புத்தரிடம் போய் ஒரு சீடர் கேட்டாராம்.
எல்லாராலும் முக்தி அடைய முடிவது சாத்தியம் என்றால் ஏன் அனைவரும் முக்தி அடைவதில்லை? அதற்கு புத்தர், எல்லாராலும் முக்தி அடைய முடியும் ஆனால் எல்லாரும் முக்தி அடைய விரும்புவதில்லை என்று சொன்னாராம்.
மன அமைதி, நிம்மதி ஒன்றும் கிடைப்பதற்கரிய பொருள் இல்லை, அது காற்று மாதிரி, ஆகாயம் மாதிரி இயல்பாக இருக்கும் ஒரு விஷயம் தான். சகஜமானது தான். ஆனால், நம் அனுபவத்தில் அப்படி இல்லையே. எப்போதும் ஏதோ கவலை, பதட்டம், யோசனை, பயம் என்று நிம்மதி இல்லாமல் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
அமைதி ஒன்றும் குதிரைக் கொம்பு இல்லை. உண்மையில் நமக்கு அமைதி வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா, என்ன? கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் புரியும், நமக்கு இந்த நிம்மதி, அமைதி எல்லாம் இரண்டாம் பட்சம் தான், கிடைத்தால் சரி, இல்லையென்றால் பரவாயில்லை.
உங்களுக்கு மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்து விடுகிறது, ஆனால், அங்கே நேர்மையாக இருக்க முடியாது, அடிமை போல் வேலை செய்ய வேண்டியிருக்கும். நிம்மதி இருக்காது என்று தெரிந்தாலும், பரவாயில்லை என்று அந்த வேலையை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த காலத்தில் நேர்மையாகவெல்லாம் வாழ முடியாது, ஊரோடு ஒத்து வாழ் என்று பழமொழிகளை எல்லாம் அவிழ்த்து விடுவீர்கள். வேலையில் சேர்ந்து விடுவீர்கள்.
பையன் நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கிறான், ஆப் ஷோர் போக வாய்ப்புகள் உண்டு, சொந்தமா ஒரு அபார்ட்மெண்ட், கார் உள்ள மாப்பிள்ளை, ஆனால் என்ன, சிகரெட், குடிப்பழக்கம் உண்டு, இப்படி ஒரு வரன் வந்தால், இப்போ யார் தான் குடிக்கல, அது ஒன்னும் பெரிய குற்றமில்லை, ஒரு சோஷியல் கேதரிங் என்றால் குடிக்க வேண்டியதாத் தானே இருக்கு, என்று சால்ஜாப்பு சொல்வீர்கள்.
உண்மையில் நாம் அமைதியை விட, நிம்மதியை விட சுகத்தைத் தான் அதிகம் விரும்புகிறோம். அந்த சுகம், உணவு, வீடு, வாகனம், நண்பர்கள், உறவினர்கள், ஆடம்பரப் பொருட்கள், குடி, போதை என்பது போல் உடல் சம்பந்தப் பட்டதாகவும் இருக்கலாம், அல்லது அருகாமை, பாதுகாப்பு, அங்கீகாரம், மதிப்பு, மரியாதை, புகழ், பொழுதுபோக்கு போன்ற மனது சம்பந்தப் பட்டதாகவும் இருக்கலாம்.
உடலுக்கு சவுகரியம்! மனதுக்கு சுகம்! சமூகத்தில் அந்தஸ்து!
இவற்றை அடைய நாம் கொடுக்கும் விலை தான் "நிம்மதி". இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு வியாபாரம். வைரக்கல்லை விற்று இரண்டு துண்டு ரொட்டி வாங்கி சாப்பிடுவது போல். அவ்வளவு புத்திசாலிகள் நாம்.
இரவு நீண்ட நேரம் கண் விழித்துப் படம் பார்ப்போம், கார மசாலா வகை உணவுகளை நேரம் காலம் தெரியாமல் ஒரு கட்டு கட்டுவோம், பணம் கிடைக்கும் என்றால் கூசாமல் பொய் சொல்வோம், வேண்டாத வேலையில் குப்பை கொட்டுவோம், மால், சினிமா என்று நண்பர்களுடன் ஊர் சுற்றுவோம். தேவையில்லாமல் பொருட்களை வாங்கி குவிப்போம். ஒன்றுக்கு ரெண்டு கிரெடிட் கார்டில் கடன் வாங்கி விடுவோம். நகை, புடவை, துணிமணி, அழகு சாதனங்கள், பியூட்டி பார்லர் என்று மாதத்துக்கு அது வேறு தனி செலவு.
இவற்றில் ஏதாவது அமைதிக்காக என்று செய்கிறோமா என்ன?
நாம் செய்யும் பூஜைகளும், செல்லும் கோவில்களும் கூட சுகத்துக்காகவே தவிர அமைதிக்காக இல்லை என்பது தான் உண்மை.
வியாபாரத்தில் லாபம் கிடைக்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், பார்ட்னர் கிடைக்க வேண்டும், குழந்தை வேண்டும், வெற்றி அடைய வேண்டும் என்று தான் சாமியே கும்பிடுகிறோம். இதெல்லாம் கிடைத்தால் அமைதியாக இருப்பேன் என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் , நீங்கள் அமைதியாக இருந்தால் இவை எல்லாம் தானாகவே கிடைக்கும். நீங்கள் கண்ணை விற்று சித்திரம் வாங்கி கொண்டிருக்கிறீர்கள்.
அமைதி என்பது சுவாசம் போல். அது போனபின் வேறு என்ன இருந்தால் என்ன, இல்லையென்றால் என்ன? புரிகிறதா?
நாம் எப்படிப் பட்ட ஆள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது மிகவும் சுலபம். வேறு யாரையும் கேட்க வேண்டியதில்லை. உங்கள் நேரமும் பணமும் எங்கே போகிறது என்று பாருங்கள். அதிலேயே தெரிந்து விடும், நீங்கள் எப்படிப் பட்டவர் என்று. இன்னும் தெரிய வேண்டும் என்றால், உங்கள் whatsapp ல் யார் நண்பர்கள் என்று பாருங்கள், Google, YouTube history எடுத்துப் பாருங்கள். நீங்கள் எப்படிப் பட்டவர் என்று துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். அங்கே என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? வெறும் சில்லறை சமாச்சாரங்கள் தான் என்றால் ஆளும் அப்படித் தான்.
கேளுங்கள் கொடுக்கப் படும் என்று இயேசு சொன்னார். நீங்கள் நிம்மதியைக் கேட்டீர்களா? கேட்டிருந்தால் கண்டிப்பாக கிடைத்திருக்கும். நாம் கேட்டதைத் தான் இதுவரை அடைந்திருக்கிறோம். நீங்கள் அரசாங்க வேலை வேண்டும் என்று விரும்பியதால் ஒரு வேலை கிடைத்தது. விரும்பவே இல்லை என்றால் எப்படிக் கிடைக்கும்?
உங்கள் வாழ்க்கையில் எதை முக்கியம் என்று நீங்கள் கருதுகிறீர்களோ, அதுவாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள். பணம் முக்கியம் என்றால், பணக்காரன் ஆவீர்கள். இது இயற்கை நியதி. நீங்கள் எதற்கு உங்கள் வாழ்வில் சிறப்பிடம் கொடுத்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். எல்லாம் புரிந்து போய் விடும்.
~பரமேஸ்வரி.
பரம் அத்வைத்.
No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin