Pages

Wednesday, September 25, 2024

ராம நாமம் கசக்கிறது, காசும் பணமும் இனிக்கிறது.


राम नाम कड़वा लगे, मीठे लगे दाम। 

दुविधा में दोनों गए, माया मिली न राम।।

 "ராம நாமம் கசக்கிறது, காசும் பணமும் இனிக்கிறது.

தடுமாற்றத்தில் தவற விட்டது, ராமன் மாயை இரண்டுமே!"

 ராமன் என்று கபீர் ஐயா சொல்வது, தசரதர் மகன் சீதாவின் கணவன் ராமன் பற்றி அல்ல.  ராமன் என்பது உண்மையை, சத்தியத்தை குறிக்கும் சொல்.  பரம்பொருளை அவர் ராமன் என்று அவர் அழைப்பார்.  ராம நாமம் கசக்கிறது என்றால் உண்மை கசக்கிறது என்று பொருள்.  

யாராவது, நம்மிடம் அமைதி வேண்டுமா அல்லது காசு பணம் வேண்டுமா என்று கேட்டால், எல்லோரும் காசு பணத்தை தான் தேர்ந்தெடுப்போம்.  அமைதி யாருக்கு வேண்டும்?  சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று தான் எல்லாருக்கும் விருப்பம். அமைதியை தேர்ந்தெடுப்பவர்கள் மிகமிக குறைவு. ஆனால், உண்மையில், மனது அமைதியை தான் தேடிக்கொண்டிருக்கிறது.  அந்த அமைதியை அடைவதற்காகவே காலம் காலமாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அது எதையாவது செய்தால், அதன் மூலம் அதற்கு ஒரு அமைதி, திருப்தி கிடைக்கவேண்டும். . ஒரு பொருளை வாங்கினால் கூட, அந்த பொருள் மனநிம்மதியை தர வேண்டும். மனிதன் கொலை செய்வது கூட, அவன் செத்தால் எனக்கு நிம்மதி என்று நினைத்து தான்.  

மனதுக்கு அமைதி மேல் அப்படியொரு வேட்கை, ஈர்ப்பு, காதல்.  அந்த அமைதிக்கு கபீர் இட்ட பெயர் தான் ராமன்.  நான் தாகம் என்றால் ராமன் தண்ணீர். நான் ஆறு என்றால், ராமன் கடல். நான் மேகம் என்றால், ராமன் வானம். மனம்  ராமனை விட்டு வேறு எங்கு செல்ல முடியும்?  

மனதுக்கு ராமன் மேல் உள்ளது காதலாக இருக்கலாம், ஆனால்,  அதன் ஆசையோ உலகின் மீது. உலக சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை. .  ராமனோ உலகிற்கு அப்பாற்பட்டவன், தூய்மையான உள்ளமே அவன் இருப்பிடம். ஆசையும், அமைதியும் சேர்ந்து இருக்க முடியாது.  இது தான் மனதின் துவந்தம்.  போராட்டம்.  இந்தப்போராட்டத்தில், பாவம், அது  ராமனையும் தவற விட்டு விடுகிறது, மாயையையும் தவற விட்டு விடுகிறது.  

மாயை என்பது பொய் சுகம்.  ராமனோ  பேரானந்தம். பேரானந்தமும் கிடைக்கவில்லை,  பொய்யான இன்பமும் கிடைக்கவில்லை.  மனது ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது, போராடிக்கொண்டே இருக்கிறது. இந்த போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்? இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான்.  மனிதர்களுக்கு கிடைத்த மாபெரும் சக்தி, தேர்வு செய்யும் சக்தி.  அதை சரியாக பயன்படுத்தினால் இந்த போராட்டத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.   உண்மையா, பொய்யா?  ராமனா, மாயையா?  அமைதியா, ஆசையா? முடிவு செய்து விடுங்கள்.

No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin