கிறிஸ்துவர்களுக்கு பைபிள் போல, இஸ்லாமியர்களுக்கு குர் ஆன் போல, இந்து தர்மம் என்றழைக்கப் படும் சனாதன தர்மத்தின் முதன்மையான, மைய நூல் வேதாந்தம். பகவத் கீதை வேதாந்தத்தின் ஒரு அங்கம் ஆகும். பைபிள் படிக்கவில்லை என்றால் கிருஸ்தவர்கள் என்று சொல்ல முடியாது. குர் ஆன் படிக்கவில்லை என்றால் இஸ்லாமியர்கள் என்று ஒத்துக்கொள்ள மாட்டோம். ஆனால், எந்தப் புத்தகமும் படிக்காவிட்டாலும் கூட, எந்தத் தத்துவமும் தெரியாவிட்டாலும் கூட இந்துக்கள் என்று அழைக்கிறோம்.
நம்முடைய புத்தகம், தத்துவம் இரண்டுமே தெரியாது. தெரிந்தாலும் படிக்கும் வழக்கம் இல்லை. இருந்தாலும் கர்வத்துடன் இந்து என்று சொல்லிக்கொள்கிறோம். தீபாவளி, ஹோலி கொண்டாடுவதனாலேயே இந்துவாக முடியாது. பேர் சமஸ்கிருதத்தில் வைத்துக் கொண்டால் இந்து இல்லை. வாழ்க்கை தத்துவம் தெரியாமல் வாழ்க்கையை நடத்துவது என்பது ஹெட் லைட் இல்லாமல் காரை ஒட்டிக்கொண்டு போவது போல். எப்போது வேண்டுமானால் விபத்து நேரலாம். நமக்கு வழி தெரியாததால் மற்றவர் நம்மை வழி நடத்த வேண்டிய நிலை ஏற்படும். உன்னதமான தத்துவம் என்று உலகமே வேதாந்தத்தை போற்றினாலும் நமக்கு எதுவுமே தெரியாது. நம்மை சொல்லியும் குற்றமில்லை, நம் வீட்டிலும் யாரும் அகக்கல்வியான வேதாந்தத்தை சொல்லிக்கொடுக்கவில்லை. பள்ளி, கல்லூரிகளிலும் ஒரேயடியாக புறக்கணித்து விட்டார்கள். இந்துக்களின், பாரதத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அவர்கள் அறிவுக்கு உயர்ந்த இடம் கொடுக்கத் தவறியதே ஆகும்,
வேதாந்தம் புரிவது கடினம் என்றெல்லாம் சொல்லி நம்மை அதை படிக்கவே விடாமல் செய்து விட்டார்கள். உண்மையில் வேதாந்தம் போல் மனதைக்கவரும் படிப்பு, மனநிறைவு தரும் கல்வி வேறெதுவுமில்லை.
மூன்று வகையான அறிவைப் பற்றி வேதாந்தம் பேசுகிறது. ஒன்று, தன்னை பற்றிய அறிவு, இரண்டாவது உலகம் பற்றிய அறிவு, மூன்றாவது இறை அறிவு. இந்த மூன்றில் எது ஒன்று தெரியவில்லை என்றாலும் வாழ்வில் துன்பம் வருவது நிச்சயம். நம் வாழ்விலும் துன்பம் இருந்தால், அதை வேரோடு அழிக்கக் கூடிய சக்தி வேதாந்தத்துக்கு உண்டு. இது எத்தனையோ மாமனிதர்களை உருவாக்கியுள்ளது.
வேதாந்தம் என்றால் என்ன, அத்வைதம், துவைதம் என்றால் என்னவென்று முதலில் புரிந்துகொள்ளலாம், ஓவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக.

No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin