Pages

Sunday, June 2, 2024

நிராலம்ப உபநிடதம் - நிறைவே எஞ்சியிருக்கும்

 நிறைவிலிருந்து நிறைவை நீக்கினால் நிறைவே எஞ்சியிருக்கும். 

இந்த பூமி எத்தனை பெரியது! வானில் எத்தனை கோடி நட்சத்திரங்கள்! எத்தனை பெரிய கடல், எத்தனை வகையான  மீன்கள்! எத்தனை  ஜீவராசிகள்!

இந்த பிரபஞ்சமே பிரமாண்டமாக தெரிகிறது.  எத்தனை கோடி வருடங்களாக எல்லாம் இருக்கிறதோ நமக்கு தெரியாது.  அதன் ஆரம்பமும் முடிவும் யாராலும் சொல்ல முடியாது.  ஆனால், நிச்சயமாக நாம் ஒன்று சொல்ல முடியும்.  நாம் காணும் யாவும் காலபோக்கில் இல்லாமல் போய்விடும்.  

இந்த இயற்கையில் எதுவும் நிறைவானது கிடையாது.  கூடுதலும் குறைதலும் அதன் இயல்பு.  

கணந்தோறும் பல்லாயிரக்கணக்கான விண்மீன்கள் எரிந்து ஒன்றுமில்லாமல் போகின்றன.  முற்காலத்தில் வாழ்ந்த எத்தனையோ உயிரினங்கள் இப்போது இல்லாமல் போய் விட்டன.  பல ஆறுகள் வற்றி விட்டன. சில மலைகள் பள்ளத்தாக்காகி விட்டன.  

நம்முடைய தாத்தா பாட்டி  கூட இப்போது இல்லை.  நான்கு வீடு வைத்திருந்தோம், இப்போது ஒன்று தான் இருக்கிறது. வங்கியில் பணமும் குறைந்து கொண்டே வருகிறது.  வயதாக ஆக,  நினைவுத்திறன் கூட குறைந்து விடுகிறது.  நம்முடைய அன்பே கூட காலப்போக்கில் மாறிவிடுகிறது.  நீங்கள் முன்பு போல் என் மேல் அன்பாக இல்லை என்ற குற்றச்சாட்டை  எல்லாரும் கேட்டிருப்போம்.  அவருக்கு புத்தி கெட்டு போச்சு, அதனால் தான் இப்படி பேசுகிறார் என்று சொல்வார்கள்.    

இங்கே ரிஷியோ நிறைவைப்  பற்றி பேசுகிறார்.  ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது இல்லையா? ஏனென்றால், நம்  மனதுக்கு தெரிந்ததெல்லாம் கணக்கு தான்.  ஏழு ரூபாயில் ஐந்து போனால் இரண்டு ரூபாய்  தான் மீதி இருக்கும். ஆனால், ரிஷி சொல்லும் கணக்கு வேறு மாதிரி அல்லவா இருக்கிறது!  நிறைவிலிருந்து நிறைவை நீக்கினாலும் நிறைவு மிஞ்சியிருக்குமா?  

 X - X = X 

இது எப்படி?  

வீட்டில் ஐம்பதாயிரம்  ரொக்கமும் இருபது பவுன் நகையும் வைத்திருந்தோம். ஒரு நாள் எப்படியோ அது களவு போய் விட்டது. போலீசில் புகார் கொடுத்தும்  மீட்க முடியவில்லை.  பத்திரமாக வைக்கத்தெரியாமல் போய் விட்டதே என்று வருத்தப்பட்டு என்ன பயன்? பணம் போனது போனது தான். 

கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். பணமும் நகையும் வைத்திருந்த போது அது இருக்கிறது என்று நமக்கு தெரிந்தது.  ஒரு நாள் அது காணாமல் போய் விட்ட பிறகு காணாமல் போய் விட்டது என்றும் தெரிந்தது.  இந்த சம்பவத்தால் எத்தனை உறவுகள் பரீட்சைக்கு உள்ளாயின , எப்படிப்பட்ட உளைச்சல்கள் ஏற்பட்டன, இவை அத்தனையும் பார்க்க முடிந்தது. பணம், நகை, மக்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கை யாவும் இழந்து விட்டது தெரிந்தது.  ஆனாலும், ஒன்று மட்டும் மாறவே இல்லை. கவனித்தீர்களா?  இருக்கும் போது இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது.  இல்லாத போது இல்லை என்றும் தெரிந்து  கொள்ள முடிந்தது.  தெரிந்து கொள்தல் மட்டும் மாறவே இல்லை! அறிவது என்பது முன்பும் இருந்தது, பின்பும் இருந்தது.   

இதே போல் தான், மௌனமும்.  வீட்டுக்குள் மெளனமாக இருந்தோம். கடைவீதியில் மெளனமாக நடந்தோம்.  கோவிலிலும் மெளனமாக உட்கார்ந்திருந்தோம்.  இடங்கள் வேண்டுமானால் மாறுபடலாம்.  சின்ன இடத்தில் சின்ன மௌனம், பெரிய இடத்தில் பெரிய மௌனம் என்று மௌனத்தை அளக்க முடியுமா என்ன?  

மௌனத்தில் சிறியது, பெரியது என்று கிடையாது.  மௌனம் குறைவில்லாதது.  

நமக்குள் உண்மை,  மௌனம், அன்பு, கருணை, நேர்மை, அறிவு போல் மாறாத ஒன்று மையமாக இருக்குமானால், நிறைவான வாழ்வு வாழலாம்.  

உங்கள் வாழ்வு எதை மையமாக வைத்து சுழன்று கொண்டிருக்கிறது? உங்கள் வாழ்வில் மகத்துவம் வாய்ந்ததாக எதை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? எதற்காக வாழ்வை அர்பணித்திருக்கிறீர்கள்? அதை  அளவிட முடியுமா? அது காலத்தால் அழியக்கூடியதா?  உங்களுக்கே காரணம் புரிந்து விடும். 

"பூர்ணமத பூர்ணமிதம் பூர்னாத் பூர்ணமுதச்சதே 
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ண மேவா வசிஷ்யதே"

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

மூன்று முறை அமைதி அமைதி அமைதி என்று உச்சரித்து இந்த பாடல் நிறைவடைகிறது.  அது என்ன மூன்று முறை அமைதி?  அதை நாம்  அடுத்த வகுப்பில் பார்க்கலாம். 






 

No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin