கபீர் தாஸரின் குறள்கள் படிப்பறிவில்லாத சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் மிகவும் எளிமையாக இருக்கும். கேட்டவுடன் புரிந்து விட்டது போலவே தோன்றும். உண்மையில் அவரின் ஓவ்வொரு குறளிலும் வாழ்க்கை தத்துவமே அடங்கியுள்ளது. அது ஒரு சூத்திரம் போலவும் இருக்கும். எளிமையாக இருப்பதனால், எல்லாம் புரிந்து விட்டதாக நினைத்துக்கொண்டால் சாராம்சத்தை தவற விட்டுவிடுவீர்கள்.
துன்பம் வரும் போது எல்லோரும் கடவுளை நினைப்போம். இன்பமாக இருக்கும் பொது யாருமே நினைப்பதில்லை. இன்பத்திலும் நினைத்தால், துன்பமே வராது என்று இந்தக் குறளுக்கு பொருள் சொல்வார்கள்.
இவ்வுலகில் துன்பத்தை விரும்புபவர்கள் யாருமில்லை. எல்லோருக்குமே இன்பம் தான் வேண்டும். ஆனால், பலரும் துன்பப் படுவதைத் தான் அதிகம் பார்க்கிறோம். இன்பத்தை தானே விரும்பினோம், பிறகு ஏன் துன்பம் வருகிறது? இது என்னவோ ஒரு சூது வாதில்லாத innocent ஆன கேள்வியாகத் தெரிகிறது இல்லையா? அப்படி இல்லை.
கனக்குப் பாடத்தில் இரண்டாவது வாய்ப்பாடு தெரிந்திருக்க வேண்டியது, ஒரு அடிப்படையான விஷயம், இல்லையா? அது தெரியாமல் கணக்கு போட்டால் சரிப்பட்டு வராது. ஆங்கிலதில் பேச வேண்டுமென்றால், குறைந்த பட்சம் A, B, C , D தெரிந்திருக்க வேண்டும். அதுபோல், வாழ்க்கையில் நாம் படித்திருக்க வேண்டிய ஒண்ணாங்கிளாஸ் பாடம் - இன்பமும் துன்பமும் எப்போதும் தனித்தனியாக வராது. இரண்டும் சேர்ந்தே தான் வரும்! ஒன்று கேட்டால் இன்னொன்று இலவசமாக கிடைக்கும்.
நாம் ஏன் துன்பப படுகிறோம்? ஏனென்றால், நாம் இன்பத்தை விரும்பினோம்! நேரடியான பதில் இது. வேறு பல காரணங்களெல்லாம் சொன்னாலும், நேரடியான காரணம் நீங்கள் இன்பத்தை விரும்பியது தான்.
அப்படியா? இன்பமாக இருப்பது அவ்வளவு பெரிய குற்றமா?
இன்பமாக இருப்பது குற்றமில்லை. ஆனால் இன்பமென்றால் என்னவென்றே தெரியாமல் இருப்பது குற்றம்.
இன்பத்தின் செயற்பாடு என்னவென்று தெரியாமல் துன்பத்திலிருந்தும் தப்பிக்க முடியாது. எனவே, இன்பமென்றால் என்னவென்று புரிய வேண்டியது அவசியம். இன்பத்தைத் தேடியும், துன்பதத்தை விட்டோடியும் வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்து விட்டோம். ஏற்கனவே மிகுந்த கால தாமதம் ஆகி விட்டது. இப்போதாவது இன்பம், துன்பம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம்!
நாம் இருக்கிறோம். மற்றும், உலகில் பல பொருட்களும், மனிதர்களும், சூழ்நிலைகளும் இருக்கின்றன. உலகில் உள்ள பொருட்களில் சில நமக்கு சுகமான அனுபவத்தை (pleasure ) ஏற்படுத்துகின்றன, சில பொருட்கள் துக்கமான அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவேளை, உங்களுக்கு தோசை பிடிக்கும் என்றால், தோசையைப் பார்த்தவுடன் சுகம் என்ற அனுபவம் ஏற்படும். உங்களுக்கு ஒரு நண்பரை பிடிக்கும் என்றால் அவரைப் பார்த்தவுடன் மனம் குதூகலிக்கும். உங்களுடைய குழந்தைகளை நினைக்கும் பொது மகிழ்ச்சியான நினைவுகள் ஏற்படும். சிலருக்கு கசப்பான உணர்வுகளும் ஏற்படலாம். உலகத்தோடு சம்பந்தப் படும் போது நமக்கு உண்டாகும் அனுபவங்களை இன்பம், துன்பம் என்று சொல்கிறோம்.
இன்பம் கொடுக்கும் பொருட்கள் தனி, துன்பம் கொடுக்கும் பொருட்கள் தனி என்று தனித்தனியாக எதுவுமில்லை . எந்தப் பொருளால் இன்பம் கிடைத்ததோ, அதே பொருளால் தான் துன்பமும் ஏற்படுகிறது. நீங்கள் விரும்பாத ஒருவரை வெறுப்பது முடியாது. மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ஏனென்றால், அவர்கள் மனதில் நமக்கு உயர்ந்த இடம் வேண்டுமென்று விரும்புவதால் தானே? அந்த விருப்பம் நிறைவேறாத போது கோபம், வருத்தம் எல்லாம் உண்டாகிறது. பணத்தை நாம் எல்லோரும் விரும்புகிறோம் இல்லையா, அதனால் தான், பாக்கெட்டில் பணம் குறைந்து விட்டால் பலருக்கு உடம்பில் சத்தே போனது போல் ஆகி விடுவார்கள். சிடுசிடுவென்று விழுவார்கள். பயமாக இருக்கும். மீண்டும் பணத்தைப் பார்த்தால் தான் எழுந்து உட்காருவார்கள்.
உலகில் இன்பம் தரும் பொருட்கள் என்று எதுவும் இல்லை. இன்பம் என்பது நம்முடைய தனிப்பட்ட கருத்து தான். நம்முடைய தனிப்பட்ட கருத்து என்பது கூட சரியில்லை. நாம் அப்படி பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம். கோவில் மணியோசை இந்துவுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம் . ஆனால், ஒரு இஸ்லாமியருக்கு மணியோசை வெறும் சத்தம் தான். இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் விளையாடும் போது இந்தியா வென்றால், இந்தியர்களுக்குத் தான் இன்பமாக இருக்கும். பாகிஸ்தானுக்கு துக்கமாக இருக்கும். நாம் இந்தியர்கள் என்று பயிற்றுவிக்கப் பட்டிருப்பதால், இந்தியா வெற்றி பெற்றால் இன்பம் என்ற உணர்வு ஏற்படுகிறது. ஒருவேளை, இந்தியக் குழந்தை பாகிஸ்தானிலேயே பிறந்து வளர்ந்திருந்தால், அதற்கு இந்தியா ஜெயித்தால் இன்பம் வராது. நாம் இந்தியர்கள், இந்தியாவின் வெற்றி உன் வெற்றி என்று சிறு வயதிலிருந்து பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்.
எனவே இன்பம் என்று நாம் கருத்துவதெல்லாம் நம் சொந்த விஷயம் இல்லை. சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, நம்ப வைக்கப் பட்ட ஒரு கருத்து தான் இன்பம். iphone வாங்கிவிட்டால் இன்பம் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? யார் சொன்னது? திரும்பத் திரும்ப இந்தக் கருத்து ஊடகங்களும் , சுற்றி இருப்பவர்களும் உங்கள் மனதில் திணிக்கப் பட்டது. iphone வைத்திருந்தால் பெருமை என்று நம்பவைக்கப் பட்டீர்கள். ஒரு நாள் iphone கிடைத்து விட்டால் எப்படி சந்தோசமாக இருக்கும்!
நம் சந்தோஷங்களெல்லாம் உண்மையில் நம் சந்தோஷங்கள் இல்லை. வேறு யாரோ, நாம் எதற்கு சந்தோசப் படவேண்டும், எதற்கு கவலைப் பட வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். பெற்றோர்கள், உறவினர், நண்பர்கள், ஆசிரியர்கள், நாடு, இனம், மதம், கல்வி, அரசியல், சந்தை, சினிமா, டிவி, மீடியா என்று பல பேர் நாம் எதற்கு சுகப்பட வேண்டும், எதற்கு துக்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கிறார்கள்.
நம் உடலில் உள்ள ரசாயன மாற்றங்கள் மற்றொரு காரணம். 16 வயதில் வயசுப் பையன்களை, பெண்களைப் பார்த்தால் இன்பமாக இருப்பது, வெறும் ரசாயன மாற்றம் தான். காதல் என்று சொல்வதெல்லாம் வேறொன்றுமில்லை, உடலில் ஏற்படும் அரிப்பு தான்.
சரி, அப்படியாவது சுகமாக இருந்துவிட்டுப் போகலாமே என்றால், அதுவும் முடியாது. ஏனென்றால், நாம் எது இன்பம் தரும் என்று நினைக்கிறோமோ, அது அவ்வளவு சுலபமாகி கிடைப்பதில்லை. கிடைத்தாலும் இன்பம் கொஞ்ச நேரத்துக்கு தான். அதிக பட்சம், சில நாட்கள் அல்லது மாதங்கள் பேசாமல் இருப்போம். பிறகு, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும். விரைவில் அடுத்த மாடல் போன் வந்து விடும். கையில் இருப்பது பழசாகத் தெரியும். கெத்தாக இருக்காது. அல்லது கீழே விழுந்து கீறல் விழுந்து விட்டிருக்கும்.
முதலில் இன்பம் என்று நாம் நினைப்பது நம்முடைய சொந்த விருப்பமே இல்லை.நம் விருப்பங்களெல்லாம் யார் யாரோ நமக்குள் வீசி எறிந்துவிட்டுப் போன குப்பை! அந்தக் குப்பைகளால் மனது கெட்டுப் போயிருக்கிறது. இன்பம் என்றோ ஒருநாள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த காத்திருப்பு தான் துன்பம். வந்த இன்பத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்று பரிதவிக்கிறது. இந்தப் பரிதவிப்பே துன்பம். இன்பத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் துன்பம். இன்பத்தைத் தேடி அடைய செய்யும் முயற்சிகள் யாவும் துன்பம்.
துன்பம் வந்துவிட்டால், இந்த உலகமே பொய், யாரையும் நம்பக கூடாது, என்னை ஏமாற்றி விட்டார்கள் என்றெல்லாம் அழுது புலம்புவோம். கடவுளே, காப்பாற்று என்று கோயிலுக்கு ஓடுவோம். சோகப் பாடல்களை கேட்போம். மோட்டிவேஷன் வீடியோக்கள் பார்ப்போம். பட் , இட்'ஸ் டூ லேட்! எப்போது இன்பம் இது தான் என்று நினைத்தீர்களா அப்போதே துன்பத்திற்கான விதையை விதைத்து விட்டீர்கள். அது துளிர் விட்டு, செடியாகி, மரமாகி அதன் பலனைத் தரும் பொது தான், "ஐயோ, கசக்கிறதே" என்று துப்புகிறீர்கள். வேறு வழி இல்லை. அனுபவித்துத் தான் ஆகா வேண்டும்.
கபீர் ஐயா என்ன சொல்கிறார் பாருங்கள். இப்போது நன்றாகக் புரியும். துன்பம் வரும் போது தொழுது என்ன பயன்? இன்பம் வரும் போதே, உலகம் பொய், ஏமாற்றப் படுகிறோம், இது வெறும் உணர்வு தான், உண்மையில்லை என்று தெளிவாக பார்த்திருந்தோமென்றால்,, துன்பம் வந்திருக்கவே முடியாது.
தொழுவது என்றால் காலில் விழுந்து கும்பிடுவது என்று அர்த்தமில்லை. தொழுவது என்றால் எது நமக்கு நன்மை தருமோ, அதை வணங்குவது, நம் இயல்பான ஆனந்தத்திற்கு தடையாக இருப்பவைகளை வேண்டாமென்று என்று ஒதுக்குவது.
துன்பம் வந்த பிறகு தொழுபவர்கள் ஞானி ஆக முடியாது, முக்தி அடைய முடியாது. ஏனென்றால், அவர்கள் இன்பத்தை வேண்டித் தொழுகிறார்கள். வேண்டித் தொழுவதால் அது வேண்டுதல் எனப்படுகிறது. இஷ்ட தேவதை என்றால் நாம் இஷ்டப் படுவதைக் கொடுக்கும் தேவதை என்று பொருள். இவர்கள் துன்பத்தைத் துடைக்க வேறு ஒரு பொருள் கிடைத்தால் போதும். ஞானமெல்லாம் தேவையில்லை. ஒரு காதல் பிரேக் அப் ஆனால், சீக்கிரமே இன்னொரு காதல் வந்து அந்த துக்கத்தை துடைத்து விடும், தற்காலிகமாக!
சுமிரன் என்ற வார்தைக்குப் பொருள் "நினைவு கூர்தல்" என்று பொருள். இன்பத்திலும், துன்பத்திலும் கடவுளை நினைக்க வேண்டும் என்றால் முருகனையே, ராமனையோ நினைக்க வேண்டும் என்று எடுக்கக் கூடாது. கடவுள் என்பது அனைத்தையும் கடந்தது என்றால், அதைப் பற்றி எதுவுமே நினைக்க முடியாது. ஏனென்றால், நம்மால் பொருள்களை மட்டும் தான் நினைக்க முடியும். மனது எப்போது அலை பாயாமல், ஆசைகளற்று இருக்கிறதோ, எப்போது நம் மனம் என்ற சிம்மாசனம் காலியாக இருக்கிறதோ, எப்போது உள்ளே மெளனமாக இருப்பதில் திருப்தியாக இருக்கிறோமோ, அப்போது கடவுளின் "சுமிரன்" இருக்கிறது. அப்போது, கடவுளை தொழுகிறோம், வணங்குகிறோம், ஆராதிக்கிறோம் என்று பொருள். வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
மனிதனுக்கு இன்ப வேட்கையை விட்டு விடுவது அவ்வளவு சுலபமாக இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறான். இந்தப் பொருள் இல்லையென்றால், வேறொரு பொருளில், வேறு மனிதர், வேறு நாட்டில், வேறு வேலையில் இன்பம் கிடைக்கும் என்று விடாமுயற்சியுடன் இன்பத்தைத் துரத்திக் கொண்டிருக்கிறான். அவனுடைய இன்பவேட்கை உலகத்தையே முடித்துக் கட்டி விடும் போல இருக்கிறது. ஆனாலும, அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை தீர்ந்த பாடில்லை. துன்பத்தின் நிறமும் வடிவமும் மாறிக்கொண்டே இருக்கும், அது தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கும்.
ஞானிகள் சொல்வதை மீண்டும் மீண்டும் கேட்டு, படித்து, உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். நாம் யார் என்று நினைவு படுத்திக்க கொள்ள வேண்டும். ஒரு வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளுக்கு அவ்வளவாக துன்பமில்லை. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றன. அதனுடைய கை விரலைகளைப் பார்த்தே சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கும். உண்மையில் நாம் மகிழ்ச்சியோடு இருக்க பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. தேவை என்று நினைத்து எதையாவது தேடித் போவது தான் மகிழ்ச்சியைக் கெடுத்து விடுகிறது.
எவன் இன்பம் வரும் போதே உஷாராக இருக்கிறானோ, இன்பத்தையும் துன்பத்தையும் இணை பிரியாதவை என்று அறிகிறானோ, அவன் மனம் இன்பம் வேண்டி அலையாது. அலையாத மனம் அன்பான மனம், ஆனந்தமான மனம்! தெளிவான, திடமான மனம்! இன்பத்தை அனுபவிக்காதே என்று சொல்லவில்லை, இன்பம் என்பது துன்பத்துக்கான பொறி trap என்பதை புரிந்து கொண்டால் போதும். அப்போது, இன்பம் வந்தால் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம், அது இல்லையென்றால் சரி பரவாயில்லை என்று விட்டு விடவும் முடியும். இன்பத்தையும் துன்பத்தையும் கண்டு நிலை குலைய மாட்டோம்.