டிசம்பர் மாதம். கத்தாரில் குளிர்காலம் தொடங்கி விட்டது. பூ மரங்கள், பச்சைப் புல்வெளிகள், காலை நேரத்து இளவெயிலில் நடப்பது சுகம். இன்றும் அப்படி ஒரு நாள் தான். அங்கங்கே தோட்ட வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்கள், நம்மை கண்டவுடன் மியாவ் என்று ஹலோ சொல்லும் பூனைக்குட்டிகள், உற்சாகமாக சறுக்கும் பூட்சுகளுடன் பறக்கும் பிலிப்பினோ இளைஞர், மலையாளி டீ கடை முன் பெஞ்சுகளில் அமர்ந்து டீ குடிக்கும் மக்கள். இரண்டு நாள் பெய்த மழையில் மரங்களிலிருந்து இலைகள் உதிர ஆரம்பித்து விட்டன. சாலையெங்கும் உதிர்ந்து கிடைக்கும் காய்ந்த இலைகள். நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு காய்ந்த மஞ்சள் நிற இலை கண்ணில் பட்டது. அதில் ஏதோ எழுத்து தெரிந்ததால் உற்றுப் பார்த்தேன். Tolee என்று ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது. யாரோ தன் பெயரை இலையில் எழுதி இருக்கிறார்கள் போல. ஒருவேளை தன் மனத்துக்குப் பிடித்தவர்களின் பெயராகக் கூட இருக்கலாம். இப்போது அந்த இலை காய்ந்து சாலையில் விழுந்து கிடக்கிறது. பெயர் மட்டும் அழியாமல் அப்படியே. ம்ஹும்... .நான் அதை ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன்.
எதற்காக நாம் நம் பெயரை ஒரு பொருள் மேல் எழுதுகிறோம்? அந்தப் பொருள் இருக்கும் வரை நம் பெயரும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவா? வீட்டின் முகப்பிலும், காரின் பின் கண்ணாடியிலும் பெயர்கள் எழுத்துவதைப் பார்த்திருக்கிறேன். தூசி படிந்த கார் கண்ணாடியில் எப்போதும் யாராவது தன்னுடைய பெயரை எழுதி வைத்து விட்டுப் போய் விடுவார்கள். கடற்கரை மணலில் பெயர்கள் எழுதியது எனக்கு நினைவு இருக்கிறது. அலை வந்து அடித்துச் சென்று விடும் என்று தெரிந்தாலும் ஒரு அல்ப ஆசை.
நம் பெயர் நமக்கு மிகவும் பிரியமானதாக இருக்கிறது இல்லையா? பேனா எழுதுகிறதா என்று கடையில் கிறுக்கிப் பார்க்கும் போது கூட நம் பெயரைத் தான் எழுதி பார்க்கிறோம். நம்மை யாரும் மறந்து விடக்கூடாது என்ற தவிப்பு உள்ளே இருப்பது தெரிகிறது. நம் வாழ்க்கை ஒரு நாள் முடிந்து விடும், நாம் இல்லாமற் போய் விடுவோம் என்று உள்ளூரத் தெரிவதனால், மறைமுகமாக நம்மை நிலை நிறுத்திக் கொள்ள நாம் நினைவின்றி, unconscious ஆக செய்யும் முயற்சியோ என்று தோன்றுகிறது. பலர் கை, கால்களில் தன் பெயரை பச்சை குதிக்க கொள்கிறார்கள். பாறையில் எழுதி வைத்தாலாவது பல நாட்கள் இருக்கும், இந்த உடலில் எழுதி வைத்து என்ன பிரயோஜனம். ஒரு நாள் சாம்பலாகத்தான் போகிறது.
தான் வாழா விட்டாலும் தன் பெயர் வாழ வேண்டும் என்று தான் அரசர்கள் பெரிய பெரிய கோவில்கள் எல்லாம் கட்டினார்களோ? கோவில் சுவரில், கிரில் கம்பிகளில் எல்லாம் பெயரை எழுதி வைத்து விடுகிறார்கள். பள்ளிக்கூடத்திற்கு, வீதிக்கு, நிறுவனத்திற்கு, தோட்டத்திற்கு என்று எல்லா இடங்களிலும் நம் பெயரை பதித்து வைக்கப் பார்க்கிறோம். உண்மையில் நமக்கு சாக விருப்பமே இல்லை என்று தான் தெரிகிறது. சாகாமல் வேறு ஏதாவது ஒரு வடிவத்தில் வாழ ஆசைப் படுகிறோம். மகனுடைய பெயருக்குப் பின்னால் அப்பா, மனைவியின் பெயருக்குப் பின்னால் கணவன் இன்னும் சில வருடங்கள் வாழ்வார்கள்.
