1945 ல் வெளிவந்த அயன் ராண்ட் எழுதிய The Fountain Head "பவுன்டென் ஹெட்" என்ற ஆங்கில நாவல் மிகவும் பிரபலமானது. அதில் கதாநாயகனாக வருபவன் ஹாவார்டு ரோர்க் (Howard Roark). அவன் பழமையை எதிர்த்து போராடக்கூடிய, சமூகத்துக்கு அடி பணியாத துணிச்சலான இளம் ஆர்க்கிடெக்ட். அவனுடைய காதலி, டாமினிக் Dominique. இந்த நாவல் தனி மனித சுதந்திரம், சமுதாயத்தின் நோக்கத்தை விட உயர்ந்தது என்று வலியுறுத்துகிறது. ஆச்சார்ய பிரசாந்த் அவர்களுக்கும் இந்தப் புத்தகம் சிறுவயதில் மிகவும் இன்ஸபிரேஷன் ஆக இருந்திருக்கிறது. அதில் வரும் ஒரு சம்பாஷணை பற்றி நேற்று வகுப்பில் பகிர்ந்து கொண்டார். அது உண்மையிலேயே மனதை தைப்பதாக இருந்தது.
ரோர்க்கும் டாமினிக்கும் நம் ஊர் காதலர்கள் போல் ஒன்றாக சேர்ந்திருக்கவில்லை. அவரவர் திசைகளில் அவரவர்பயணத்தில் இருந்தார்கள். என்றாவது ஒருநாள் சந்திப்பார்கள். ரோர்க் தன்னுடைய பணியில் எப்போதும் சுயத்தை விட்டுக்கொடுப்பதில்லை அதனால், சமூகத்தின் அடக்கு முறைகளுக்கும், அவதூறுகளுக்கு ஆளாக நேர்ந்தது. அவன் வாழ்வு கடுமையானதாகவே இருந்தது. ஒரு நாள் ரோர்க்கும் டாமினிக்கும் சந்திக்கிறார்கள். டாமினிக் கேட்கிறாள் - "நாம் எப்போதும் ஒன்றாக சேர்ந்தே இருக்க முடியாதா?" என்று. அதற்கு ரோர்க் சொன்ன பதில் அற்புதம்.
ஒருதடவை ரோர்க்கின் மீது அபாண்ட பழி சுமத்தி கோர்டுக்கு இழுத்து விட்டார்கள். அங்கே அவனை வக்கீல்கள் மிக மோசமான கேள்விகள் கேட்டு, அவமானப்படுத்துவார்கள். டாமினிக் பார்வையாளர்கள் இடத்தில அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பாள் . இந்த நிகழ்ச்சியை ரோர்க் நினைவு கூர்ந்து,
"Not till you remain hurt in the court room"
"கோர்ட்டில் நீ அடிபடுகிற வரை அது முடியாது." என்கிறான்.
ரோர்க்கை வக்கீல்கள் தகாத கேள்விகள் கேட்டு அவமானப் படுத்திய போது டாமினிக்கின் கண்களில் அடி பட்ட வருத்தம் தெரிந்தது. அவள் மனதில் ஏற்பட்ட வலியை கண்கள் காட்டிக் கொடுத்து விட்டன. அதை ரோர்க்கும் கவனித்து விட்டான்.
அடிபடுவது என்றால் சமூகத்திற்கு இன்னும் அடிமையாக இருக்கிறோம் என்று பொருள்.
மற்றவர்கள் சொல் நம் மனதை புண் படுத்த முடிந்தால், நாம் இன்னும் சுதந்திரமாக இல்லை என்று பொருள்.
சுலபமாக மனம் புண் படக்கூடியவர்கள் உயர்ந்த செயல்கள் நடைபெறுமிடத்தில் இருந்தால், அவர்களால் செயல்கள் பாதிக்கப்படும். அவர்கள் கீழானவர்களுடன் "புண் படுதல்" hurt மூலம் சம்பந்தம் ஏற்படுத்துவார்கள். அவர்களால் தெளிவாக, சுயமாக சிந்திக்க முடியாது. மனதை சிக்கலாக்கிக் கொள்வார்கள். மேலும், பிரச்சினைகளை பெரிதாக்குவார்கள். இப்படிப்பட்ட மனம் அந்த உயர்ந்த செயலுக்கே பாதிப்பை உண்டாகும்.
ரோர்க் டாமினிக்கின் கண்களில் அடிபட்ட வலியை பார்த்தான். அவனோ மனதில் ஆடாமல், அசையாமல் திடமாக நின்று கொண்டிருக்கிறான். அவனை யாருடைய வார்த்தைகளும் தொடவேயில்லை. டாமினிக்கின் மனம் ரோர்க்குக்காக அழுதது. இந்த அழுகை, இந்த வலி அன்பின் பிரதிபலிப்பு இல்லை, பலஹீனத்தின் பிரதிபலிப்பு. அவளுக்குள் உள்ள காதலியின் வருத்தம். அவளால் தன் காதலனைப் பற்றி தரக்குறைவாக பேசுவதை சகிக்க முடியவில்லை. இது மனதின் பலஹீனம். ரோர்க் மனஉறுதி படைத்தவன். அதனால் தான், நீ உன் பலகீனத்தை வைத்துக்கொண்டிருக்கும் வரை நாம் ஒன்றாக இருக்க முடியாது என்கிறான்.
என்னை காயப் படுத்திவிட்டார்கள் என்று கண் கலங்குவதை விட்டுவிட்டு, நான் காயப் பட்டது என் பலஹீனத்தால் தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். காயப் பட்டுவிட்டால் பழி வாங்காமல் இருக்க முடியாது. மன்னிப்பு என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே சமாதானப் படுத்திக்கொள்ள செய்யும் முயற்சி. அடி பட்ட அந்த வினாடியே நாம் அவர்கள் நிலைக்கு இறங்கி விட்டோம். தோற்று விட்டோம். விழிப்புணர்வு இல்லாமல் தானாகவே அடி பட்டது, அதே போல் விழிப்புணர்வு இல்லாமல் தானாகவே பழி வாங்குதலும் நடக்கும். நம் வாழ்வே அடி படுதல் , பழி வாங்குதல் என்ற இரண்டின் தொடர் நிகழ்வு தான். நாம் பெரும்பாலான செயல்கள் பழிவாங்கும் அடிப்படையில் தான் செய்கிறோம். நாங்கள் ஏழையாய் இருந்த போது யாரும் மதிக்கவில்லை என்ற வலி, பணத்தை சம்பாதித்து அதை காலில் மிதிக்க வேண்டும் என்ற பழி வாங்கும் உணர்ச்சியை தூண்டியது. அக்காவுக்கு வசதியான வெளிநாட்டு கணவர் என்ற வலி, தங்கைக்கு தானும் அதைப் போல ஒரு கணவரை அடைய வேண்டும் என்ற உணர்ச்சியை தூண்டியது. அது இயல்பான உணர்வு அல்ல. பழி வாங்கும் உணர்வு.
பழி வாங்கினால் காயம் ஆறாது, மாறாக, அது காயத்தை பெரிதாக்கும், ஆழப்படுத்தும்.
மனதில் உயர்வுநிலை அடைய பெற்றவர்கள் கீழானவர்கள் நிந்தனைகளை பொருட்படுத்தக்கூடாது. நம்மை நிந்திக்க வேண்டுமென்றால் அதற்கும் ஒரு தகுதி வேண்டும். நம்மை விட உயர்ந்தவர்கள் நம்மை நிந்தித்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மை விட தாழ்ந்தவர்களின் நிந்தனைகளை பெரிதாக எடுத்துக்கொண்டு மனம் புண் பட்டோமென்றால், அது நாம் கற்ற கல்விக்கு, நமக்கு கற்பித்த குருவுக்கு செய்யும் துரோகமாகும்.
~பரமேஸ்வரி
பரம் அத்வைத்.

No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin