தம்பி,  நண்பர்கள், உறவினர்கள் போன்ற எல்லா நெருங்கிய உறவுமுறைகளிலும் அன்பு என்ற போர்வைக்குள் வன்முறை மறைந்துள்ளது. அதனால் தான் நம் உறவு முறைகள் எல்லாம் அச்சம், வெறுப்பு, கோபம், ஏமாற்றம், வலி, வேதனை அளிப்பதாகவே  இருக்கிறது. 

வேதாந்தத்தில் மனக்குறைக்கு ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள், அகங்காரம்.  நிறைந்த மனதுக்கு ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள், ஆத்மா. 

நாம் ஏன் குரூரமான செயல்களை செய்கிறோம் என்று சிந்தனையை ஆரம்பித்தோம் இல்லையா?  இதோ இப்படித்தான்.

அறியாமையிலிருந்து அகம்பாவம். அகம்பாவத்திலிருந்து ஆசை. நிறைவேறாத ஆசையினால் கோபம்.கோபத்தினால் அறிவு கெட்டுப்போவது.  அறிவு கெட்டுப்போவதால்  ஏற்படும் அழிவு. 

பிறவியிலிருந்தே நம்மிடம் ஏதோ குறை இருப்பதாக உணர்கிறோம். அந்தக் குறையை நிறைவு படுத்தவே ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.  உலகத்தில் உள்ள பொருட்களும், மனிதர்களும் அந்தக் குறையை தீர்ப்பார்கள் என்று நம்பிப் போகிறோம், ஆனால் எதுவும் முடிவாக, முழுமையாக நம்மை திருப்திப் படுத்துவதில்லை. எல்லாக் கதவுகளும் ஏமாற்றத்தையே தருகின்றன. எங்கும் நிம்மதி கிடைக்கவில்லை.  இந்த ஏமாற்றத்தின் விளைவே வன்முறை.  

நம் வாழ்வின் குறிக்கோள் என்ன என்று கேட்டால் ஒரே வரியில் சொல்லி விடலாம். தனித்தனி குறிக்கோள்கள் எல்லாம் இல்லை. எல்லோருக்கும் பொதுவாக ஒரே ஒரு குறிக்கோள் தான். 

  நான் சரியில்லை, எனக்கு ஏதோ குறை இருக்கிறது, என்னை முழுமை படுத்தக் கூடிய பொருள் இந்த உலகத்தில் இருக்கிறது, அதைத் தேடி அடைவது தான் என் வாழ்க்கையின் குறிக்கோள். தேடும் பொருள் வேண்டுமானால் மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம்.  ஆனால், தேடல் ஒன்று தான்.   

உண்மையில் நமக்கு மனக்குறை என்று ஒன்று உள்ளதா? யார் சொன்னார்கள் நாம் சரி இல்லை என்று?   இதைப் பற்றி நாம் எப்போதும் சந்தேகப்பட்டதே கிடையாது. ஒருவேளை, நான் குறைபட்டவன் என்று நம்புவது பொய்யாக இருந்தால்? அது வெறும் கற்பனையாக இருந்து விட்டால்? இப்படி எல்லாம் கேள்வி கேட்டதே இல்லையே?   என்னிடம்  குறை இருப்பதாகத் தானே அனைவரும் சொல்கிறார்கள்? 

ஒரே  குழப்பமாக இருக்கிறதா? சரி, விடுங்கள். இப்போதைக்கு  மனக்குறை  இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஏனென்றால் திருப்தி இல்லை என்பது தான் நம் யதார்த்தமான உண்மையாக இருக்கிறது இல்லையா?  

ஆன்மிகம் என்பது மனக்குறையிலிருந்து விடுதலை.  

இவ்வளவு நேரம் நாம் நம்மைப் பற்றி பல விஷயங்களை தெரிந்து கொண்டோம் அல்லவா? நம் விருப்பங்கள் நமக்கு நல்லது செய்வதில்லை என்று புரிந்தது இல்லையா? இப்போது எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது!!!  இந்த புரிந்து கொள்ளும் திறன் தான் ஆன்மிகம்.  ஏன் புரிந்து கொள்ள வேண்டும்?  ஏனென்றால், புரியாவிட்டால் துன்பப்படுகிறோம். துன்பம் என் சுபாவம் இல்லை, அது எனக்குப்  பிடிக்கவில்லை. புரிந்து கொள்வது என் இயல்பு. அதனால் புரிந்து கொள்ள வேண்டும்.

~பரமேஸ்வரி 

பரம்அத்வைத்.



 


Monday, November 6, 2023

அறிந்ததிலிருந்து விடுதலை

 அறிந்ததிலிருந்து விடுதலை

மற்றவர்களை பற்றி நினைத்து நாம் நிம்மதியாக இல்லை. நாலு பேர் என்ன சொல்வார்கள் என்று பயப்படுகிறோம். மற்றவர்கள் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்து நடுச்சாமத்தில் தூங்க விடாமல் தவிக்க விடுகின்றன. நம்மால் சகஜமாக மகிழ்ச்சியாக இருக்கவே முடிவதில்லை. நம்மைப் பற்றியே நமக்கு சந்தேகம், குற்ற உணர்ச்சி ஏற்பட்டு குறுகிப்போகிறோம்.
மற்றவர்கள் நம் மனதை பந்தாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தாலும் நம்மால் ஒன்றுமே செய்ய முடிவதில்லை. அவர்களை பற்றிய எண்ணங்களை கட்டுப்படுத்தவே முடிவதில்லை. நான் சரியானவன், சிறப்பானவன், குறை ஏதும் இல்லாதவன், என்னை ஏன் மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று புலம்பியே வாழ்க்கை முடிந்து விடுகிறது.
ஏன் மற்றவர்களின் கருத்துக்கு இவ்வளவு மதிப்புக் கொடுக்கிறோம்? நாம் நிம்மதியாக இருப்பதைக் காட்டிலும் மற்றவர்களின் மனதில் இடம் பிடிப்பதில் ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கிறோம்? என் நலனை விட நாலு பேரின் அங்கீகாரம் ஏன் அவசியமாகப் படுகிறது?
இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் brain என்று சொல்லப்படுகிற மூளையின் பரிணாம வளர்ச்சி தத்துவம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
காட்டிலிருந்து வெளி வந்த பிறகு மனிதர்களாகிய நாம் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்திருக்கிறோம். கூட்டத்தில் இருப்பது நமக்கு பாதுகாப்பு. நம்மை கூட்டம் ஏற்றுக்கொள்ள வேண்டும், அப்போது தான் உணவு, உடை, இருப்பிடம் எல்லாம் கிடைக்கும். எனவே, உயிர் பிழைக்க வேண்டுமென்றால் கூட்டத்தின் அங்கீகாரம் இன்றியமையாதது. இயற்கையின் தத்துவத்தின் படி இவ்வுலகில் பலமுள்ளவன் தான் வாழ முடியும் survival of the fittest . பலர் நம்மை ஏற்றுக்கொண்டார்கள் என்றால் வாழக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை நம்மை பலருக்குப் பிடிக்கவில்லை என்றால் நாம் இறந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
உடலைக் காப்பாற்றுவதும் அதை நீண்ட நாட்கள் வாழ வைப்பது தான் மூளையின் ஒரே நோக்கம். அதனால், நாம் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப் படுகிறோமா அல்லது நிராகரிக்கப் படுகிறோமா என்பது நம் மூளைக்கு மிக மிக முக்கியம். மற்றவர்கள் என்பதே அதற்கு அச்சுறுத்தல் தான். மற்றவர்களின் கருத்துக்கள் அதற்கு மிக முக்கியம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது மிக அவசியமான தகவல் (input ) .
காலம் மாறி விட்டது. நாம் இன்னமும் நாடோடிகள் இல்லை. அறிவில் வெகுவாக வளர்ச்சி அடைந்து விட்டோம். கலை, அறிவியல், தொழில் நுட்பம், பொருளாதாரம், விவசாயம் என்று பல துறைகளில் பெரு வளர்ச்சி அடைந்து விட்டோம். பழங்கால மனிதன் போல் கூட்டத்தில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. கூட்டத்தின் அச்சுறுத்தல் இல்லை. ஆனாலும் மூளை தான் கற்றுக்கொண்டதை இன்னமும் மறக்கவில்லை. கூட்டத்தின் ஆதரவு இருந்தால் தான் வாழ முடியும் என்று அது முடிவு செய்து வைத்திருக்கிறது. அது ஆட்டோமேட்டிக்காக ஓடும் ஒரு செயலி (app ) இப்போது புரிந்திருக்கும் என் நாம் மற்றவர்களின் கருத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று.
குடும்பத்திலும், சமுதாயத்திலும் நாம் மதிப்பு மரியாதையுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். நம்மை யாராவது அடித்து விட்டால் கூட அவ்வளவு கோபம் வராது, ஆனால் அவமானப்படுத்தி விட்டால் கொதித்து எழுந்து விடுவோம். கோபம் என்பது உடலுக்கு வந்த ஆபத்தை எதிர்க்கும் மூளையின் ஒரு தந்திரம், technique . எதிராளி பலமற்றவன் என்று தெரிந்தால் கோபத்தைக் காட்டும், பலசாலி என்றால் பயத்தைக் காட்டும். மூளையைப் பொறுத்த வரை மானம், அவமானம் என்பது வாழ்வா, சாவா என்பதை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகள்.
மூளைக்கு அதீத கற்பனைத் திறன் உண்டு. அது உள்ளதை உள்ளபடி பார்க்காது, அதில் தன் கற்பனையை ஏற்றித்தான் பார்க்கும். ஏனென்றால், உயிர் வாழ அனுமானிக்கும்(prediction ) திறன் அவசியம். ஒருவரைப் பார்த்தவுடன் இவர்கள் எப்படிப்பட்டவர்கள், என்ன உள்நோக்கத்தில் பேசுகிறார்கள், இவர்களால் நமக்கு இடைஞ்சல் வருமா என்றெல்லாம் முன் கூட்டியே கணிக்க வேண்டி இருக்கிறது. இவ்வுடல் வாழத் துணை புரிபவரை நல்லவர்கள் என்றும், துணை புரியாதவர்களை கெட்டவர்கள் என்றும் மூளை எடுத்துக்கொள்ளும். அதனால் தான், யாராவது நமக்கு உணவு கொடுத்தால் அவர்களை விரும்புகிறோம். முன்பெல்லாம் சாப்பாடு வாங்கி கொடுத்தால் போதும், நல்லவர்கள் என்று நம்பி விடுவோம். புகழ்ந்து பேசினால் உள்ளம் குளிர்ந்து விடுவோம். புகழ்ச்சி என்பது positive சிக்னல். நம் மூளை அதி புத்திசாலியாக இருந்தால், இவன் எதற்கு நம்மை புகழ்கிறான் என்று யோசிக்கும். இதன் பின்னணி என்ன என்று தன் பழைய அனுபவங்களை எல்லாம் வைத்து ஆராய்ச்சி செய்து பார்க்கும். பிறகு ஒரு முடிவுக்கு வரும்.
உதாரணத்திற்கு, நாம் ஒரு காட்டு வழியாக போய்க்கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மரத்தில் பழுத்த பழங்களை பார்க்கிறோம். அதே சமயத்தில் அங்கே சலசல வென்று ஏதோ சத்தம் கேட்கிறது. பின்னால் ஏதாவது மிருகம் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் வருகிறது. தெளிவாக பார்க்க முடியவில்லை, ஆனால் ஒரு முடிவு செய்ய வேண்டும். பழத்தை பறித்து சாப்பிடலாமா அல்லது ஓடிவிடலாமா? அங்கே விலங்கு எதுவும் இல்லை என்று நினைத்தால் பழத்தைப் பறித்து சாப்பிட்டு பசியாறிக்கொள்ளலாம். ஒருவேளை சிறுத்தையோ, புலியோ இருந்து விட்டால் அதற்கு நாம் உணவாக வேண்டியது தான். மூளை ஆபத்தை (risk ) தேர்ந்தேடுக்க விரும்பாது. அங்கே புலி இல்லை என்பதை நம்புவதை விட புலி இருக்கிறது என்பதைத் தான் நம்பும். அங்கே புலி மறைந்திருப்பதாக கற்பனை செய்யும். உயிரைக் காப்பாற்ற இப்படிப்பட்ட அமைப்பு உள்ளே செயல்பட்டாக வேண்டும். பழம் போனால் போகிறது, ஒரு வேளை புலி இருந்து விட்டால் உயிரே போய் விடும். எனவே, புலி இருப்பதற்கு ஒரு சதவிகிதம் வாய்ப்பு இருந்தால் கூட அது புலி இருக்கலாம் என்று தான் எடுத்துக்கொள்ளும்.
இப்போது நாம் காட்டில் வாழவில்லை, புலி, சிங்கம், பாம்பு பயம் இல்லை, ஆனால், நம்மை சுற்றி மனிதர்கள் இருக்கிறார்களே!!! எனவே தான், நாம் மற்றவர்களை பற்றி கருத்துக்கணிப்பு (judgement ) செய்துகொண்டே இருக்கிறோம். இந்த கருத்துக்கணிப்புகள் சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். பெரும்பாலும் நாம் பயத்தின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்பதால், நம் மூளை சொல்வதெல்லாம் உண்மை என்று நம்ப முடியாது. மூளை உடலுக்கு சேவகன் அல்ல, நான் என்ற அகங்காரத்துக்கு சேவகன். உடல் என்பது அகங்காரத்தின் வெளி உருவம் தான். அகங்காரம் வாழ வேண்டும். அதற்காகத் தான் மூளை வேலை செய்து கொண்டிருக்கிறது. அடித்துவிட்டால் கூட மன்னித்து விட்டு விடுவோம், ஆனால் நம்மை ஏளனம் செய்தவர்களை, தூற்றியவர்களை நினைத்துக் கருவிக் கொண்டே இருப்போம். ஆணவம் (ego ) அடிபடுவது உடல் அடிபடுவதை விட ஆபத்தானது. ஈகோவை காய படுத்துபவர்கள் மூளைக்கு பயங்கர ஆபத்தாக (threat ) தெரிகிறார்கள்.
இப்போது புரிகிறதா நாம் என் மற்றவர்களின் கருத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம் என்று? அது மட்டுமல்லாமல் மற்றவர்களைப் பற்றி நல்ல விதமாக நினைப்பதை விட தவறானவர்கள் என்று நினைப்பது என்பது ஈசியாக இருக்கிறது. ஏனென்றால், மூளை ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. நுட்பமாக கவனித்தோம் என்றால் இன்னொன்றும் புரியும். மற்றவர்களை தவறானவர்கள் என்று அறிவித்து விட்டால் மறை முகமமாக நான் சரியானவன் என்பது நிலை நாட்டப் படுகிறது. எனவே, மற்றவர்கள் சரியில்லை என்று முத்திரை குத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இரண்டு பேர் பேசிக்கொண்டிருக்கும் போது சமயத்தில் பேச்சு வார்த்தை வாத விவாதமாக மாறிவிடும். இருவரும் தான் கூறுவதே சரி என்று நிலை நாட்டப் பார்ப்பார்கள். மற்றவர்கள் சொல்வதை முதலில் காது கொடுத்துக் கேட்கவே மாட்டார்கள், கேட்டாலும் அதை திரித்துத் தான் பொருள் கொள்வார்கள், தான் சொல்வது தான் சரி என்று நிரூபிக்கவே முயற்சி செய்வார்கள். அது ஏறத்தாழ ஒரு யுத்தம் போன்றது தான். யார் ஜெயிப்பார்கள், யார் தோற்பார்கள் என்று ஒரே போராட்டமாக இருக்கும். வாதத்தில் தோற்பது என்பது மரணம் என்றே மூளை எடுக்கிறது. எப்படியாவது அதில் ஜெயிக்க வேண்டும் என்று அதி தீவிரமாக யோசித்து தன் வாதத்தை முன் வைக்கும். மீறினால் பலாத்காரத்தில் ஈடுபடுவார்கள். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என் அம்மாவும் அப்பாவும் தாயம் விளையாடுவார்கள். அதில் இரண்டு மூன்று முறை என் அம்மா ஜெயித்து விட்டால் என் அப்பா கோபத்தில் ஆட்டத்தைக் கலைத்து விட்டு, அம்மாவையும் திட்டி விட்டு எழுந்து போய் விடுவார். தோற்பதை ஆணவம் விரும்பாது.
அலுவலகத்தில் நம்மை ஒடுக்கப் பார்ப்பவர்களைக் கண்டால், நம் மூளை காட்டில் ஒநாயைக் கண்டால் என்ன உணர்வுகளை உடலில் ஏற்படுத்துமா, அதே உணர்வுகளை ஏற்படுத்தும். பெண்களைக் கண்டால் ஏற்படும் கிளர்ச்சி உடலின் தொடர்ச்சியை இன்பம் என்று மூளை அறிவிப்பது ஆகும். ஆண்களின் வலிமையான தோள்கள் பெண்களுக்கு பாதுகாப்பு என்ற உணர்வை கொடுத்தது போல் ஆண்களின் பணமும் வசதியும் கூட பாதுகாப்பு என்ற உணர்வை தருகிறது. எல்லாம் நம் மூளையின் அறிவு விளக்கம்( interpretation )தான். நமக்கே தெரியாமல் நமக்குள் இருந்து கொண்டு எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறது நம் கிரே மேட்டர். அதை நல்லது என்று அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாது, கெட்டது என்று ஒதுக்கவும் முடியாது. அதனால் தான் விவேகம் வேண்டும், பகுத்தறிவு வேண்டும், சிந்தித்து செயல் பட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.
பரிணாம வளர்ச்சியில் உடல் தன் அனுபவத்தால் அறிந்து கொண்டவைகள் உடலில் பதிந்து விட்டன. அதை physical conditioning என்று சொல்கிறோம். அதற்கு மேல் சமூகம், குடும்பம், கல்வி, மதம்,பண்பாடு, சினிமா, அரசியல், ஊடகம் என்று பல்வேறு அடுக்குகளில் மூளை பதப்படுத்தப் பட்டிருக்கிறது. அதற்க்கு social கண்டிஷனிங் என்று பெயர். குழந்தையாக இருந்த போது உடல் இயற்கை மட்டுமே நம்மை கட்டுப் படுத்தியிருக்கும், ஆனால் வளர வளர நாம் சந்தித்த அனுபவங்கள் நம் மனதில் பலவித மாற்றங்களை, கருத்துகளை, நம்பிக்கைகளை மூளையில் ஏற்றி விட்டு விட்டது. நமக்கு நம் மூளை எப்படி வேலை செய்யும் என்று தெரிவதை விட, சந்தைக்கும், அரசியல்வாதிக்கும், சினிமாக்காரர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஏன், உங்களை விட ஓட்டல் கடைக்காரர்களுக்கு உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். எந்த நிறத்தில் எந்த வாசனையில் உணவைக் கொடுத்தால் உங்களுக்கு நாவில் எச்சில் ஊறும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். உங்கள் மூளையின் புரோகிராமை வைத்துத் தான் உலகில் வியாபாரமே நடக்கிறது. குழந்தைகள் மேல் உங்களுக்கு மோகம் என்று வியாபாரிகளுக்கு தெரியும். நீங்கள் எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்குவீர்கள். அதனால் தான் குழந்தைகள் சம்பந்தப்பட்ட எல்லாமே கொள்ளை விலை விற்கிறது.
மூளையின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம் என்று இப்போது புரிகிறதா? மூளையின் இயக்கத்தை புரிந்து கொண்டால் அது நமக்கு சேவகன், இல்லையென்றால் அது எடுப்பார் கைப்பிள்ளை. இது புரியவில்லை என்றால் பிரச்சினைகளை உருவாக்க வேறு யாரும் தேவை இல்லை, நமக்கு நாமே எதிரி தான்.
நம் மூளை எப்படி இயங்குகிறது என்று எப்படிப் புரிந்து கொள்வது?
அதற்கு நாம் விழிப்போடு நம் செயல்களையும், எண்ணங்களையும் கவனிக்க வேண்டும். மூளை ஒரு எந்திரம், ஒரு தானியங்கி புரோகிராம். நம் மனதில் எழும் எண்ணங்களை உண்மை என்று நம்பக்கூடாது. அது என்ன தான் சொல்கிறது என்று பாகுபாடின்றி கேட்க வேண்டும். வெறுமனே அமைதியாக கவனித்தால் தான் அதன் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். உங்கள் அன்றாட வாழ்வில் என்ன மாதிரி வடிவமைப்பு (pattern ) உள்ளது என்று பாருங்கள். திரும்ப திரும்ப ஒரே மாதிரி எதிர் வினை புரிகிறோம் என்று பாருங்கள். நம்முடைய நடத்தையிலுள்ள மாதிரிபடிமங்கள் மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டால், அது போதும், அதை வைத்து நம்மை சுலபமாக அடிமைப் படுத்திவிடலாம். தர்மன் உண்மை மட்டுமே பேசுவான் என்பது அவனுடைய படிமானம், pattern. அதைத் தெரிந்து கொண்டு அவனை சூதாட்டத்தில் சகுனி வென்றான். மகன் மேல் கொண்ட மோகம் தான் துரோணாச்சாரியின் படிமானம். அதை வைத்துத் தான் அவரை வீழ்த்த முடிந்தது. நம் படிமானம் என்ன என்று மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கு முன் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். unpredictable ஆக கணிக்கமுடியாதவர்களாக இருங்கள்.
நம்முடைய நோக்கமும் மூளையின் நோக்கமும் ஒன்று இல்லை. நமக்கு புரிந்து கொள்வது என்பது சுபாவம். மூளைக்கு பழக்கத்தில் வாழ்வது சுபாவம். நமக்கு விடுதலை பெரிது, மூளைக்கு சாப்பாடு பெரிது. நமக்கு அன்பு, கருணை, விடுதலை, அகிம்சை, தயவு, புத்தர், கிருஷ்ணர் எல்லாம் முக்கியமானவை. இதெல்லாம் மூளைக்குப் புரியாது, பசி, தாகம், உடலின்பம், குழந்தைகள், பிறப்பு, இறப்பு, உடலைக் காப்பாற்றுவது இதில் தான் மூளைக்கு அக்கறை.
நாம் யார்? மூளை என்பது என்ன? இந்த வேறுபாடு தெளிவாகத் தெரிய வேண்டும். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், மூளைக்கு தனக்கு வெளியே உள்ளவற்றைத் தெரிந்து கொள்ளும் திறன் இருப்பது போல், திரும்பிப் பார்த்துத் தன்னைத்தானே புரிந்து கொள்ளும் திறனும் உண்டு. அதாவது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமால் தன் புரோகிராம் என்ன என்று தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் நம் மூளையால் தன்னுடைய புரோகிராம் என்ன, ஆப்பரேட்டிங் சிஸ்டெம் என்ன என்று தெரிந்து கொள்ள முடியும். மனித மூளை ஒரு அற்புதமான படைப்பு. படிப்பறிவற்றவன் கையில் கிடைத்த லேட்டஸ்ட் மொபைல் போன் போல அதை வைத்துக்கொண்டு என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறோம்.
"உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்."
தன்னை அறிந்து கொள்வது தான் வாழ்க்கை நெறி. நம்மை அறிந்து கொண்டால் நாலு பேர் என்ன சொல்வார்கள் என்று எண்ணிக் கலங்க வேண்டியதில்லை. புவியில் யாருக்கும் தலை வணங்க வேண்டாம். நாம் என்ன செய்ய வேண்டும் என்று யாரிடமும் போய் கேட்க வேண்டியிருக்காது, இறைவனிடமிருந்து நேரடி ஆணை வரும். இது தான் விடுதலை. பாருங்கள் விடுதலை என்ற சொல்லிலே விடு + தலை என்று இருக்கிறது. தலை என்பது நாம் அறிந்தவைகளை எல்லாம் குறிக்கும். ஜே.கிருஷ்ணமூர்த்தி இதைத்தான் அறிந்ததினின்றும் விடுதலை என்று சொல்வார்.
ஆசிரியர் : பரமேஸ்வரி
~ பரம்அத்வைத்.

Saturday, November 4, 2023

யார் பெரியவர்?

 நாம் குழந்தைகளாக இருந்த போது, நீ  பெரியவர்களை மதிக்க வேண்டும், எதிர்த்துப் பேசக் கூடாது, அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.  ஆனால் யார் பெரியவர்கள் என்று யாருமே சொல்லவில்லை. நாமும் அவர்களிடம் கேட்கவில்லை. சிறு வயது. புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவாற்றல் இல்லை. எனவே,  நம்மை விட உருவத்தில், உயரத்தில், வயதில் பெரியவர்களை "பெரியவர்கள்" என்று யோசிக்காமலேயே ஏற்றுக் கொண்டுவிட்டோம். நமக்கு அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா எல்லாரும் பெரியவர்கள் தான். சிலரை தெய்வத்துக்கு சமமாகக் கூட  சொன்னார்கள். அதையும் எப்படி என்று கேள்வியே  கேட்காமல் ஏற்றுக்கொண்டு  விட்டோம். அனாவசியமாக கேள்வி கேட்டால் அடி தான்  விழும். 

பெரியவர்கள் (என்று சொல்லப்படுபவர்கள்..so called ) சொல்வதை அப்படியே கேட்டதனால் தான் நம் வாழ்வில் இத்தனை குழப்பங்கள், சிக்கல்கள்.  வீட்டுக்கு வந்து போகிற பக்கத்துக்கு வீட்டு மாமா  கூட நாம் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை சொல்வார், நாமும் கேட்டுக் கொள்ளவேண்டும்.  நம்மை வழி நடத்த அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்பதே இல்லை. அப்பா சொல்லிவிட்டார்கள் என்று ஒரு படிப்பு படிப்போம், அம்மா சொன்னார் என்று ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஒத்துக்கொள்வோம்.  நம் வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய அளவுக்கு அவர்களுக்கு தகுதியும், திறனும் உள்ளதா என்று சீர் தூக்கிப் பார்ப்பதே இல்லை. பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி நம் வாழ்வின் மிக முக்கியமான முடிவுகளை அவர்கள் கையில் கொடுக்கிறோம்.  உண்மையில் இது அவர்கள் மேல் வைத்த நம்பிக்கை இல்லை, நமக்கு சிந்தனை செய்ய சோம்பேறித்தனம்.  தானாக யோசிப்பது மிகவும் கடினம்.  நாமே முடிவு செய்ய பயம், ஏனென்றால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை சந்திக்கவோ, பொறுப்பு எடுத்துக்கொள்ளவோ நாம்  தயாராக இல்லை. 

நாம் அன்றாடம் பயன் படுத்தும் வார்த்தைகள் - பணம், வேலை, மரியாதை, முன்னேற்றம், வெற்றி, காதல், அன்பு, திருமணம்.  இவை பற்றி நாம் சிந்தித்துத் தெரிந்து கொண்டோமா  அல்லது  குருட்டாம்போக்காக யார் யாரோ சொல்வதையெல்லாம் நம்பிக்கொண்டு, காலம் காலமாக நடைமுறையிலுள்ள  பழக்க வழக்கங்களை கடை பிடித்துக்கொண்டு அதன் அடிப்படையில் வாழ்வை  நடத்திக்கொண்டிருக்கிறோமா?  நம் வாழ்க்கையை உண்மையில் நாம் தான் வாழ்கிறோமா?  உண்மையில் நாம் வாழ்வின் அடிப்படையான விஷயங்களை பற்றிக்கூட தெரிந்து கொள்ளாமல் அறியாமையில் தான்  இருக்கிறோம்.  நம்மிடம் புரிந்து கொள்ளும் திறன் இல்லாமல் இல்லை, ஆனால், எனக்கு எல்லாம்  தெரியும் என்று நினைத்துக்கொள்கிறோம். இத்தனை கோடி மக்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள், சரியாகத்தான் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை.  நமக்கு எதுவும் தெரியாது, எல்லாம் புகுத்தப்பட்டவை , திணிக்கப்பட்டவை.  நேர்மையாக, நேரடியாக வாழ்வை நம் கண்களால் நாம் பார்த்து உணரவே இல்லை. கேள்வி கேட்காமல் வெறும் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நம் வாழ்வை கட்டமைத்திருக்கிறோம்.   அதனால் தான் நாம் எவ்வளவு தான் என்ன தான் முன்னேற்றம் அடைந்தாலும் மனதில் வெறுமையும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சுகிறது. நாம் உண்மையில் மகிழ்ச்சியாக, மனநிறைவாக இல்லை. 

உண்மையில் யார் பெரியவர்கள்?  

இது ஓவ்வொருவரும் கேட்க வேண்டிய மிகவும் முக்கியமான கேள்வி.  ஏனென்றால், நாம் பெரியவர்கள் என்று மதிப்பவர்கள்தான் நம் வாழ்வின் திசையையே தீர்மானிக்கிறார்கள். 

 டாக்டர் மதிப்புக்குரியவர் என்று நினைத்த நினைப்பு பலரை டாக்டராகவே மாற்றி விட்டிருக்கிறது. விஞ்ஞானியை மதித்தோம் என்றால், விஞ்ஞானியாகக் கூடிய வாய்ப்பு உண்டு.  பணக்காரர்கள் தான் மதிப்புக்குரியவர்கள் என்று நினைத்தால், நம் வாழ்வும்  பணம் சம்பாதிப்பதைத்தான் இலக்காகக் கொண்டு ஓடும். எனவே, நாம் எதற்கு மதிப்புக் கொடுக்கிறோம், யாரை வணங்குகிறோம் என்பதில் மிக மிகக்  கவனமாக இருக்க வேண்டும். நம் அறிவு எதை, யாரை மதிப்புக்குரியதாக கருதுகிறதோ அதன் படி தன் வாழ்வை வடிவமைத்துக்கொள்ளும். 

சமூகத்தில் பொதுவாக யாருக்கு மதிப்பு  என்று பார்த்தால், பணம், செல்வாக்கு உள்ளவர்களுக்குத் தான் பெரிய மதிப்பு இருக்கிறது. அவனுக்கென்ன, பங்களா வீடு, கார், ஏகப்பட்ட சொத்து, கட்சியில் பிரபலம், மில் ஓனர்  பெரிய ஆள் என்கிறோம்.  சிம்பிள் ஆக சொல்ல வேண்டுமென்றால் பெருமை பட வாழ் என்றால் கோடிக்கணக்கில் பணம், பெரிய வீடு, மனைவி, மக்கள், சொகுசு கார், படிப்பு, செல்வாக்கு எல்லாம் பெற்று வாழ் என்று  பொருள். மகனை நினைத்து பெற்றோர்கள் பெருமைப்படுகிறார்கள் என்றால், வேறு ஒன்றும் இல்லை, மகன் பெரிய பதவி, கை நிறைய சம்பளம், கார், பங்களா என்று வாழ்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டியது தான். 

பெற்றோர்கள், வயதில் பெரியவர்கள், காசு பணம் படைத்தவர்கள், பிரபலமானவர்கள், குறிப்பிட்ட  ஜாதிக்காரர்கள், திறமைசாலிகள், கோயில் பூசாரிகள், ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள், கிரிக்கெட் வீரர்கள்,  அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் - இவர்கள் எல்லாம்  பெரியோர்கள் அல்ல.  சாதாரண மனிதர்கள் தான். அப்படியென்றால் யார் தான் பெரியவர்கள்???!!!  

குரு கபீர் தாசர் இந்தக்குறளில் ஒரு எளிமையான உதாரணம் கொண்டு யார் பெரியவர்கள் என்று விளக்குகிறார். 

"பெரிதாக இருந்து என்ன பேரீச்சை மரத்தைப் போல் 

பயணிக்கு நிழலில்லை, பழமோ வெகு தொலைவில்."

बड़ा भया तो क्या भया, जैसे पेड़ खजूर ।

पंथी को छाया नहीं फल लागे अति दूर ।

பலர் பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டு இருப்போம், ஆனால் பேரீச்சம் மரத்தை பார்த்திருக்க மாட்டோம். நாங்கள் வளைகுடா நாடுகளில்  வசித்து வருவதால் பேரீச்ச மரங்களை எல்லா இடங்களிலும் பார்க்கலாம்.  தென்னை மரம் போல் உயரமாக இருக்கும், அதன் பழங்கள் உயரத்தில் இருக்கும்.  வருடத்திற்கு ஒரு முறை தான் பழங்கள் வரும்.  பாலை வனத்தில் பயணம் செய்பவர்கள் நிழலுக்கு ஒதுங்கலாம் என்றால் பேரிச்சை மரம் நிழல் கொடுக்காது. பசிக்கு பழங்களாவது உண்ணலாம் என்றால் அது மிக உயரத்தில் இருக்கும், கைக்கு எட்டாது.  பெரிய மரமாக இருந்து என்ன பயன்?  நிழலும் இல்லை, பழமும் கைக்கெட்டாத தூரத்தில்.  

பெருமைக்குரியது ஒன்றே ஒன்று தான். பெரியது என்று அதை மட்டும் தான் சொல்லலாம்.  அது குறைவற்றது. அளவில்லாதது. பெருமைக்குரியவர்கள்  யார் என்பதற்கு ஒரே ஒரு இலக்கணம் தான்.  அவர்கள் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.  உள்ளே நிறைந்து இருந்தால் அது வெளியே விரிந்து செல்லும்.  எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்பது அளவுகோல் அல்ல, அவர்கள் கொடுக்கிறார்களா என்பது தான் அளவுகோல். 

கோடிக்கணக்கில் பணம் இருந்தும், பசித்தவர்களுக்கு ஒரு பத்து ரூபாய் கொடுக்க மனமில்லை என்றால் அவர்கள் பெரியவர்கள் இல்லை.  வயதில் மூத்தவர்கள் என்பதால், அனுபவம் மிக்கவர்கள் என்பதால் பெரியவர்கள் என்று சொல்ல முடியாது.  அவர்கள் தன்னிடம் உள்ளவற்றை பகிர்ந்து கொடுக்கிறார்களா என்று பாருங்கள்.  என்னுடையது, என்னுடையது என்று இறுக்கிப்பிடித்துக்கொண்டு இருந்தார்கள் என்றால்  அவர்களை நாம் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை.  அதற்காக, அவமதிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, அவர்கள் பெருமைக்குரியவர்கள் என்று நினைத்து அவர்கள் காலில் விழ வேண்டிய தேவை இல்லை.  வயதில் பெரியவர்கள், அனுபவசாலிகள் என்று அவர்கள் சொல்வதைக்  கேட்டு நடக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறோம். அனுபவத்துக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை. அவர்கள் சராசரியான மனிதர்கள் தான். அவர்களிடம் சிறப்பு எதுவும் இல்லை. 

 உணவைக்கொடுப்பவர்கள், பணம், பொருட்கள் கொடுப்பவர்கள்,  நேரத்தைக் கொடுப்பவர்கள்,  அறிவைக்கொடுப்பவர்கள், அன்பைக்கொடுப்பவர்கள் எல்லோரும் பெரியவர்கள் தான். இதில் தன்னிடம் உள்ள பொருட்களத்  தருபவர்களை விட தன் இருத்தலையே தருபவர்கள் மிகப்பெரியவர்கள்.  அன்பானவர்கள் அன்பைத்  தருகிறார்கள்.  அவர்களின் இருப்பே மனதில் அமைதியை ஏற்படுத்தும் - குறிப்பிட்ட நாலு பேருக்குத் தான் கொடுப்பேன் என்று சொல்லாது.  மலரின் மனம் போல் எல்லா இடங்களிலும் அவர்கள் அன்பு பரவும். பெருமையின் அடையாளம் என்னவென்றால், பகிர்தலுக்கு நாம் ஒரு ஊடகமாக(medium ) இருப்போம் .  அது சுயநலமில்லாத பகிர்தலாக இருக்கும். நான் கொடுத்தேன் என்ற எண்ணம் கூட  இருக்காது. 

அப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களைக் காண்பது அபூர்வம் தான். அவர்களைத் தான் நாம் வணங்க வேண்டும், வழி பட வேண்டும்.  ஊடகத்தில் லட்சக்கணக்கில் followers இருப்பதால் பெரிய ஆளாகத்தான் இருக்க வேண்டும், நானும் follow பண்ணுகிறேன் என்று யாரையாவது பின்பற்றினோம் என்றால், நாம் தகுதியற்றவர்களை சிம்மாசனத்தில் அமர வைத்து விட்டோம் என்று அர்த்தம்.  எனவே, நாம் யாரை மதிக்கிறோம் என்பதை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.  நம் தலை எல்லோருக்கும் குனிந்து விடக்கூடாது.  குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்வார்கள்.  மோதிரம் என்பது தகுதியைக்குறிக்கும். பெரியவர்கள் கையால் குட்டுப்படுவது நல்லது தான்.  அவர்கள் முன் மட்டுமே நம் தலை தாழ வேண்டும்.  மற்றவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும், எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும், சராசரியானவர்கள் தான். அவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கத் தேவை இல்லை.  

நான் மிகவும் மரியாதை செய்யும் ஞானி, அன்பர், குரு கபீர் தாசர்.  சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன் வடஇந்தியாவில் வாழ்ந்த மெய்ஞ்ஞானி கபீர் தாசர். அவர் ஒரு  நெசவாளி. படிப்பறிவு இல்லாதவர், ஆனால் வாழ்வின் நுட்பமான உண்மைகளை  எளிய பாமர மக்களும் புரிந்து கொள்ளுமாறு எளிமையான மொழியில் பாடல்களாகக் கொடுத்துள்ளார்.   தமிழர்கள் நாமும் அவரின் செறிந்த வாழ்க்கை தத்துவங்களைத்  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால் நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பகிர்ந்து அளிக்கிறேன்.  

~ பரமேஸ்வரி.

பரம் அத்வைத்.









 




Thursday, November 2, 2023

மனம் குளிராதோ!

 "அகத்தீயை அணைக்கும் சொற்களைப் பேசுங்கள் 

பிறரும் குளிர்ந்து தானும் குளிருமாறு."

ऐसी वाणी बोलिए मन का आप खोये ।

औरन को शीतल करे, आपहुं शीतल होए ।

~கபீர் தாசர்.

கபீர் தாஸரின் இந்தக்குறள் நம் பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்று விளக்குகிறது. பொதுவாக இதை மொழிபெயர்ப்பவர்கள், "நாம் பேசும் வார்த்தைகள் இனிமையாக இருக்க வேண்டும், மனம் சங்கடப்படுவது போல்  பேசக்கூடாது. பிறரின் மனம் குளிருமாறு இருக்க வேண்டும், அதே சமயம், நம் மனமும் குளிரவேண்டும்." என்று மொழிபெயர்க்கிறார்கள். 

பேசுவது என்பது ஒரு நடத்தை (behavior ). காலம் காலமாக நம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் நமக்கு எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிகொடுத்திருக்கிறார்கள். வணக்கம் சொல்ல வேண்டும், வாங்க போங்க என்று 'ங்க' போட்டு தான் பேச வேண்டும்,  மற்றவர்கள் மனம் புண் படுவது போல் பேசக்கூடாது. மற்றவர்கள் மனம் மகிழ்வது போல் பேச வேண்டும் என்றெல்லாம் சொல்லி சொல்லி  வளர்த்தார்கள். நாமும் குழந்தைகளுக்கு  மூன்று மாஜிக் வார்த்தைகள் பேச சொல்லிக்கொடுக்கிறோம்  - தேங்க்ஸ், ப்ளீஸ், சாரி. அவ்வளவு தான்.  வெறும் பேச்சை மாற்றி விட்டால் போதும், வேறு ஒன்றும் செய்ய தேவையே இல்லை. 

மனதில் என்ன இருந்தாலும் சரி, இனிமையாக பேச வேண்டும், குறை சொல்லக்கூடாது, புகழ வேண்டும்.  நமக்கும் அது  சுலபமாகப்  போய் விட்டது.   இன்முகம், இனிமையான பேச்சு என்ற முகமூடியை மாட்டிக்கொண்டோம்.  சுமூகமான உறவு முறைக்கு இது போதும்.  எதற்கு வம்பு!!! நல்லா இருக்கீங்களா? வீட்டில் எல்லோரும் சௌக்கியமா?  உங்க ஆசீர்வாதத்தில்  நானும் நல்லா இருக்கேன். உங்களை போல் நல்ல மனிதர்களை பார்ப்பதே அபூர்வமா போச்சு.  உங்க குணம் யாருக்கு வரும்!!  புது கார் சூப்பர் சார், நல்ல செலக்க்ஷன். உங்களை நினைக்காத நாளே இல்லைங்க சார். உங்க முக ராசி சார் எல்லாம்!!!   வாய்ப் பேச்சில் வல்லவர் ஆகி விட்டோம்.  தேனை தடவிப் பேசு, நாலு வார்த்தை புகழ்ந்து பேசு, அவ்வளவு தான். நடத்தையில் சிறிது மாற்றம் கொண்டு வந்தால் போதும், எல்லாம் சரியாகி விடும். இது தான் நம்மமுடைய  கருத்து. அப்படிதான் நாம் வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம். 

கபீர் தாசர் சொல்ல வரும் அறிவுரை இது அல்ல. இந்தக்குறளில் முக்கியத்துவம் வாய்ந்த சொல், பேசுவது அல்ல, மனதின் குளிர்ச்சி.  கபீர் சொல்கிறார், "குளிர்ந்த மனதிலிருந்து வரும் சொற்கள் மட்டுமே மற்றவர்களின் உள்ளத்தில் கனன்று எரியும் தீயை அணைக்கும்.  அப்படிப்பட்ட  சொற்கள் நம்முடைய மனதையும் குளிர்விக்கும், மற்றவர் மனதையும் குளிர்விக்கும்". மனம் குளிர்ந்திருக்க வேண்டும்.  அது தான் முக்கியம். அப்படிப்பட்ட குளிர்ந்த மனதிலிருந்து எப்படிப்பட்ட சொல் வந்தாலும் சரி, அது கடுமையாக  இருக்கலாம், கண்டிப்பதாக  இருக்கலாம், கோபமாகக்கூட இருக்கலாம். அது நம் மனதை குளிர்விக்கும் மாமருந்து. 

எல்லாருடைய மனதும் வருத்தத்தில், ஆதங்கத்தில், ஏமாற்றத்தில் கனன்று கொண்டிருக்கிறது.  இந்த நெருப்பை எந்த நீர் அணைக்கும்?  வெறும் வார்த்தைகளால் இந்தத் தீயை அணைத்து விட முடியாது.  உள்ளிருந்து உடற்றும் பெரு நோய் இது.  அன்பில் கனிந்த இதயத்திலிருந்து வரும்  வார்த்தைகள் மட்டுமே பற்றி எரியும் மனத்தீயை அணைக்க முடியும்.    

அகங்காரம் தான் உள்ளிருந்து வாட்டும் தீ.  இந்தத் தீயை தன்னுள் அனைத்தவர்களின் சொற்கள் மட்டுமே நம்முள் இருக்கும் துன்பம் என்ற தீயை அணைக்கும்.  பிறரின் வார்த்தைகள் எவ்வளவு இனிமையாக இருந்தாலும் அதனால் எந்தப்பயனும் இல்லை. பொய் மிக இனிமையாக  இருக்கும். உண்மை கசப்பாகத்தான்  இருக்கும்.  உலகில் பொய் கொண்டாடப்படும், உண்மை புறக்கணிக்கப்படும்.  பொய் ஆரவாரத்துடன் வரும், உண்மை அமைதியோடு வரும்.  

எப்படிப்  பேசுகிறோம் என்பது முக்கியம் அல்ல, எங்கிருந்து பேசுகிறோம் என்பது முக்கியம்.  அதனால் தான் அகத்தீயை அணைக்கும் சொற்களை பேசுங்கள் என்கிறார்  கபீர் தாசர்.  உள்ளத்தின் உயர்வே இங்கு பிரதானமாக பேசப்படுகிறது.  பேச்சை மாற்ற வேண்டி முயற்சி செய்ய வேண்டியதில்லை. மனதை மாற்றத்தான் முயற்சி தேவைப்படுகிறது.  உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது தற்காலிகமாக புத்திசாலித்தனமாக, ஸ்மார்ட் ஆக இருப்பது போல் தெரியலாம், லாபகரமானதாக இருக்கலாம், ஆனால், உள்ளே இழக்கக்கூடாத ஒன்றை இழந்து விடுவோம் -  அது நிம்மதி.  பிறகு, நான் நன்றாகத்தானே பேசிக்கொண்டிருந்தேன், பிறகு ஏன் என் உறவுமுறைகளில் அன்பில்லை, நிம்மதி இல்லை என்று அங்கலாய்க்கிறோம். 

நிம்மதி அற்ற மனது பற்றி எரியும் காடு.  அந்தக்காட்டுத்தீயை எப்படி அணைப்பது?  

மனதை குளிர்விக்க ஞானிகளின்  சொற்களைப் போல் வேறு எதுவும் உதவாது.  நம் வீடுகளில் அப்படிப்பட்ட நல்ல மனிதர்களின் சொற்கள் காதில் படுகிறதா?  மனத்தெளிவு தரும் புத்தகங்களை  படிக்கிறோமா?   அவர்களுக்கு இருக்க இடம் இல்லாத வீடுகளில் வாழ்ந்து கொண்டு மனது சரியில்லை என்று புலம்பி என்ன பயன்? எல்லார் வீடுகளிலும் தாய், தந்தை, கணவன், மனைவி, மகன், மகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்  இருக்கிறார்கள், ஆனால் யாரும் நிம்மதியாக இல்லை. இவர்களில் யாரும் நம் கவலைகளிலிருந்து நம்மை காப்பாற்றப்போவதில்லை.  நம் வாழ்வில் நல்லோர்களுக்கு இடம் இருக்கிறதா? நம்மை வழிநடத்தக்கூடிய மேன் மக்கள்  இருக்கிறார்களா?  அவர்கள் பேசும் ஞான மொழிகளைக்  கேட்கிறோமா? ஆம் என்றால், இன்பம் உண்டு, அருள் உண்டு. இல்லையென்றால், ஒன்றுமில்லை, முற்றுப்புள்ளி.

 ~பரம்அத்வைத் (பரமேஸ்வரி)