யாரோ Tolee இலையில் பெயரை எழுதி வைத்து விட்டுப் போய் விட்டான். அவனைப் பற்றி நாம் இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவன் இப்போது இருக்கிறானோ இல்லையோ, நம் எண்ணத்தில் வந்து விட்டான். நாம் உடலோடு வாழாவிட்டாலும், குறைந்த பட்சம், எண்ணங்களில் நீண்ட நாட்கள் வாழ முடியும் அல்லவா? நாம் இன்னமும் சிவாஜி கணேசன் அவர்களை நினைத்துக் கொண்டிருக்கிறோம். திரைப்படம் இருக்கும் வரை அவரை யாராலும் மறக்க முடியாது. மக்களின் இதயங்களில் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டார். ஒரு வகையில் அவர் சாவை ஜெயித்து விட்டார் போல தோன்றுகிறது.
புகழுக்குப் பின்னால் பலரும் அலைவதின் காரணம் இப்போது புரிகிறது இல்லையா? பேர் கெட்டுவிடும் என்றால் நாம் அந்தக் காரியத்தை செய்யத் தயங்குவோம். அதனால் தான் ஒருவரை அவமானப் படுத்த வேண்டுமென்றால் அவர் பேரைக் கெடுத்து விடுகிறார்கள்.
எங்கள் நண்பர்களின் குழந்தைகளை வேண்டுமென்றே கடுப்பேத்துவதற்காக அவர்கள் பெயரை திரித்துக் கூப்பிடுவோம். சும்மா விளையாட்டுக்குத் தான். அவர்களுக்கு அப்படி ஒரு கோபம் வரும். ஜனனியை குஜனி என்றால் கோபம் வராதா பின்னே?
பெயர் நம்மை இப்படி எல்லாம் ஆட்டிப் படைப்பது தெரிந்து தான், பெயரே இல்லாத கடவுளுக்குக் கூட பெயர் கொடுத்து விட்டார்கள் போலத் தெரிகிறது. ஒன்றா இரண்டா ஆயிரம் பெயர்கள் அவனுக்கு. கடவுள் பெயர்களை ஜபம் செய்யச் சொல்லி எல்லா மதங்களும் வற்புறுத்துகின்றன. இல்லையென்றால், நம் பெயர் மேல் நமக்குள்ள மோகம் போகவே போகாது போல் தெரிகிறது. சீக்கியர்கள் இதை சுமிரன் என்று சொல்கிறார்கள். இந்துக்கள் ராமா என்று சொன்னாலே நம் பாபம் அனைத்தும் தீர்ந்திடும், நாம ஜபம் செய் என்கிறார்கள்.
உண்மையில், நாம் நன்றாக இருக்க வேண்டுமென்றால், நம் பெயரை மறந்து விட வேண்டும். நான் அம்னீசியா பற்றி சொல்லவில்லை, நம் மேல் நமக்கு உள்ள மோகம் அகல வேண்டும் என்கிறேன். நம்மை மறக்கவில்லை என்றால் நம்மால் ஓய்வெடுக்க முடியாது. தூக்கத்தில் நான் இல்லை, என் பெயரும் நினைவில்லை, அதனால் தான் என்னால் ஓய்வெடுக்க முடிகிறது.
பெயர் என்பது ஒரு கருத்து concept . என்னை எந்த ஒரு கருத்திலும் அடக்க முடியாது. என் பெயரை வைத்து என்னைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்வதெல்லாம் வெறும் கற்பனையே. நான் யார் என்பதையே பெயர் கொண்டு விளக்க முடியாத போது கடவுளை எப்படி பெயரால் விளக்க முடியும்? இருந்தாலும் பெயர்கள் நமக்கு சில துப்புகளைக்( clue )கொடுக்கின்றன. கட + உள் என்றாலே கடந்து உள்ளே போ என்று பொருள். அதைக் கொண்டு கடவுள் யார் என்று நாம் ஊகித்து அறிந்து கொள்ள வேண்டியது தான். இவ்வாறு, பெயர்களைக் கொண்டு பெயருக்கு அப்பால் உள்ளவனைப் பற்றி சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் கருணை மிகுந்தவர்கள்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா, தன் பெயரையே மறந்தவர்கள் பெயரைத் தான் நாம் பல்லாயிரம் வருடங்கள் கழித்தும் நினைத்துக் கொண்டுள்ளோம். தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள் என்று ஆண்டாளை சொல்வார்கள். அவளை நாம் இன்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பக்த மீராவை இன்னமும் நினைத்துப் போற்றுகிறோம். அவள் கணவன் அரசனாகப் பெயர் பெற்றவர் , அவர் பெயர் எவ்வளவு பேருக்குத் தெரியும்? ராமர், கிருஷ்ணர், புத்தர், ஜீசஸ், குரு கபீர், குரு நானக், பாரதியார், உபநிடத ரிஷிகள் எல்லோருமே தன் பெயரை மறந்தவர்கள், அவர்களை இன்னமும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். காலம் உள்ளவரை அவர்கள் பெயர் நிலைக்கும்.
இலையில் ஆரம்பித்து, கடைசியாக இறைவனில் வந்து முடிந்து விட்டது. எங்கே ஆரம்பித்தாலும் இங்கே வந்து தான் முடிகிறது,என்ன செய்ய?
~பரமேஸ்வரி
பரம்அத்வைத்.

No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin