Pages

Thursday, December 28, 2023

கசப்பு மிட்டாய் 4 - உன் பலஹீனங்களை எதிர்த்துப் போராடு.


 உன் பலஹீனங்களை எதிர்த்துப்  போராடு.

சகோதரா, உலகத்தின் முன் ஒரு மனிதனாக நிற்கக் கற்றுக்கொள். மண்புழுவை போல் மற்றவர் காலடியில்  விழலாமா? முகத்தில் ஒளி வீச வேண்டும். கண்களில் பலம் தெரிய வேண்டும்.  பேச்சில் துணிவும், உறுதியும் இருக்க வேண்டும். குரல் நடுங்கக்கூடாது, பிசிறக்கூடாது. வாழ்க்கை ஒன்றே, அதை புலம்பிக் கழிக்காதே. எங்காவது குற்றம், அழுத்தம் தெரிந்தால் எதிர்த்து விடு. சிறிதும் பயப்படாதே. ஞாபகம் இருக்குமா?

கசப்பு மிட்டாய் (நீம் லட்டு) என்ற ஹிந்தி புத்தகத்திலிருந்து 

~ஆச்சார்ய பிரசாந்த் அவர்கள்.


Friday, December 22, 2023

ரோர்க்கும் டாமினிக்கும் - The Fountain Head.


 1945 ல் வெளிவந்த அயன் ராண்ட் எழுதிய The Fountain Head "பவுன்டென் ஹெட்" என்ற ஆங்கில நாவல் மிகவும் பிரபலமானது. அதில் கதாநாயகனாக வருபவன் ஹாவார்டு ரோர்க் (Howard Roark). அவன் பழமையை எதிர்த்து போராடக்கூடிய, சமூகத்துக்கு அடி பணியாத துணிச்சலான இளம் ஆர்க்கிடெக்ட். அவனுடைய காதலி, டாமினிக் Dominique. இந்த நாவல் தனி மனித சுதந்திரம், சமுதாயத்தின் நோக்கத்தை விட உயர்ந்தது என்று வலியுறுத்துகிறது. ஆச்சார்ய பிரசாந்த் அவர்களுக்கும் இந்தப் புத்தகம் சிறுவயதில் மிகவும் இன்ஸபிரேஷன் ஆக இருந்திருக்கிறது. அதில் வரும் ஒரு சம்பாஷணை பற்றி நேற்று வகுப்பில் பகிர்ந்து கொண்டார். அது உண்மையிலேயே மனதை தைப்பதாக இருந்தது.

ரோர்க்கும் டாமினிக்கும் நம் ஊர் காதலர்கள் போல் ஒன்றாக சேர்ந்திருக்கவில்லை. அவரவர் திசைகளில் அவரவர்பயணத்தில் இருந்தார்கள். என்றாவது ஒருநாள் சந்திப்பார்கள். ரோர்க் தன்னுடைய பணியில் எப்போதும் சுயத்தை விட்டுக்கொடுப்பதில்லை அதனால், சமூகத்தின் அடக்கு முறைகளுக்கும், அவதூறுகளுக்கு ஆளாக நேர்ந்தது. அவன் வாழ்வு கடுமையானதாகவே இருந்தது. ஒரு நாள் ரோர்க்கும் டாமினிக்கும் சந்திக்கிறார்கள். டாமினிக் கேட்கிறாள் - "நாம் எப்போதும் ஒன்றாக சேர்ந்தே இருக்க முடியாதா?" என்று. அதற்கு ரோர்க் சொன்ன பதில் அற்புதம்.
ஒருதடவை ரோர்க்கின் மீது அபாண்ட பழி சுமத்தி கோர்டுக்கு இழுத்து விட்டார்கள். அங்கே அவனை வக்கீல்கள் மிக மோசமான கேள்விகள் கேட்டு, அவமானப்படுத்துவார்கள். டாமினிக் பார்வையாளர்கள் இடத்தில அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பாள் . இந்த நிகழ்ச்சியை ரோர்க் நினைவு கூர்ந்து,
"Not till you remain hurt in the court room"
"கோர்ட்டில் நீ அடிபடுகிற வரை அது முடியாது." என்கிறான்.
ரோர்க்கை வக்கீல்கள் தகாத கேள்விகள் கேட்டு அவமானப் படுத்திய போது டாமினிக்கின் கண்களில் அடி பட்ட வருத்தம் தெரிந்தது. அவள் மனதில் ஏற்பட்ட வலியை கண்கள் காட்டிக் கொடுத்து விட்டன. அதை ரோர்க்கும் கவனித்து விட்டான்.
அடிபடுவது என்றால் சமூகத்திற்கு இன்னும் அடிமையாக இருக்கிறோம் என்று பொருள்.
மற்றவர்கள் சொல் நம் மனதை புண் படுத்த முடிந்தால், நாம் இன்னும் சுதந்திரமாக இல்லை என்று பொருள்.
சுலபமாக மனம் புண் படக்கூடியவர்கள் உயர்ந்த செயல்கள் நடைபெறுமிடத்தில் இருந்தால், அவர்களால் செயல்கள் பாதிக்கப்படும். அவர்கள் கீழானவர்களுடன் "புண் படுதல்" hurt மூலம் சம்பந்தம் ஏற்படுத்துவார்கள். அவர்களால் தெளிவாக, சுயமாக சிந்திக்க முடியாது. மனதை சிக்கலாக்கிக் கொள்வார்கள். மேலும், பிரச்சினைகளை பெரிதாக்குவார்கள். இப்படிப்பட்ட மனம் அந்த உயர்ந்த செயலுக்கே பாதிப்பை உண்டாகும்.
ரோர்க் டாமினிக்கின் கண்களில் அடிபட்ட வலியை பார்த்தான். அவனோ மனதில் ஆடாமல், அசையாமல் திடமாக நின்று கொண்டிருக்கிறான். அவனை யாருடைய வார்த்தைகளும் தொடவேயில்லை. டாமினிக்கின் மனம் ரோர்க்குக்காக அழுதது. இந்த அழுகை, இந்த வலி அன்பின் பிரதிபலிப்பு இல்லை, பலஹீனத்தின் பிரதிபலிப்பு. அவளுக்குள் உள்ள காதலியின் வருத்தம். அவளால் தன் காதலனைப் பற்றி தரக்குறைவாக பேசுவதை சகிக்க முடியவில்லை. இது மனதின் பலஹீனம். ரோர்க் மனஉறுதி படைத்தவன். அதனால் தான், நீ உன் பலகீனத்தை வைத்துக்கொண்டிருக்கும் வரை நாம் ஒன்றாக இருக்க முடியாது என்கிறான்.
என்னை காயப் படுத்திவிட்டார்கள் என்று கண் கலங்குவதை விட்டுவிட்டு, நான் காயப் பட்டது என் பலஹீனத்தால் தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். காயப் பட்டுவிட்டால் பழி வாங்காமல் இருக்க முடியாது. மன்னிப்பு என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே சமாதானப் படுத்திக்கொள்ள செய்யும் முயற்சி. அடி பட்ட அந்த வினாடியே நாம் அவர்கள் நிலைக்கு இறங்கி விட்டோம். தோற்று விட்டோம். விழிப்புணர்வு இல்லாமல் தானாகவே அடி பட்டது, அதே போல் விழிப்புணர்வு இல்லாமல் தானாகவே பழி வாங்குதலும் நடக்கும். நம் வாழ்வே அடி படுதல் , பழி வாங்குதல் என்ற இரண்டின் தொடர் நிகழ்வு தான். நாம் பெரும்பாலான செயல்கள் பழிவாங்கும் அடிப்படையில் தான் செய்கிறோம். நாங்கள் ஏழையாய் இருந்த போது யாரும் மதிக்கவில்லை என்ற வலி, பணத்தை சம்பாதித்து அதை காலில் மிதிக்க வேண்டும் என்ற பழி வாங்கும் உணர்ச்சியை தூண்டியது. அக்காவுக்கு வசதியான வெளிநாட்டு கணவர் என்ற வலி, தங்கைக்கு தானும் அதைப் போல ஒரு கணவரை அடைய வேண்டும் என்ற உணர்ச்சியை தூண்டியது. அது இயல்பான உணர்வு அல்ல. பழி வாங்கும் உணர்வு.
பழி வாங்கினால் காயம் ஆறாது, மாறாக, அது காயத்தை பெரிதாக்கும், ஆழப்படுத்தும்.
மனதில் உயர்வுநிலை அடைய பெற்றவர்கள் கீழானவர்கள் நிந்தனைகளை பொருட்படுத்தக்கூடாது. நம்மை நிந்திக்க வேண்டுமென்றால் அதற்கும் ஒரு தகுதி வேண்டும். நம்மை விட உயர்ந்தவர்கள் நம்மை நிந்தித்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மை விட தாழ்ந்தவர்களின் நிந்தனைகளை பெரிதாக எடுத்துக்கொண்டு மனம் புண் பட்டோமென்றால், அது நாம் கற்ற கல்விக்கு, நமக்கு கற்பித்த குருவுக்கு செய்யும் துரோகமாகும்.
~பரமேஸ்வரி
பரம் அத்வைத்.

Wednesday, December 13, 2023

கசப்பு மிட்டாய் -2

 

பாம்பு, பூரானோடு வாழ்வதை விட, தனியாக வாழ்ந்து விடுவது எவ்வளவோ மேல், இல்லையா? விஷம் சாப்பிடுவதை விட பட்டினியாக இருந்து விடலாம்.

பொறுமையாகக் காத்திரு! காத்திருத்தலும் பிரார்த்தனை தான். என்னை உன்னிடம் சேர்க்கத் தகுதியான துணை கிடைக்காததால், தனிமையில் காத்திருக்கிறேன் என்பது கூட அன்பு தான், ஆன்மீக சாதனை தான். சரியான திசையை நோக்கிப் போகக் கூடிய வண்டி கிடைக்கவில்லையென்றால், தவறான திசையில் செல்லும் வண்டியில் பயணம் செல்வோமா? காத்துக்கொண்டிருப்போம் அல்லது நடந்து போவோம். அது நமக்கு ஒப்புதல் தான். ஆனால், தவறான திசையில் செல்லும் வண்டியில் அமர ஒப்புக்கொள்ள மாட்டோம். சரியான நட்பு கிடைக்காததால் நான் உன்னைத் துணையாகப் பெற்றேன். ஆனால், சுமையாக வரும் யாரையும் என்னோடு சேர்த்துக்கொள்ளவில்லை.
வண்டியோடு உறவு கொள்வது எப்போது என்றால், அது உன்னை போக வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லலும் போது தான். யாராவது உன்னிடம், விபத்துக்குள்ளாக்கும் வண்டியைக் கொண்டு வந்து கொடுத்தால், அந்த வண்டியில் போவதை விட கால்நடையாக நடந்து போவதே மேல் இல்லையா?
~ஆச்சார்ய பிரசாந்த் ஜி.
கசப்பு மிட்டாய் என்ற ஹிந்தி புத்தகத்திலிருந்து.

கசப்பு மிட்டாய் - 1

 


நீ திருமணம் செய்து கொள் ! ஆனால், திருமணத்தால் தனிமை குறையும் என்று நம்பிக்கை வைக்காதே! பாலுறவு இத்யாதிக்கு வாய்ப்புகள் நிறையவே கிடைக்கும். எல்லாம் நடக்கும்! குழந்தை குட்டி உண்டாகிவிடும். வீடு வாசல் அமையும். தாய் தந்தையரின் நம்பிக்கைகள் நிறைவேறும். அருமையான வீட்டு சாப்பாடு கிடைக்கத் தொடங்கும். வீடு ஒழுங்காக இருக்கும். துணிமணியெல்லாம் நன்றாக இருக்கும். முகத்தில் ஒரு களை வரும். திருமணத்துப் பின் இவையெல்லாம் நடக்கும். வரதட்சிணை கிடைக்கும். பைக் வைத்திருந்தால், கார் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வாடகைக்கு வீடு கிடைக்கும். இது எல்லாமே நடக்கும்.

ஆனால், தனிமை? அது மட்டும் போகாது.
~ஆச்சார்ய பிரசாந்த் ஜி.
கசப்பு மிட்டாய் (Neem Laddu) என்ற ஹிந்தி புத்தகத்திலிருந்து.

Thursday, December 7, 2023

இன்பத்தில் தொழுவார் யாருமில்லை ~ கபீர் தாசர்

 


துன்பத்தில் யாவரும் தொழுவார்கள், இன்பத்தில் தொழுவார் யாருமில்லை.

இன்பத்திலும் தொழுத்தாரென்றால், துன்பம் அவர்க்கு வருமோ சொல்!

दुःख में सुमिरन सब करे, सुख में करे न कोय ।
जो सुख में सुमिरन करे, तो दुःख काहे को होय ।
~ கபீர் தாசர் பெருமான். 

கபீர் தாஸரின் குறள்கள் படிப்பறிவில்லாத சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் மிகவும் எளிமையாக இருக்கும். கேட்டவுடன் புரிந்து விட்டது போலவே தோன்றும். உண்மையில் அவரின் ஓவ்வொரு குறளிலும் வாழ்க்கை தத்துவமே அடங்கியுள்ளது. அது ஒரு சூத்திரம் போலவும் இருக்கும். எளிமையாக இருப்பதனால், எல்லாம் புரிந்து விட்டதாக நினைத்துக்கொண்டால் சாராம்சத்தை தவற விட்டுவிடுவீர்கள்.

துன்பம் வரும் போது எல்லோரும் கடவுளை நினைப்போம். இன்பமாக இருக்கும் பொது யாருமே நினைப்பதில்லை. இன்பத்திலும் நினைத்தால், துன்பமே வராது என்று இந்தக் குறளுக்கு பொருள் சொல்வார்கள்.  

இவ்வுலகில் துன்பத்தை விரும்புபவர்கள் யாருமில்லை. எல்லோருக்குமே இன்பம் தான் வேண்டும். ஆனால், பலரும் துன்பப் படுவதைத் தான் அதிகம் பார்க்கிறோம். இன்பத்தை தானே விரும்பினோம், பிறகு ஏன் துன்பம் வருகிறது?  இது என்னவோ ஒரு சூது வாதில்லாத innocent ஆன கேள்வியாகத் தெரிகிறது இல்லையா? அப்படி இல்லை.

கனக்குப் பாடத்தில் இரண்டாவது வாய்ப்பாடு தெரிந்திருக்க வேண்டியது, ஒரு அடிப்படையான விஷயம், இல்லையா? அது தெரியாமல் கணக்கு போட்டால் சரிப்பட்டு வராது. ஆங்கிலதில் பேச வேண்டுமென்றால், குறைந்த பட்சம் A, B, C , D தெரிந்திருக்க வேண்டும். அதுபோல், வாழ்க்கையில் நாம் படித்திருக்க வேண்டிய ஒண்ணாங்கிளாஸ் பாடம் - இன்பமும் துன்பமும் எப்போதும் தனித்தனியாக வராது. இரண்டும் சேர்ந்தே தான் வரும்! ஒன்று கேட்டால் இன்னொன்று இலவசமாக கிடைக்கும்.

நாம் ஏன் துன்பப படுகிறோம்? ஏனென்றால், நாம் இன்பத்தை விரும்பினோம்! நேரடியான பதில் இது. வேறு பல காரணங்களெல்லாம் சொன்னாலும், நேரடியான காரணம் நீங்கள் இன்பத்தை விரும்பியது தான்.

அப்படியா? இன்பமாக இருப்பது அவ்வளவு பெரிய குற்றமா?

இன்பமாக இருப்பது குற்றமில்லை. ஆனால் இன்பமென்றால் என்னவென்றே தெரியாமல் இருப்பது குற்றம்.

இன்பத்தின் செயற்பாடு என்னவென்று தெரியாமல் துன்பத்திலிருந்தும் தப்பிக்க முடியாது. எனவே, இன்பமென்றால் என்னவென்று புரிய வேண்டியது அவசியம். இன்பத்தைத் தேடியும், துன்பதத்தை விட்டோடியும் வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்து விட்டோம். ஏற்கனவே மிகுந்த கால தாமதம் ஆகி விட்டது. இப்போதாவது இன்பம், துன்பம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம்!

நாம் இருக்கிறோம். மற்றும், உலகில் பல பொருட்களும், மனிதர்களும், சூழ்நிலைகளும் இருக்கின்றன. உலகில் உள்ள பொருட்களில் சில நமக்கு சுகமான அனுபவத்தை (pleasure ) ஏற்படுத்துகின்றன, சில பொருட்கள் துக்கமான அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவேளை, உங்களுக்கு தோசை பிடிக்கும் என்றால், தோசையைப் பார்த்தவுடன் சுகம் என்ற அனுபவம் ஏற்படும். உங்களுக்கு ஒரு நண்பரை பிடிக்கும் என்றால் அவரைப் பார்த்தவுடன் மனம் குதூகலிக்கும். உங்களுடைய குழந்தைகளை நினைக்கும் பொது மகிழ்ச்சியான நினைவுகள் ஏற்படும். சிலருக்கு கசப்பான உணர்வுகளும் ஏற்படலாம். உலகத்தோடு சம்பந்தப் படும் போது நமக்கு உண்டாகும் அனுபவங்களை இன்பம், துன்பம் என்று சொல்கிறோம்.  

இன்பம் கொடுக்கும் பொருட்கள் தனி, துன்பம் கொடுக்கும் பொருட்கள் தனி என்று தனித்தனியாக எதுவுமில்லை . எந்தப் பொருளால் இன்பம் கிடைத்ததோ, அதே பொருளால் தான் துன்பமும் ஏற்படுகிறது. நீங்கள் விரும்பாத ஒருவரை வெறுப்பது முடியாது. மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ஏனென்றால், அவர்கள் மனதில் நமக்கு உயர்ந்த இடம் வேண்டுமென்று விரும்புவதால் தானே?  அந்த விருப்பம் நிறைவேறாத போது கோபம், வருத்தம் எல்லாம் உண்டாகிறது. பணத்தை நாம் எல்லோரும் விரும்புகிறோம் இல்லையா, அதனால் தான், பாக்கெட்டில் பணம் குறைந்து விட்டால் பலருக்கு உடம்பில் சத்தே போனது போல் ஆகி விடுவார்கள். சிடுசிடுவென்று விழுவார்கள். பயமாக இருக்கும். மீண்டும் பணத்தைப் பார்த்தால் தான் எழுந்து உட்காருவார்கள்.

உலகில் இன்பம் தரும் பொருட்கள் என்று எதுவும் இல்லை. இன்பம் என்பது நம்முடைய தனிப்பட்ட கருத்து தான். நம்முடைய தனிப்பட்ட கருத்து என்பது கூட சரியில்லை. நாம் அப்படி பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம். கோவில் மணியோசை இந்துவுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம் . ஆனால், ஒரு இஸ்லாமியருக்கு மணியோசை வெறும் சத்தம் தான். இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் விளையாடும் போது இந்தியா வென்றால், இந்தியர்களுக்குத் தான் இன்பமாக இருக்கும். பாகிஸ்தானுக்கு துக்கமாக இருக்கும். நாம் இந்தியர்கள் என்று பயிற்றுவிக்கப் பட்டிருப்பதால், இந்தியா வெற்றி பெற்றால் இன்பம் என்ற உணர்வு ஏற்படுகிறது. ஒருவேளை, இந்தியக் குழந்தை பாகிஸ்தானிலேயே பிறந்து வளர்ந்திருந்தால், அதற்கு இந்தியா ஜெயித்தால் இன்பம் வராது. நாம் இந்தியர்கள், இந்தியாவின் வெற்றி உன் வெற்றி என்று சிறு வயதிலிருந்து பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம். 

எனவே இன்பம் என்று நாம் கருத்துவதெல்லாம் நம் சொந்த விஷயம் இல்லை. சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, நம்ப வைக்கப் பட்ட ஒரு கருத்து தான் இன்பம். iphone வாங்கிவிட்டால் இன்பம் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? யார் சொன்னது? திரும்பத் திரும்ப இந்தக் கருத்து ஊடகங்களும் , சுற்றி இருப்பவர்களும் உங்கள் மனதில் திணிக்கப் பட்டது. iphone வைத்திருந்தால் பெருமை என்று நம்பவைக்கப் பட்டீர்கள். ஒரு நாள் iphone கிடைத்து விட்டால் எப்படி சந்தோசமாக இருக்கும்!

நம் சந்தோஷங்களெல்லாம் உண்மையில் நம் சந்தோஷங்கள் இல்லை. வேறு யாரோ, நாம் எதற்கு சந்தோசப் படவேண்டும், எதற்கு கவலைப் பட வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். பெற்றோர்கள், உறவினர், நண்பர்கள், ஆசிரியர்கள், நாடு, இனம், மதம், கல்வி, அரசியல், சந்தை, சினிமா, டிவி, மீடியா என்று பல பேர் நாம் எதற்கு சுகப்பட வேண்டும், எதற்கு துக்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கிறார்கள். 

நம் உடலில் உள்ள ரசாயன மாற்றங்கள் மற்றொரு காரணம். 16 வயதில் வயசுப் பையன்களை, பெண்களைப் பார்த்தால் இன்பமாக இருப்பது, வெறும் ரசாயன மாற்றம் தான். காதல் என்று சொல்வதெல்லாம் வேறொன்றுமில்லை, உடலில் ஏற்படும் அரிப்பு தான்.

சரி, அப்படியாவது சுகமாக இருந்துவிட்டுப் போகலாமே என்றால், அதுவும் முடியாது. ஏனென்றால், நாம் எது இன்பம் தரும் என்று நினைக்கிறோமோ, அது அவ்வளவு சுலபமாகி கிடைப்பதில்லை. கிடைத்தாலும் இன்பம் கொஞ்ச நேரத்துக்கு தான். அதிக பட்சம், சில நாட்கள் அல்லது மாதங்கள் பேசாமல் இருப்போம். பிறகு, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும். விரைவில் அடுத்த மாடல் போன் வந்து விடும். கையில் இருப்பது பழசாகத் தெரியும். கெத்தாக இருக்காது. அல்லது கீழே விழுந்து கீறல் விழுந்து விட்டிருக்கும்.  

முதலில் இன்பம் என்று நாம் நினைப்பது நம்முடைய சொந்த விருப்பமே இல்லை.நம் விருப்பங்களெல்லாம் யார் யாரோ நமக்குள் வீசி எறிந்துவிட்டுப் போன குப்பை! அந்தக் குப்பைகளால் மனது கெட்டுப் போயிருக்கிறது. இன்பம் என்றோ ஒருநாள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த காத்திருப்பு தான் துன்பம். வந்த இன்பத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்று பரிதவிக்கிறது. இந்தப் பரிதவிப்பே துன்பம். இன்பத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் துன்பம். இன்பத்தைத் தேடி அடைய செய்யும் முயற்சிகள் யாவும் துன்பம்.

துன்பம் வந்துவிட்டால், இந்த உலகமே பொய், யாரையும் நம்பக கூடாது, என்னை ஏமாற்றி விட்டார்கள் என்றெல்லாம் அழுது புலம்புவோம். கடவுளே, காப்பாற்று என்று கோயிலுக்கு ஓடுவோம். சோகப் பாடல்களை கேட்போம். மோட்டிவேஷன் வீடியோக்கள் பார்ப்போம். பட் , இட்'ஸ் டூ லேட்! எப்போது இன்பம் இது தான் என்று நினைத்தீர்களா அப்போதே துன்பத்திற்கான விதையை விதைத்து விட்டீர்கள். அது துளிர் விட்டு, செடியாகி, மரமாகி அதன் பலனைத் தரும் பொது தான், "ஐயோ, கசக்கிறதே" என்று துப்புகிறீர்கள். வேறு வழி இல்லை. அனுபவித்துத் தான் ஆகா வேண்டும்.

கபீர் ஐயா என்ன சொல்கிறார் பாருங்கள். இப்போது நன்றாகக் புரியும். துன்பம் வரும் போது தொழுது என்ன பயன்? இன்பம் வரும் போதே, உலகம் பொய், ஏமாற்றப் படுகிறோம், இது வெறும் உணர்வு தான், உண்மையில்லை என்று தெளிவாக பார்த்திருந்தோமென்றால்,, துன்பம் வந்திருக்கவே முடியாது. 

தொழுவது என்றால் காலில் விழுந்து கும்பிடுவது என்று அர்த்தமில்லை. தொழுவது என்றால் எது நமக்கு நன்மை தருமோ, அதை வணங்குவது, நம் இயல்பான ஆனந்தத்திற்கு தடையாக இருப்பவைகளை வேண்டாமென்று என்று ஒதுக்குவது.

துன்பம் வந்த பிறகு தொழுபவர்கள் ஞானி ஆக முடியாது, முக்தி அடைய முடியாது. ஏனென்றால், அவர்கள் இன்பத்தை வேண்டித் தொழுகிறார்கள். வேண்டித் தொழுவதால் அது வேண்டுதல் எனப்படுகிறது. இஷ்ட தேவதை என்றால் நாம் இஷ்டப் படுவதைக் கொடுக்கும் தேவதை என்று பொருள். இவர்கள் துன்பத்தைத் துடைக்க வேறு ஒரு பொருள் கிடைத்தால் போதும். ஞானமெல்லாம் தேவையில்லை. ஒரு காதல் பிரேக் அப் ஆனால், சீக்கிரமே இன்னொரு காதல் வந்து அந்த துக்கத்தை துடைத்து விடும், தற்காலிகமாக!


சுமிரன் என்ற வார்தைக்குப் பொருள் "நினைவு கூர்தல்" என்று பொருள். இன்பத்திலும், துன்பத்திலும் கடவுளை நினைக்க வேண்டும் என்றால் முருகனையே, ராமனையோ நினைக்க வேண்டும் என்று எடுக்கக் கூடாது. கடவுள் என்பது அனைத்தையும் கடந்தது என்றால், அதைப் பற்றி எதுவுமே நினைக்க முடியாது. ஏனென்றால், நம்மால் பொருள்களை மட்டும் தான் நினைக்க முடியும். மனது எப்போது அலை பாயாமல், ஆசைகளற்று இருக்கிறதோ, எப்போது நம் மனம் என்ற சிம்மாசனம் காலியாக இருக்கிறதோ, எப்போது உள்ளே மெளனமாக இருப்பதில் திருப்தியாக இருக்கிறோமோ, அப்போது கடவுளின் "சுமிரன்" இருக்கிறது. அப்போது, கடவுளை தொழுகிறோம், வணங்குகிறோம், ஆராதிக்கிறோம் என்று பொருள். வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.

மனிதனுக்கு இன்ப வேட்கையை விட்டு விடுவது அவ்வளவு சுலபமாக இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறான். இந்தப் பொருள் இல்லையென்றால், வேறொரு பொருளில், வேறு மனிதர், வேறு நாட்டில், வேறு வேலையில் இன்பம் கிடைக்கும் என்று விடாமுயற்சியுடன் இன்பத்தைத் துரத்திக் கொண்டிருக்கிறான். அவனுடைய இன்பவேட்கை உலகத்தையே முடித்துக் கட்டி விடும் போல இருக்கிறது. ஆனாலும, அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை தீர்ந்த பாடில்லை.  துன்பத்தின் நிறமும் வடிவமும் மாறிக்கொண்டே இருக்கும், அது தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கும்.

ஞானிகள் சொல்வதை மீண்டும் மீண்டும் கேட்டு, படித்து, உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். நாம் யார் என்று நினைவு படுத்திக்க கொள்ள வேண்டும். ஒரு வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளுக்கு அவ்வளவாக துன்பமில்லை. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றன. அதனுடைய கை விரலைகளைப் பார்த்தே சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கும். உண்மையில் நாம் மகிழ்ச்சியோடு இருக்க பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. தேவை என்று நினைத்து எதையாவது தேடித் போவது தான் மகிழ்ச்சியைக் கெடுத்து விடுகிறது.

எவன் இன்பம் வரும் போதே உஷாராக இருக்கிறானோ, இன்பத்தையும் துன்பத்தையும் இணை பிரியாதவை என்று அறிகிறானோ, அவன் மனம் இன்பம் வேண்டி அலையாது. அலையாத மனம் அன்பான மனம், ஆனந்தமான மனம்! தெளிவான, திடமான மனம்! இன்பத்தை அனுபவிக்காதே என்று சொல்லவில்லை, இன்பம் என்பது துன்பத்துக்கான பொறி trap என்பதை புரிந்து கொண்டால் போதும். அப்போது, இன்பம் வந்தால் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம், அது இல்லையென்றால் சரி பரவாயில்லை என்று விட்டு விடவும் முடியும். இன்பத்தையும் துன்பத்தையும் கண்டு நிலை குலைய மாட்டோம்.










 



Tuesday, December 5, 2023

சிறு துரும்பும் ~கபீர் தாஸ்.


 

காலில் மிதிபடும் துரும்பென்று எவரையும்  இழிவாய்  எண்ணாதே! 

பறந்து வந்து ஓர் நாள் கண்ணில் விழுந்தால்  வலியோ தாங்காதே!

तिनका कबहुँ ना निंदिये, जो पाँव तले होय ।
कबहुँ उड़ आँखो पड़े, पीड गहरी होय ॥
~கபீர் தாஸ்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. சிறிய துரும்பு தானே என்று தூக்கி எறிந்துவிடாதே, அதுவும் உனக்கு பல் குத்த உதவும், எனவே தாழ்ந்தவர் என்று எவரையும் ஒதுக்காதே. அவர்களாலும் நன்மை உண்டு என்று பொருள்.  

காலடியில் கிடக்கும் துரும்பு தானே என்று ஏளனமாக நினைக்காதே. ஒருவேளை, அது பறந்து வந்து உன் கண்ணில் விழுந்தால், அதன் வலி மிகவும் ஆழமாக இருக்கும் என்கிறார்.
பொதுவாக நாம் நம்மை விட ஏதாவது ஒரு விதத்தில் குறைந்தவர்களை துரும்பைப் போல கேவலமாகத் தான் மதிக்கிறோம். வேலைக்காரி, கூலித் தொழிலாளர்கள், வீதி கூட்டுபவர்கள், டிரைவர்கள், ஏழைகள் போன்றவர்களை நாம் கௌரவமாக நடத்துவதேயில்லை. இவர்கள் நம்மை என்ன செய்து விடப் போகிறார்கள் என்ற இறுமாப்பு காரணமாக இருக்கலாம். நம்முடைய குழந்தைகளைக் கூட பலசமயம் சிறு துரும்பாகத்தான் நடத்தி விடுகிறோம். குழந்தைகள் தானே, நம்மை எதிர்த்துப் பேச முடியுமா? நம்மை விட்டுப் போய்விடத்தான் முடியுமா? அதனால், நம்முடைய எல்லா வன்மங்களையும் அவர்கள் மேல் தாராளமாகக் காட்டுவோம். மனைவியை துரும்பாக மதிக்கும் ஆண்கள் அநேகம். அவர்களை அண்டி இருக்கிறாள் என்ற ஒரே காரணத்தால், அவளை கேவலமாக நடத்துவார்கள். 

உங்களுக்கும் வயதாகும். முதுமை வரும். கை, கால் சோர்வடையும். நோய் வாய்ப்படுவீர்கள். அப்போது, அவர்கள் பெரியவர்களாகி இருப்பார்கள். நீங்கள் துரும்பென்று மதித்தவர்கள் உங்கள் கண்ணுக்குள் நுழைந்து உறுத்துவார்கள். உங்களால் வலி தாள முடியாது. பல பெண்கள், ஆண்கள் ரிட்டையர் ஆகும் வரை எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டிருப்பார்கள். கணவர் ரிட்டையர் ஆன பின், பிள்ளைகளிடமிருந்து பணம் வர ஆரம்பித்து விட்டால் போதும், அவர்கள் கை ஓங்கிவிடும். கண்ணின் இமை போல் இருந்தவள், கண்ணில் முள்ளாக மாறி குத்த ஆரம்பித்து விடுவாள். துப்புரவுத் தொழிலாளர்களை நாம் பெரிதாக மதித்ததில்லை. ஆனால், கொரோனா சமயத்தில், அவர்களுக்கு எப்படிப் பட்ட அதிகாரம் கிடைத்தது என்று நமக்குத் தெரியும். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்கள் நினைத்தால் உங்களைக் காப்பாற்றவும் முடியும், கட்டி இழுத்துக் கொண்டு போய் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் தள்ளி விடவும் முடியும். உங்களை வீட்டோடு தனிமைப் படுத்தி விடவும் முடியும். நடு வழியில் நிற்க வைத்து உங்களை பரிசோதிக்க முடியும். சிறு துரும்பென்று யாரையும் அவமரியாதை செய்யக் கூடாது. அவர்களுக்கென்று ஒரு காலம் வரும் போது அவர்களால் மிகுந்த வேதனையை அனுபவிக்க நேரிடும். இன்னும் நுட்பமான முறையில் பார்த்தால், துரும்பு என்பதை எண்ணங்களோடு தொடர்பு படுத்திப் பார்க்கலாம். எல்லா இடங்களிலிருந்தும் எண்ணங்கள் நம் மனதிற்குள் புகுந்து விடுகின்றன தூசியைப் போல். அப்பா சொன்னது, அம்மா சொன்னது, சினிமாவில் பார்த்தது, டிவி யில் கேட்டது, பேஸ் புக் போன்ற வலைத்தளங்களில் பார்த்தது, மூதாதையர் சொன்னது என்று குப்பை போல் எண்ணங்கள் நமக்குள் வந்து குமிந்து கொண்டிருக்கிறது. இவை சாதாரண எண்ணங்கள் தானே என்று விட்டு விட்டால், அவை நமக்குள் ஊடுருவி நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடும். மந்தரை சொன்ன சொல்லைக் கேட்டதால், கைகேயியின் மனதில் தவறான எண்ணம் புகுந்தது. அது அவள் கணவனின் உயிரையும் குடித்தது. மாய மான் வேண்டும் என்ற எண்ணத்தால் சீதா பட்ட கஷ்டங்கள் எவ்வளவு என்று நமக்குத் தெரியும். எண்ணங்கள் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவற்றிற்கு யானை பலம் உண்டு. மனதில் என்ன எண்ணம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கவனிக்க வேண்டும். எண்ணம் தானே யாருக்குத் தெரியப் போகிறது என்று அசால்டாக இருந்து விட்டோமென்றால் அது கண்ணுக்குள் நுழைந்த தூசி போன்று ஆகி விடும். நம் பார்வையை மறைத்து விடும். கண்ணில் விழுந்து விட்டால் கூட வெளியே எடுத்துவிடலாம். ஆனால், மனதுக்குள் ஒரு எண்ணம் விழுந்து விட்டால் வெளியே எடுப்பது மிகவும் கடினம். சிறுதுறும்பை விடவும் சிறியது அணு, அதை விடவும் சிறியது எண்ணம். ஆனால், ஒரே ஒரு எண்ணம் போதும். எண்ணத்தால் பேரரசுகள் கவிழ்த்துள்ளன , பெரும்போர்கள் மூண்டுள்ளன! குடும்பங்கள் பிரிந்துள்ளன!  

மனதில் ஒரு எண்ணம் வருவது தெரிந்தவுடன், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது. சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த எண்ணம் சரிதானா? இதில் உண்மை இருக்கிறதா? அல்லது யாரோ சொல்வதை நம்புகிறேனா? இப்படி எண்ணத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மதிப்பு என்ற வார்த்தைக்கு பொருள் என்ன தெரியுமா? நான் இந்த மலையை மதிக்கிறேன் என்றால் மலையை கவனிக்கிறேன் என்று பொருள். ஒரு கவிஞரை மதிக்கிறேன் என்றால் அவருடைய கவிதையை கவனித்துப் படிக்கிறேன் என்று பொருள். நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நபர்கள், நிகழ்வுகள் எல்லாம் நம் மதிப்புக்குரியவை. அதவாது நம் கவனத்துக்குரியவை. கவனமின்றி இருக்கும் தருணத்தில் ஆணவம் பிறப்பெடுக்கிறது. ஆணவத்தின் பலன் என்னவென்று அனுபவித்த எல்லோருக்குமே தெரியும். புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. ஆணவத்தில் அழிந்து போனான் என்று சொல்வழக்கே இருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களிலும் கவனமாக இருங்கள். சின்னச்சின்ன மனிதர்களையும், சின்னச் சின்ன விலங்குகள், பறவைகள், புழு பூச்சிகளையும் கூட அக்கறையோடு பாருங்கள்.


உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்!


May be a doodle

 உலகை ஆளும் நாயகனே!

என்னுள் ஓடிக்கொண்டிருக்கும்
ஓயாத இயக்கத்தையும்,
அதை இயக்குபவனையும்,
எனக்குக் காட்டிக் கொடுத்தாய்!
அன்பே,
என் ஒரே வேண்டுகோள் இது தான்.
மயக்கத்தில் ஆழ்த்தும்
எல்லா கட்டளைகளையும்,
மருட்சியை விருட்சமாக்கும்
விதைகள் அனைத்தையும்,
தேடிப் பிடித்து
துவம்சம் செய்து விடு!
என்னுள் இருக்கும் என்னை எடுத்துக்கொண்டு
பதிலுக்கு,
என்னிடத்தில் உன்னை நிரப்பிவிடு!
~பரமேஸ்வரி
பரம் அத்வைத்.

வேதாந்தம் பகுதி 3- நான் யார்?


May be a graphic

 வேதங்கள் நான்கு, ரிக், சாம, யசூர், அதர்வணம். அதில் ஓவ்வொன்றிலும் இறுதிப் பாகமாக வருவது வேதாந்தம். இதில் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை இம்மூன்றும் அடக்கம்.

ஆசைகளின் பூர்த்தியால் மனநிறைவு பெற முடியாது என்றால் வேறு என்ன செய்வது என்று விசாரணை (enquiry) செய்ததன் பயன் தான் வேதாந்தம். துன்பத்திலிருந்து விடுதலை வேண்டும் என்றால் முதலில் யார் துன்பப் படுகிறார்கள் என்று தெரிய வேண்டும் இல்லையா? யாருக்கு துன்பமாக இருக்கிறது என்று தெரிந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். இங்கே தான் யாருக்குத் துன்பம் என்ற கேள்வி வருகிறது. எல்லோரும் என்ன சொல்வோம்? நான் தான் கஷ்டப்படுகிறேன் என்போம். "நான்" என்பது இல்லாமல் எந்த அனுபவமுமே இல்லை. எனவே, "நான்" யார்? என்பது தான் வேதாந்தத்தின் மையமான கேள்வி. ஆன்மீக வட்டாரங்களில் இது மிகவும் பிரபலமான கேள்வி.
அறிவியல் வளர்ந்தது, கேள்விகள் கேட்டதால் தான். கண்டதெல்லாம் உண்மை என்று ஒத்துக் கொள்ளாமல் தூண்டித் துருவி கேள்வி கேட்டு உண்மையை கண்டறிந்தார்கள். Scientific spirit அறிவியல் நோக்கு என்பது கேள்விகள் கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை ஆகும். மூட நம்பிக்கைகளை எல்லாம் ஒழித்துக் கட்டியது அறிவியல் தான். அறிவியல்,உலகத்தையே ஆராய்ச்சிக்கூடத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தியது. இதே spirit, மனப்பாங்குடன் வாழ்க்கையை சந்தித்தவர்கள் தான் நம் ரிஷிகள். மேற்கில் வெளி உலகை ஆராய்ந்தார்கள், ரிஷிகள் உள் உலகை ஆராய்ந்தார்கள்.
இவ்வுலகில் நாம் வாழ்கிறோம். வாழ்வின் மையத்தில் இருப்பவன் நான். நான் இல்லாமல் உலகம் இல்லை. நான் தான் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறேன். இந்த "நான்" ஐ புரிந்து கொண்டால் வாழ்க்கையின் சூக்ஷமம் புரிந்து விடும் அல்லவா? எனவே, "நான்" என்பது தான் அவர்கள் எடுத்துக் கொண்ட பேசு பொருள் (subject matter) அவர்கள் ஆராய்ச்சிக்கூடத்திற்குள் நுண்பெறுக்கிக்கடியில் கொண்டு வந்த பொருள் "நான்".
அறிவியல் உலகைப் புரிந்து கொள்ள மேற்கொண்ட முயற்சி.
வேதாந்தம் தன்னைப் புரிந்து கொள்ள மேற்கொண்ட முயற்சி.
அறிவியலும் வேதாந்தமும் உண்மையை அறிய வேண்டும் என்ற மனிதனின் ஆழ்ந்த விருப்பத்துக்கு ஆதாரமாகும்.
உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தாகத்தை அன்பு என்றும் சொல்லலாம். உண்மையை நேசிப்பதே உண்மையான அன்பு. அதைத் தவிர வேறு எதுவும் அன்பில்லை. நாம் அன்பு என்று சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் அன்பில்லை. நம் உறவினர்கள் மீது வைத்திருப்பது, நம் உடைமைகள் மேல் வைத்திருப்பது எல்லாம் உண்மையில் அன்பு கிடையாது. அதற்கு வேறு பெயர் வேண்டுமானால் கொடுத்துக் கொள்ளலாம். நிச்சயமாக அன்பில்லை. நன்றாகத் தெரிந்து, புரிந்து தான் சொல்கிறேன். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வேதாந்தத்தில் அன்பு என்ற சொல் ஒரு முறை கூட உபயோகப்படுத்தப் படவில்லை! அன்பைப் பற்றி பேச வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை போலும். அவர்களின் அறிவு தாகத்துக்குப் பின்னால் அன்பு மறைந்திருக்கிறது!
நம்மில் பலருக்கு அறிவியலில் மிகுந்த ஆர்வம் இருக்கும். தேடித் தேடிப் போய் தெரிந்து கொள்வோம். புதுப்புது தொழில் நுட்பமெல்லாம் அனாயாசமாகக் கற்றுக் கொள்வார்கள். ஆனால், நம்மைப் பற்றி,நம் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை. வேண்டுமென்றே தவிர்ப்போம். காரணம் இது தான். இதில், நம்மையே நாம் ஆராய்ச்சிக்கூடத்துக்குள் கொண்டு வர வேண்டி இருக்கிறது. நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டி வரும். நாம் நம்பிக்கொண்டிருக்கும் கருத்துகள் (concepts ), பழக்க வழக்கங்கள், அடையாளங்கள் (identities) யாவும் ஆட்டம் காணலாம். அதற்கு யாரும் தயாராக இல்லை. தூங்கற மணியாரத்த எழுப்ப வேண்டாமென்று சொல்வார்களே, அப்படி. உண்மையை நேருக்கு நேர் சந்திக்க பலருக்கு பயமாக இருக்கிறது. உண்மையை சந்திக்க அசாத்தியமான துணிச்சல் தேவைப்படும். அந்தத் துணிச்சலே அன்பென்றும் சொல்வார்கள்.
தன்னை விட, உண்மையை அதிகம் நேசிக்கும் மனம் கொண்டவர்கள் மட்டுமே பயணிக்கும் பயணம் இது.

வேதாந்தம் பகுதி 3- நான் யார்?