Pages

Tuesday, December 5, 2023

வேதாந்தம் பகுதி 3- நான் யார்?


May be a graphic

 வேதங்கள் நான்கு, ரிக், சாம, யசூர், அதர்வணம். அதில் ஓவ்வொன்றிலும் இறுதிப் பாகமாக வருவது வேதாந்தம். இதில் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை இம்மூன்றும் அடக்கம்.

ஆசைகளின் பூர்த்தியால் மனநிறைவு பெற முடியாது என்றால் வேறு என்ன செய்வது என்று விசாரணை (enquiry) செய்ததன் பயன் தான் வேதாந்தம். துன்பத்திலிருந்து விடுதலை வேண்டும் என்றால் முதலில் யார் துன்பப் படுகிறார்கள் என்று தெரிய வேண்டும் இல்லையா? யாருக்கு துன்பமாக இருக்கிறது என்று தெரிந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். இங்கே தான் யாருக்குத் துன்பம் என்ற கேள்வி வருகிறது. எல்லோரும் என்ன சொல்வோம்? நான் தான் கஷ்டப்படுகிறேன் என்போம். "நான்" என்பது இல்லாமல் எந்த அனுபவமுமே இல்லை. எனவே, "நான்" யார்? என்பது தான் வேதாந்தத்தின் மையமான கேள்வி. ஆன்மீக வட்டாரங்களில் இது மிகவும் பிரபலமான கேள்வி.
அறிவியல் வளர்ந்தது, கேள்விகள் கேட்டதால் தான். கண்டதெல்லாம் உண்மை என்று ஒத்துக் கொள்ளாமல் தூண்டித் துருவி கேள்வி கேட்டு உண்மையை கண்டறிந்தார்கள். Scientific spirit அறிவியல் நோக்கு என்பது கேள்விகள் கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை ஆகும். மூட நம்பிக்கைகளை எல்லாம் ஒழித்துக் கட்டியது அறிவியல் தான். அறிவியல்,உலகத்தையே ஆராய்ச்சிக்கூடத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தியது. இதே spirit, மனப்பாங்குடன் வாழ்க்கையை சந்தித்தவர்கள் தான் நம் ரிஷிகள். மேற்கில் வெளி உலகை ஆராய்ந்தார்கள், ரிஷிகள் உள் உலகை ஆராய்ந்தார்கள்.
இவ்வுலகில் நாம் வாழ்கிறோம். வாழ்வின் மையத்தில் இருப்பவன் நான். நான் இல்லாமல் உலகம் இல்லை. நான் தான் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறேன். இந்த "நான்" ஐ புரிந்து கொண்டால் வாழ்க்கையின் சூக்ஷமம் புரிந்து விடும் அல்லவா? எனவே, "நான்" என்பது தான் அவர்கள் எடுத்துக் கொண்ட பேசு பொருள் (subject matter) அவர்கள் ஆராய்ச்சிக்கூடத்திற்குள் நுண்பெறுக்கிக்கடியில் கொண்டு வந்த பொருள் "நான்".
அறிவியல் உலகைப் புரிந்து கொள்ள மேற்கொண்ட முயற்சி.
வேதாந்தம் தன்னைப் புரிந்து கொள்ள மேற்கொண்ட முயற்சி.
அறிவியலும் வேதாந்தமும் உண்மையை அறிய வேண்டும் என்ற மனிதனின் ஆழ்ந்த விருப்பத்துக்கு ஆதாரமாகும்.
உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தாகத்தை அன்பு என்றும் சொல்லலாம். உண்மையை நேசிப்பதே உண்மையான அன்பு. அதைத் தவிர வேறு எதுவும் அன்பில்லை. நாம் அன்பு என்று சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் அன்பில்லை. நம் உறவினர்கள் மீது வைத்திருப்பது, நம் உடைமைகள் மேல் வைத்திருப்பது எல்லாம் உண்மையில் அன்பு கிடையாது. அதற்கு வேறு பெயர் வேண்டுமானால் கொடுத்துக் கொள்ளலாம். நிச்சயமாக அன்பில்லை. நன்றாகத் தெரிந்து, புரிந்து தான் சொல்கிறேன். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வேதாந்தத்தில் அன்பு என்ற சொல் ஒரு முறை கூட உபயோகப்படுத்தப் படவில்லை! அன்பைப் பற்றி பேச வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை போலும். அவர்களின் அறிவு தாகத்துக்குப் பின்னால் அன்பு மறைந்திருக்கிறது!
நம்மில் பலருக்கு அறிவியலில் மிகுந்த ஆர்வம் இருக்கும். தேடித் தேடிப் போய் தெரிந்து கொள்வோம். புதுப்புது தொழில் நுட்பமெல்லாம் அனாயாசமாகக் கற்றுக் கொள்வார்கள். ஆனால், நம்மைப் பற்றி,நம் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை. வேண்டுமென்றே தவிர்ப்போம். காரணம் இது தான். இதில், நம்மையே நாம் ஆராய்ச்சிக்கூடத்துக்குள் கொண்டு வர வேண்டி இருக்கிறது. நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டி வரும். நாம் நம்பிக்கொண்டிருக்கும் கருத்துகள் (concepts ), பழக்க வழக்கங்கள், அடையாளங்கள் (identities) யாவும் ஆட்டம் காணலாம். அதற்கு யாரும் தயாராக இல்லை. தூங்கற மணியாரத்த எழுப்ப வேண்டாமென்று சொல்வார்களே, அப்படி. உண்மையை நேருக்கு நேர் சந்திக்க பலருக்கு பயமாக இருக்கிறது. உண்மையை சந்திக்க அசாத்தியமான துணிச்சல் தேவைப்படும். அந்தத் துணிச்சலே அன்பென்றும் சொல்வார்கள்.
தன்னை விட, உண்மையை அதிகம் நேசிக்கும் மனம் கொண்டவர்கள் மட்டுமே பயணிக்கும் பயணம் இது.

வேதாந்தம் பகுதி 3- நான் யார்?


No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin