1. உன்னை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ மாயையே - மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வதும் ஒன்றுண்டோ மாயையே!
2. எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும் மாயையே - நீ
சித்தத் தெளிவென்னும் தீயின் முன் நிற்பாயோ மாயையே!
3. என்னை கெடுப்பதற்கு எண்ணமுற்றாய் கெட்ட மாயையே - நான்
உன்னை கெடுப்பது உறுதியென்றே உணர் மாயையே!
4. சாகத் துணியிற் சமுத்திரம் எம்மட்டு மாயையே - இந்தத்
தேகம் பொய்யென்றுணர் தீரரை என்செய்வாய்? மாயையே!
5. இருமை அழிந்த பின் எங்கிருப்பாய், அற்ப மாயையே! - தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ மாயையே !
6. என்னிச்சை கொண்டுனை எற்றி விட வல்லேன் மாயையே - இனி
உன்னிச்சை கொண்டனக் கொன்றும் வராது காண் மாயையே!
7. யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே - உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன் உன்னை - மாயையே!

No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin