நிறைவிலிருந்து நிறைவை நீக்கினால் நிறைவே எஞ்சியிருக்கும்.
இந்த பூமி எத்தனை பெரியது! வானில் எத்தனை கோடி நட்சத்திரங்கள்! எத்தனை பெரிய கடல், எத்தனை வகையான மீன்கள்! எத்தனை ஜீவராசிகள்!
இந்த பிரபஞ்சமே பிரமாண்டமாக தெரிகிறது. எத்தனை கோடி வருடங்களாக எல்லாம் இருக்கிறதோ நமக்கு தெரியாது. அதன் ஆரம்பமும் முடிவும் யாராலும் சொல்ல முடியாது. ஆனால், நிச்சயமாக நாம் ஒன்று சொல்ல முடியும். நாம் காணும் யாவும் காலபோக்கில் இல்லாமல் போய்விடும்.
இந்த இயற்கையில் எதுவும் நிறைவானது கிடையாது. கூடுதலும் குறைதலும் அதன் இயல்பு.
கணந்தோறும் பல்லாயிரக்கணக்கான விண்மீன்கள் எரிந்து ஒன்றுமில்லாமல் போகின்றன. முற்காலத்தில் வாழ்ந்த எத்தனையோ உயிரினங்கள் இப்போது இல்லாமல் போய் விட்டன. பல ஆறுகள் வற்றி விட்டன. சில மலைகள் பள்ளத்தாக்காகி விட்டன.
நம்முடைய தாத்தா பாட்டி கூட இப்போது இல்லை. நான்கு வீடு வைத்திருந்தோம், இப்போது ஒன்று தான் இருக்கிறது. வங்கியில் பணமும் குறைந்து கொண்டே வருகிறது. வயதாக ஆக, நினைவுத்திறன் கூட குறைந்து விடுகிறது. நம்முடைய அன்பே கூட காலப்போக்கில் மாறிவிடுகிறது. நீங்கள் முன்பு போல் என் மேல் அன்பாக இல்லை என்ற குற்றச்சாட்டை எல்லாரும் கேட்டிருப்போம். அவருக்கு புத்தி கெட்டு போச்சு, அதனால் தான் இப்படி பேசுகிறார் என்று சொல்வார்கள்.
இங்கே ரிஷியோ நிறைவைப் பற்றி பேசுகிறார். ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது இல்லையா? ஏனென்றால், நம் மனதுக்கு தெரிந்ததெல்லாம் கணக்கு தான். ஏழு ரூபாயில் ஐந்து போனால் இரண்டு ரூபாய் தான் மீதி இருக்கும். ஆனால், ரிஷி சொல்லும் கணக்கு வேறு மாதிரி அல்லவா இருக்கிறது! நிறைவிலிருந்து நிறைவை நீக்கினாலும் நிறைவு மிஞ்சியிருக்குமா?
X - X = X
இது எப்படி?
வீட்டில் ஐம்பதாயிரம் ரொக்கமும் இருபது பவுன் நகையும் வைத்திருந்தோம். ஒரு நாள் எப்படியோ அது களவு போய் விட்டது. போலீசில் புகார் கொடுத்தும் மீட்க முடியவில்லை. பத்திரமாக வைக்கத்தெரியாமல் போய் விட்டதே என்று வருத்தப்பட்டு என்ன பயன்? பணம் போனது போனது தான்.
No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin